Author: ஜோசப் பால்ராஜ்
•1:25 PM
மின் வெட்டால் தமிழகம் மட்டுமின்றி, நாடே தத்தளிக்கும் இவ்வேளையில் ஒரு கிராமம் தன் மின் தேவைக்கு பிறரை சார்ந்திருக்காமல் சாதனை படைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு பஞ்சாயத்துதான் ஓடந்துறை. இந்த பஞ்சாயத்துக்குட்பட்டு மொத்தம் 11 கிராமங்கள். அத்தனை ஊர்களுக்கும் குடிநீர் எந்த வித பிரச்சனையுமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

மரத்துண்டுகளை எரிச்சு, அந்தப் புகையை தண்ணீருடன் கலந்து வடிகட்டி கியாஸ் தயா ரிக்கும் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' (Biomass Gasifier Gas) யூனிட்டை அமைச்சு, அதுல கிடைக்கிற கியாஸ் மூலமா 9 ஹெச்.பி. மோட்டார் ஒண்ணு கரன்ட் இல்லாம இயக்கப்படுகிறது. அதை கொண்டு ஓடந்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல், தெருவிளக்குகள் அனைத்தையும் சூரிய ஒளி விளக்காக அமைத்துள்ளார்கள். இதனால் இரவுகளில் தடையில்லாமல் தெரு விளக்குகள் ஒளிர்ந்து கொண்டுள்ளன.

இந்த‌ கிராம‌ம் காற்றாலை மின் உற்ப‌த்திக்கு ஏதுவான‌ இட‌த்தில் அமைந்திருப்ப‌தால் காற்றாலை ஒன்றையும் சொந்த‌மாக‌ நிறுவியுள்ளார்க‌ள். இத‌ன் மூல‌ம் வ‌ருட‌த்திற்கு ஏழே முக்கால் லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. தங்கள் பஞ்சாயத்தின் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்று சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு காற்றாலைக்காக வாங்கிய வங்கிக் கடனை அடைக்கிறார்கள். கடன் முழுவதும் அடைக்கப்பட்டுவிட்டால் அந்த ஊராட்சி சுய வருமானமுள்ள ஊராட்சியாகிவிடும்.

அதோடு மட்டுமின்றி எல்லா வீடுகளிலும் சூரிய ஓளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பையும், சிறிய காற்றாலை ஒன்றையும் அமைத்து ( Solar and Wind hybrid system )அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வீடுகளின் உபயோகத்திற்கு பயன்படுத்தும் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த இருக்கின்றார்களாம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பச் செலவு அதிகம் என்பதும், இது ஜெர்மன் போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்படும் திட்டம் என்பதும், ஜெர்மனியில் இருந்து மிக குறைந்த விலையில் சோலார் பிளேட்டுகளை வாங்க முடியும் என்பதும் அந்த ஊராட்சித் தலைவி லிங்கம்மாளுக்கு நன்கு தெரிந்து இருக்கின்றது. ஆனால் நம் மின்சார துறை அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ இது தெரியவில்லை.

மரபு சாரா எரிசக்தி உற்பத்திக்கு மத்திய அரசு மானியங்கள் மட்டும் வழங்குகின்றது. ஆனால் அதில் உள்ள வாய்ப்புகளை பெரிய அளவில் விளம்பரம் செய்வதில்லை. இது போல் ஆர்வமாக பல நல்ல திட்டங்களை செய்யும் ஓடந்துறை ஊராட்சிக்கு கட்டாயம் அரசு உதவிகளைத் தாராளமாகச் செய்து கொடுத்தால் அவர்கள் கட்டாயம் அவர்கள் முழு சுயசார்பு ஊராட்சியாக முன்னேறிவிடுவார்கள்.

சூரிய ஒளி விளக்குகளை அமைக்க அரசு தாராளமாய் மானியங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏன் எல்லா கிராமங்களிலும், நகர்புறங்களிலும் உள்ள தெரு விளக்குகளை சூரிய சக்தியில் செயல்படும் விளக்குகளாக மாற்றக் கூடாது? இதை ஏன் அரசே முன் நின்று செய்யக் கூடாது ? இதனால் பெருமளவில் மின் உபயோகம் குறைவதோடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெருமளவில் மின் கட்டணம் குறையும். அதேப் போல் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' நுட்பத்தையும் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தலாமே ? எல்லா ஊராட்சிகளுக்கும் இதை பரிந்துரைக்கலாம் அல்லவா?

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் அவர்களே அவர்களது மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவிகள் செய்து கொடுத்தால் விவசாயிகளும் மின்வெட்டால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடுவார்கள், அதோடு அரசுக்கும் மின் செலவு குறையும். பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் நீர் மூழ்கி மோட்டார்களை இயக்க முடியுமா எனத் தெரியவில்லை. அப்படி முடியாத பட்சத்தில் நீர் மூழ்கியல்லாத அனைத்து மோட்டார்களுக்கும் இம் முறையை பயன்படுத்தச் செய்யலாம்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் விளக்குகள் கோடை காலங்களில் 100 சதவீதம் சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம் பெற்றுவிடும். ஆனால் மழைக்காலங்களிலும் வெயில் குறைவாக இருக்கும் காலங்களிலும் மின் உற்பத்திக் குறைவாகவே இருக்கும் என்பதால், தற்போது இருக்கும் மின்சாரத்தை அச்சமயங்களில் பயன் படுத்திக்கொள்ளும் வகையில் கவனமாக திட்டமிட்டு செயல்படுத்தினால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தெரு விளக்குகளை இயக்க முடியும். கோடை காலங்களில் நீர் மின் உற்பத்தி குறைவால் ஏற்படும் பற்றாகுறையை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொண்டு சமாளிக்கலாம். அதே போல் மழைக்காலங்களில் நீர் மின் உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால் சூரிய ஒளி மின்சாரத்தில் ஏற்படும் பற்றாகுறையை சரி செய்யலாம்.

அதோட இதெல்லாம் சுற்றுப்புறச் சூழலை கெடுக்காத நல்லத் திட்டங்களா வேற இருக்கு. ஓடந்துறையின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் திரு.சண்முகம், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவரான அவரது மனைவி திருமதி. லிங்கமாள் ஆகியோரிடமாவது போய் நம் மின் துறை அமைச்சர் ஆற்காட்டார் பாடம் கற்றுக் கொண்டுவந்தால் மிக நல்லது.

எல்லா ஊர்களும் காற்றாலை மின் உற்பத்தியில் இறங்க இயலாது. ஆனால் சூரிய ஒளி மற்றும் பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறைகளை எல்லோரும் உபயோகிக்க முடியும். இவை எல்லாமே மிக எளிதாக செயல்படுத்த முடிகின்ற திட்டங்கள் தான். அதை நாம் செய்து ஒரு ஊரில் குறைந்தது 100 யூனிட் மின்சாரத்தை சேமித்தாலும் ஒரு மாவட்டத்தில் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்க இயலும்? அது எவ்வளவு உபயோகமாக இருக்கும் ? சும்மா அணு ஒப்பந்தம் நிறைவேறியவுடன் எல்லாம் சரியாயிடும்னு கதை சொல்லிக்கிட்டு இருக்காம சின்ன சின்னதா இது மாதிரி திட்டங்கள நிறைவேத்துனா பலன் பெரிய அளவுல இருக்கும்ல?

இது போன்ற‌ திட்டங்களில் எல்லா ஊர்களிலும் உள்ள ஊராட்சித் தலைவர்கள் சற்று கவனம் செலுத்தினாலாவது நாம் ஆற்காட்டாரை திட்டாமல் நம்ம வேலைய நாமலே பார்த்துக்கிட்டு போகலாம். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்று காந்தியும் சொன்னாரு. அப்துல் கலாமும் சொல்லிக்கிட்டு இருக்காரு. எல்லா கிராமங்களும் இப்படி தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு வந்துட்டா எப்டியிருக்கும் ? நல்ல கற்பனையா இப்போதைக்கு இருக்கிறது, நாலு பேரு மனசு வைச்சா சீக்கிரமே நடக்கும். நடக்கணும்.

பின் குறிப்பு: 14.09.2008 தேதியிட்ட ஜீனியர் விகடனில் வெளிவந்த செய்தியிலிருந்து தெரிந்து கொண்டதை வைத்து தான் நான் இப்பதிவை எழுதியுள்ளேன். செய்தி மூலத்திற்கு ஜீ.வி க்கு எனது நன்றிகள். Udanz
This entry was posted on 1:25 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

24 comments:

On Wed Sep 10, 03:11:00 PM GMT+8 , கார்க்கிபவா said...

ஆற்காட்டாருக்கும் மின்தடையை பற்றியும் பல பதிவர்கள் எழுதியதில் இது ஆக சிற‌ந்தது.. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. நானும் என் வீட்டில் சோலார் வாட்டர் ஹீட்டர் வாங்க வேண்டும்... நம்மால் முடிந்தது.. கை கொடுங்க சகா..

 
On Wed Sep 10, 03:27:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

நல்ல கருத்துக்கள், இது எத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்குகிறது என்பதை அறிந்து கொண்டுதான் தமிழகம் முழுவது செயல்படுத்த முடிவெடுக்க வேண்டும், இல்லை என்றால் வீராணம் குழாய்கள் போல் ஆகிவிடும்.

 
On Wed Sep 10, 03:37:00 PM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

நல்ல தகவல் அண்ணே...

 
On Wed Sep 10, 03:49:00 PM GMT+8 , வால்பையன் said...

இதுக்கெல்லாம் நம்ம அரசியல்வாதிகளுக்கு புத்தி வந்துரும்னு நினச்சிங்களா!
மக்களுக்கு அத்தியாவிசய தேவையென்றாலும் அவங்களுக்கு பெட்டி கொடுத்தால் தான் எந்த விசயமும் பாசாகும்.

 
On Wed Sep 10, 05:20:00 PM GMT+8 , Anonymous said...

உபயோகமான பதிவு ஜோ. நானும் வீடு கட்டும் போது, சோலார் வாட்டர் ஹீட்டரும் சோலார் விளக்குகளும் பொருத்த வேண்டும் என்றிருக்கிறேன்.

இப்பொழுது வீடுகளுக்கு பயன் தரும் சிறு காற்றாலைகளும் வந்து விட்டது. விவரங்கள் சேகரிக்க வேண்டும். தெரிந்தால் சொல்லுங்கள்.

 
On Wed Sep 10, 10:38:00 PM GMT+8 , Anonymous said...

அந்த ஊர்களை சேர்ந்த பதிவர்கள் யாரவது மேலும் விபரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். அமெரிக்காவில் இதுபோன்ர திட்டங்களை பசுமை ஆர்வலர்கள் நடத்தி வருகிறார்கள் இவர்களுக்கு அரசு எந்த உதவியும் செய்வதுஇல்லை.இன்றைய சுழலுக்கு ஏற்ற திட்டங்கள். பதிவிட்ட உங்களூக்கும் பாரட்டுக்கள்



லக்ஷ்

 
On Wed Sep 10, 11:26:00 PM GMT+8 , Mahesh said...

ஆற்காட்டாருக்கு கோபாலபுரம் தாண்டி ஒரு ஊரும் தெரியாதுங்க.... ஓடந்துறையாவது... கூடங்குளமாவது... அதே ஊராட்சியில முதல்வருக்கு பாராட்டு விழான்னு சொல்லுங்க... மொத ஆளா வந்து நிப்பாரு... பத்திக்கிட்டு வருது..

 
On Thu Sep 11, 12:23:00 AM GMT+8 , We The People said...

அருமை. இதில் சில்லரை தேறுமானால் நம் அரசியல்வாதிகள் ஒரு கை பார்த்திருப்பார்கள், வருமானம் இல்லை அதனால் கண்டுக்க மாட்டாங்க.

நல்ல ஒரு பதிவு. மக்களாக ஏதாவது செய்தால் தான் உண்டு :(((

 
On Thu Sep 11, 01:35:00 AM GMT+8 , Sen said...

Good one...
actually last week we were discussing abt the same among our frnds.. this post throws some light... Kudos..

Paul.. its a mere waste to make Mr. Vettisamy alias Mr.Veerasamy to learn frm the these people.. anyways, he's not going to understand..
not only him, any politician won't be able to understand the concept / importance.. (rather to say, they don't need to understand) tell them, they can get a good amount from this.. suddenly one will fly to Germany to know the Technology.. one will fly to Japan to get the Technicians.. one will fly to Malaysia to get the investments... who knows, one single person itself, will fly to all these places and can earn a good amount.. (enjoying the vacation with family in the foreign locations, is a side dish for them.. )

i feel, the NGOs and other social welfare Organizations can take this as a project and work with the Panjayath boards.. (we'll discuss abt this while chating)

as Laksh said, someone frm this area shud come forward to explain more abt this project.. it wud be a real help..

 
On Thu Sep 11, 10:07:00 AM GMT+8 , முகவை மைந்தன் said...

//அந்த ஊராட்சி சுய வருமானமுள்ள ஊராட்சியாகிவிடும்.//

நல்ல செய்தி.

//நானும் என் வீட்டில் சோலார் வாட்டர் ஹீட்டர் வாங்க வேண்டும்//

//நானும் வீடு கட்டும் போது, சோலார் வாட்டர் ஹீட்டரும் சோலார் விளக்குகளும் பொருத்த வேண்டும் என்றிருக்கிறேன்.//

உருப்படியான இடுகை என்பதற்கு சான்றாக நானும் இந்த உறுதிகளை வழி மொழிகிறேன். இது குறித்து மேலும் விவாதிக்கணும். கூட்டத்தை கூட்டலாமே!

பின் குறிப்பு உங்கள் நேர்மைக்கு சான்று. வாழ்த்துகள்.

 
On Thu Sep 11, 10:33:00 AM GMT+8 , Anonymous said...

This is no commercial endorsement.
But, this is a product I know in India.

http://www.tatabpsolar.com/prod_gallery.html

I'm actually looking for an option to install solar panels; store its power in battery; use it as primary source of power; to have the TNEB supply as the supplementary feeder to this connection. Not sure, such a mechansim/product is available in the market.

 
On Thu Sep 11, 11:20:00 AM GMT+8 , Anonymous said...

புதிய விடயம்..

 
On Thu Sep 11, 04:20:00 PM GMT+8 , ERODE KAIPULLAI (a) ERODE MAPILLAI said...

VERY NICE AND VERY USEFUL THINKING MATTER TO ALL.

PISSASU2008

 
On Thu Sep 11, 10:21:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

இலங்கையில் இருந்து தான் காற்று வருகிறது என்று அதற்கு யாரும் அணை போடாமல் இருக்கனும்!!
ஜோசப்...இது போல் பல பற்றாக்குறை விஷயங்கள் இனிமேல் ஒவ்வொன்றாக வரக்கூடும்.இருக்கிற ஆட்சியை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை, இனி ஆகவேண்டிய காரியங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் வரப்போகும் ஆண்டுகளில் இந்த பிரச்சனைகள் தலைதூக்காமல் இருக்ககூடும்.

 
On Fri Sep 12, 03:14:00 AM GMT+8 , Thamiz Priyan said...

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது கூட்டு முயற்சியாகத் தான் இருக்க முடியும். இதில் பெரும் பண முதலைகள் தான் ஈடுபட முடியும். அரசு கூட இதில் ஈடுபடுவது இல்லை.சிறு 0.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் காற்றாடி கூட பல லட்சங்களைத் தாண்டும். இழப்பு ஏற்படும் போது அதை தாங்கும் ஆற்றலும் வேண்டும். இதனால் அரசு இதில் செல்லாமல், காற்றலைகளில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குகின்றது.

 
On Fri Sep 12, 03:16:00 AM GMT+8 , Thamiz Priyan said...

இரண்டாவதான பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் என்பதை ஊக்குவிப்பது சரியான முறையாகாது. ஏனெனில் அதற்கு அதிகப்படியான எரிபொருள் தேவைப்படும். பல்நோக்குத் திட்டத்தில் இதை சேர்த்தால் பசுமையான பகுதிகள் சீக்கிரமே அழிய வாய்ப்பு ஏற்ப்பட்டு விடும்... :)

 
On Fri Sep 12, 03:20:00 AM GMT+8 , Thamiz Priyan said...

சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை தயாரிப்பது அதிக பொருட் செலவுகளைக் கொண்டது... சூரியக் கதிர்களை கிரகிக்கும் அட்டைகள், கன்வர்ட்டர்கள், பின்பு அதன் பராமரிப்பு செலவுகள் என அதிகமாக இருக்கும். சிறு விளக்குகளுக்கு அது உபயோகமானது.இதை இந்திய நடுத்தர வர்க்கத்தினரால் உபயோகிக்க இயலாது. ஆனால் மோட்டார்கள், ஆலைகள், போன்றவைகளுக்கு பயன்படுத்துவது கடினம்.

 
On Fri Sep 12, 03:26:00 AM GMT+8 , Thamiz Priyan said...

தற்போதைய சூழலில் இந்தியா போன்ற நாடுகளில் அணு மின்சாரத்தின் உற்பத்தியை அதிகமாக்க வேண்டும். இரண்டாவது நீர்த்தேக்கங்கள் மூலம் வெளியேறும் நீர் முழுவதையும் ஜெனரேட்டர்கள் வைத்து மின்சாரத்தை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க தோதுவான இடங்களில் காற்றாலைகளை அதிகம் நிறுவ வேண்டும்... :)
இந்த மூன்று மட்டுமே இப்போதைக்கு சாத்தியமான முறைகள்... இவைகளை இப்போது ஆரம்பித்தால் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன் மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இயலும்... இது ஆற்காட்டார் என்ற ஒரு மனிதனின் வேலை அல்ல... அவர் மின்சாரத் துறையை நிர்வகிக்கின்றவர். உற்பத்தியை பெருக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும், அறிவியல் அறிஞர்களும் இணைந்து உருவாக்க வேண்டும்... இதுவரை உருவாக்கப்படவில்லை... உருவாகுமா என்றும் தெரியாது... அது ஆற்காராடாக இருந்தாலும், கலைஞராக இருந்தாலும், ஜெ.வாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான்.. :)

 
On Sun Sep 14, 09:43:00 PM GMT+8 , Unknown said...

தாமதமாக நான் இதை படித்தேன் . திரு.தமிழ்ப்ரியன் அவர்களின் கருத்து நான் சொல்ல நினைத்ததை தெளிவாக தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களில் பல புதிய பெருந்திட்டங்கள் நிறைவேறி வருகிற வேளையில் நெடுநோக்கு திட்டங்கள் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். சிறிய அளவு சூரிய , காற்று, உயிர் எரிசக்தி திட்டங்கள் ஓரிரு விளக்கு எரிய உதவுமே தவிர இதனைக்கொண்டு விவசாய தேவை நிறைவு பெறாது. மிக்கியமாக இது எந்த மாநில மின் துறை அமைச்சினால் மட்டும் நிறைவு செய்யும் வேலை இல்லை. மத்திய அரசின் நீண்ட கால தொலை நோக்கு திட்டங்கள் மட்டுமே தீர்வு.

ஜோசப் செல்வன்

 
On Mon Sep 15, 02:21:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

தமிழ் பிரியன்,

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. ஆரம்பத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க கேரள மாநில அரசு திட்டமிட்டது, ஆனால் அவர்கள் அதை செயல்படுத்தவில்லை. எனவே அத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. மேலும் நான் எனது பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் ஒரு கிராம ஊராட்ச்சியே சொந்தமாக ஒரு காற்றாலையை நிறுவியுள்ளது.

பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் திட்டத்தை செயல்படுத்த மிகப் பெரும் மரங்களை வெட்டி ஒன்றும் எரிக்க வேண்டியதில்லை. தஞ்சை பெறியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தானகவே வளர்வதும், விறகாக பயன்படுத்தப்படுவதுமான வேலிக் கருவை குச்சிகளைக் கொண்டுதான் பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் மின்சாரம் தயாரித்தார்கள். மர ஆலைகளில் கிடைக்கும் மரத் தூள், துண்டுகளைக் கொண்டே இதை செயல்படுத்தலாம். சிறு சிறு விசயங்களாகத் தெரியும் இவை எல்லாம் பெரிய அளவில் நமக்கு கட்டாயம் பலன் அளிக்கும்.

 
On Mon Sep 15, 02:25:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

சூரிய ஒளி விளக்குகள் தெருவிளக்குகளுக்கு பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. தெருவிளக்குகள் எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன என்பதை பார்க்கும் போது, பெருமளவு தெருவிளக்குகளை சூரிய ஒளி விளக்குகளாக மாற்றுவதால் நமக்கு நன்மையே கிடைக்கும்.

ஏற்கனவே மத்திய அரசு சூரிய ஒளி விளக்குகள் அமைக்க ஊராட்சிகளுக்கு மானியத்துடன் கூடிய நிதியுதவியை அளிக்கிறது.

நீங்கள் சொல்வது போல் அணு மின் சக்தி , நீர் மின் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான் சொல்லியுள்ள தீர்வுகள் தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்டால் கூட போதும், பெருமளவில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

 
On Mon Sep 15, 02:52:00 PM GMT+8 , Anonymous said...

//சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை தயாரிப்பது அதிக பொருட் செலவுகளைக் கொண்டது... சூரியக் கதிர்களை கிரகிக்கும் அட்டைகள், கன்வர்ட்டர்கள், பின்பு அதன் பராமரிப்பு செலவுகள் என அதிகமாக இருக்கும். சிறு விளக்குகளுக்கு அது உபயோகமானது.இதை இந்திய நடுத்தர வர்க்கத்தினரால் உபயோகிக்க இயலாது. ஆனால் மோட்டார்கள், ஆலைகள், போன்றவைகளுக்கு பயன்படுத்துவது கடினம்.// - Yes it is expensive to use Solar cells to prodeuce electricity but it is changing now. The unit price will go down further when people start to use in a mass same as cell phones. Initially the cell phone price was sky high and only high class people can afford to have it but see the trend now.
I believe in Europe the domestic supply is provided by Dual source (one is normal electricity and the other with Solar power)and govt is encouraging the public to use solar cells by giving them subsidies. Here in India we don't have any system to do that and the politicains are useless and for people / country like us democracy won't work and unfortunately we don't have any leaders who can bring us forward.

 
On Mon Sep 15, 03:20:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

முதல் முறையாக எனக்கு பின்னூட்டமிட்டுள்ள என் அண்ணண் ஜோசப் செல்வனுக்கு நன்றிகள்.

நான் சொல்லியுள்ளது என்னவென்றால் ஓரிரு விளக்குகள் என நீங்கள் சொல்லும் இடங்களில் எல்லாம் சூரிய மின் விளக்குகளை எரிய விடுங்கள்.

சூரிய விளக்குகளை , சாதாரண மின் இணைப்பும் கொடுத்து அமைத்தால் சூரிய ஒளி இல்லாத நாட்களிலும் விளக்குகள் எந்த பிரச்சனையும் இல்லாது எரியும். சூரிய ஒளி மிகுந்த கோடை காலங்களில் முழு அளவு மின்சாரமும் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும், சூரிய ஒளி குறைவாக உள்ள குளிர் காலங்களில் 50% சூரிய ஒளி மின்சாரமும், 50% சாதாரண மின்சாரமும் பயன்படுத்தப்படும். மழைக்காலங்களில் சூரிய ஒளி மின்சாரம் கிடைக்காத போது மொத்தமாக சாதாரண மின்சாரம் பயன்படுத்தப்படும். எப்படி இருப்பினும் நம்மால் சில விளக்குகளுக்கு ஆகும் மின்சாரத்தை சேமிக்க இயலும் என்பதே எனது கருத்து.

மேம்படுத்தப்பட்ட சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தகடுகள் தற்போது சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மிகக் குறைந்த பரமாரிப்பு அல்லது பரமரிப்பே தேவையில்லாதவைகளாக அவை கிடைக்கின்றன. மேலும் மானிய உதவிகள் கிடைக்கும் போது கிராமங்களில் முடிந்த அளவு இவற்றைப் பயன்படுத்தலாம் என்பதே என் கருத்து.

 
On Sat Sep 27, 12:15:00 AM GMT+8 , Anonymous said...

அரசும் இதனை ஆக்கப்பூர்வமாக,நிறை,குறைகளை ஆராய்ந்தால் கண்டிப்பாக பலனளிக்கும் என்பதே என் கருத்து.ஒரு ஊராட்சியால் முடியும் போது அரசால் முடியாதா?தமிழக அரசின் தலைமைச் செயலாளரது மின்னஞ்சல் முகவரி தாருங்கள்.இதை வலியுறுத்தி அனைவரும் அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க