Author: ஜோசப் பால்ராஜ்
•10:16 PM
வசூல்ராஜா MBBS திரைப்படத்தில் பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ஒருவரை வைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். அப்போது பாடம் எடுக்கும் மருத்துவ ஆசிரியர் சொல்வார், இது போன்ற கேஸ்கள் எல்லாம் நாட்டுக்கு வேஸ்ட் அப்டின்னு.

அதே கதாப்பாத்திரத்தைப் போலவே ஒரு நபர் உண்மையாகவே இருந்தால், அதுவும் 36 ஆண்டுகளாக மும்பை King Edward Memorial Hospital (KEM)ல் உள்ள ஒரு அறையிலேயே கண்கள் தெரியாது, சுய உணர்வின்றி, ஒரு கட்டிலில் படுக்கையிலேயே காலம் கடத்தி வருகிறார் என்பதை நீங்கள் அறிந்தால் உங்கள் மன உணர்சிகள் எப்படி இருக்கும்?

எந்த மருத்துவமனையில் தற்போது காலத்தை கடத்திவருகிறாரோ அதே மருத்துவமனையில் செவிலியராக பணிக்கு சேர்ந்து மிகத் துடிப்பாக தனது பணியை செய்த Aruna Shanbaug எனும் பெண்மணி தான் அந்த கோமா நோயாளி. அவரது இந்த நிலைக்கு காரணம் என்ன தெரியுமா? நேர்மை

1973 ஆம் ஆண்டு அருணா பணியிலிருந்த வார்டில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றிய சோகன்லால் வால்மிகி என்பவன், வார்டில் செய்த திருட்டு வேலைகளை கண்டித்ததாலும், அவரைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தமையாலும் வெறி கொண்ட அந்த பொறுக்கி, அருணாவை பாலியல் பலாத்காரப்படுத்தி, நாய் கட்டும் சங்கிலியால் அவரது கழுத்தை நெரித்தமையால் அவரது மூளைக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் குழல்கள் நெரிக்கப்பட்டு அவரது கண் பார்வை பறிபோய், நரம்புகளில் ஏற்பட்ட கோளாறுகளால் கை, கால்கள் இழுத்து, சுய நினைவை இழந்து , தான் விரும்பிப் பணியாற்றிய மருத்துவமனையிலேயே 36 ஆண்டுகளாய், ஓரே அறைக்குள் மிக மோசமான நிலையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் அறை ஒரு நாளைக்கு 5 முறை திறக்கப்படுமாம். கூழாக்கப்பட்ட உணவுகளை அவருக்கு கொடுத்து வருகின்றார்கள். மருத்துவர்கள் இனி எதுவும் செய்ய இயலாது என கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த பொறுக்கியின் மேல் திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் மட்டுமே தொடுக்கப்பட்டு அதிலும் 6 ஆண்டுகள் சிறை தண்டணை மட்டுமே பெற்று தற்போது விடுதலையாகி வெளியில் இருக்கிறான். பாலியல் பலாத்காரத்திற்கு வழக்கு தொடுக்கப்படவில்லை. ( அப்படியே வழக்கு தொடர்ந்திருந்தாலும் 10 ஆண்டுகள் தான் தண்டணையாம்). ஒரு திருட்டு பொறுக்கிக்கு 6 ஆண்டு தான் தண்டணை. ஆனால் நேர்மையாய் இருந்த ஒரே காரணத்திற்காக அருணாவிற்கு கிடைத்தது 36 ஆண்டுகள் நரக வாழ்க்கை.

பிங்கி எனும் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதிய பின்னர் தான் அருணாவைப் பற்றியே வெளியில் தெரிந்தது. இப்போதும் அந்த எழுத்தாளர் தான் உச்ச நீதிமன்றத்தில் அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் வலை உலகில் பல விவாதங்கள் சூடுபறக்கின்றன. இப்போது இங்கே விவாதிப்போம் .

வாழ்வு ஒரு தண்டணையாகும் போது மரணம் தான் விடுதலை என கருணை கொலை செய்ய அனுமதிக்கலாமா? அல்லது ஆண்டவன் கொடுத்த உயிரை எடுக்கும் உரிமை நமக்கில்லை என்று அவரை விட்டுவிடலாமா?

என்ன தீர்ப்பு வழங்க இருக்கிறது நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றம் என தெரியவில்லை. நீங்கள் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள் என சொல்லுங்கள்.

ருச்சிகா - இவரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி தான். ஆனால் இவரது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஹரியான மாநிலத்தின் காவல் துறை தலைவராக (DGP) இருந்த S.P.S. ரத்தோர்.

1990 ஆம் ஆண்டு 14 வயதே ஆனா டென்னிஸ் வீராங்கனையான ருச்சிக்காவை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய இந்த காவல்துறை அதிகாரியின் மீது ருச்சிகா புகார் அளித்தமையால் அவரும் அவர் குடும்பமும் அடைந்த வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவரும் அவரது சகோதரரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்கள், அவரது சகோதரர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டார். குடும்பமே கடுமையான வேதனைகளை அனுபவித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக 3 ஆண்டுகள் போரடி அலுத்துப் போன அந்தச் சின்னப் பெண், நமது சட்டங்களினால் எந்தப் பாதுகாப்பையும் அடைய இயலாது, எந்த பரிகாரத்தையும் பெற இயலாது, அதிகாரவர்கத்தை எதிர்த்து போரடும் வலுவிழந்து, தற்கொலை செய்து கொண்டார் என்பது உச்சகட்ட சோகம்.

1990 ஆண்டு நடந்த பாலியல் கொடுமை, 1993ல் அதிகாரவர்கத்தின் ஆணவத்தால் தற்கொலை என இந்த சம்பவங்கள் நடந்து 19 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக நமது கண்ணியமிக்க சட்டம் தனது கடமையை செய்து முடித்து எந்த தண்டணையுமின்றி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரத்தோருக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டணை அளித்து தீர்பளித்துள்ளது. ( அன்றே ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியில் வந்துவிட்டார் அந்த புண்ணியவான்). இத்தனைக்கும் ருச்சிக்காவின் தோழி ஒருவரது குடும்பத்தினர் தான் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தப் போராடி இந்த நீதியைக் கூட பெற செய்தவர்கள். தங்கள் மகளை இழந்து, தற்போது ஊரை காலி செய்துவிட்டு வேறிடம் சென்றுவிட்டார்கள்.

தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றெல்லாம் வாய்கிழிய வக்கணையாக பேசிட்டு போறது தானே நம்ம ஊரு நீதி. 1990 ஆண்டு நடந்த கொடுமைக்கு 1993க்குள் சரியான முறையில் விசாரனை நடத்தி கடுமையான தண்டணை வழங்கப்பட்டிருந்தால் அந்த அப்பாவி பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்ட்ருக்க வேண்டியதில்லை. தயவு செய்து கோழைத்தனமாக அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டார் என யாரும் சொல்லிவிடாதீர்கள். கோழையாய் இருந்திருந்தால் 1990 ஆம் ஆண்டே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், மூன்றாண்டுகள் போராடி பல சோகங்களை அனுபவித்து இனி செய்ய எதுவுமில்லை என்ற நிலையில் தான் தன் உயிரை மாய்த்துக்கொண்டிருந்திருக்கின்றார் அந்தப் பெண்.

சிபிஐ விசாரணை நடத்திதான் இந்த 6 மாத தண்டணையையே அவருக்கு வாங்கித்தர முடிந்திருக்கின்றது. இந்த வழக்கில் ஒரு மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றம் ரத்தோர் மீது சேர்க்கப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டும் சேர்கப்பட வேண்டும் என கூறிய சிபிஐ அதிகாரி ரத்தோரால் மிரட்டப்பட்டு , அந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இப்ப 19 வருசம் இழுத்த இந்த வழக்கை மாடல் வழக்காக எடுத்துக்கொண்டு, மறு விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட ரத்தோர், அவருக்கு உதவிய அதிகாரிகள், ருச்சிகா மற்றும் அவரது சகோதரரை பள்ளியில் இருந்து நீக்கியவர்கள், ருச்சிகாவின் சகோதரர் மீது பொய் வழக்கு போட்டு காவலில் வைத்தவர்கள் என அனைவரையும் தண்டிக்கப் போவதாக நமது மத்திய சட்ட அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். ( எனக்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன், அவன்/அவளிடம் சொல்லி இந்த மாடல் வழக்கின் விசாரணையை ஃபாலோ அப் செய்ய சொல்ல வேண்டும், இந்த வழக்கின் முடிவை அவர்கள் கட்டாயம் பதிவாக எழுதவும் சொல்ல வேண்டும்)

ஆந்திராவுல கவர்னரா இருந்த என்.டி. திவாரி அடுத்த ஹீரோ. இவரு மேல பல பாலியல் புகார்கள் இருந்த போதிலும் எப்படி இவருக்கு போயி கவர்னர் பதவியெல்லாம் குடுத்தாங்கன்னு தெரியலை.

அருணா ஷான்பேக், ருச்சிகா இவர்களின் வாழ்வை கெடுத்தவர்களுக்கு என்ன தண்டணை சரியா இருக்கும் ? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:54 AM
தற்சமயம் பலரது பதிவுகளும் வைரஸ்களால் பாதிக்கப்பட்டு வலைப்பூக்களே முடக்கப்பட்டு வருவதாக தினமும் செய்திகள் வருகின்றன.

அதிலும் உண்மைத் தமிழன் அண்ணணது வலைப்பூவும், அன்புத் தங்கை தூயாவின் வலைப்பூவும் முடங்கியுள்ளதாக கேள்வியுற்று பெரிதும் அதிர்ந்தேன்.

என்னைய மாதிரி ஆளுங்கண்ணா பரவாயில்ல, பாவம் உ.த அண்ணண், அவரு எழுதுன பதிவுகளையெல்லாம் திரும்ப எழுதனும்னு நினைச்சா எவ்ளோ கஷ்டம்? அதான் என்னடா செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன் . அப்ப நம்ம வால்பையன் அண்ணாச்சி ஒரு மெயில் அனுப்சாரு. பதிவுகள்ல இருக்கத பாதுகாப்பா ஒரு பிரதி எடுத்து(back up) வைச்சுக்க உதவும் மென்பொருள் பத்தி சொல்லியிருந்தாரு. அந்த மென்பொருள் exe கோப்பா இருப்பதால் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதில் சிரமம் உள்ளதென சொன்னார்.

தற்போது உங்களனைவரின் நலனுக்காக நான் அதை பொது சேமிப்பு தளமான esnips.com எனும் தளத்தில் அந்த கோப்புகளை சேமித்து வைத்துள்ளேன். தேவைப்படுவோர் அதை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்கம் செய்ய சிரமமிருப்பின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (joseph.paulraj@gmail.com) தெரியப்படுத்துங்கள்.

Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:58 AM

அன்பு சொந்தங்களே,
பிரபலப் பதிவரும், எனதருமை நண்பணுமாகிய குசும்பன், அக்டோபர் திங்கள் 20 ஆம் நாள் அதிகாலை இந்திய நேரம் 4.15 மணிக்கு அழகிய ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். தங்கச்சியும், குட்டி குசும்பனும் மிக்க நலமாக உள்ளார்கள் .

குசும்பனைத் தொடர்பு கொள்ள : +91-9585161266

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:59 PM
இந்தத் தொடர் விளையாட்டில் என்னையும் அழைத்த அண்ணண் நர்சிம் அவர்களுக்கு என் அன்பான நன்றிகள்.

ஆறு, குளம், குட்டை, வாய்கால் என எல்லாப் பெயர்களையும் எனக்கு முன்னரே தம் வரலாறு கூறிய பெருமக்கள் எடுத்தாண்டுவிட்டமையாலும், அந்தப் பெயர்களை உபயோகிக்குமளவுக்கு நான் பெரியவன் இல்லையென்பதாலும் சிறுதுளி என்று தலைப்பிட்டுள்ளேன். ( தலைப்புக்கு விளக்கம் குடுக்கனும்ல?)

2006ல் சிங்கை வந்த போது தான் எனக்கு கூகுள் நிறுவனம் அளிக்கும் வலை சேவையே தெரியவந்தது. உடனே நிறைய எழுதனும்னு முடிவெடுத்து ஒரு வலைப்பூ துவங்கினேன். எனக்கு தெரிஞ்ச ஓட்டை ஆங்கிலத்தில எழுதுனேன். சிங்கையில் வேலையில் சேர்ந்ததும் மெயில் அனுப்ப கூட நேரமில்லாம போனதால தொடர்ந்து எழுத முடியல. நல்ல வேளை இப்ப அந்த வலைப்பூ முகவரி கூட எனக்கு தெரியாது. ( எல்லாரும் தப்பிச்சுட்டிங்க) .

2007ல தமிழ் தட்டச்சுக்கு ஈ-கலப்பை அப்டின்னு ஒரு மென்பொருள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு அத வைச்சு ஆரம்பிச்சதுதான் இப்ப இருக்க இந்த வலைப்பூ. 2007ல ஆரம்பிச்சு ரொம்ப பொறுப்பா 5 பதிவு எழுதுனாலும் அப்ப எனக்கு தமிழ்மணம் போன்ற திரட்டிகளப் பத்தி தெரியாது. அதுனால மறுபடியும் ஒரு இடைவெளி விட்டாச்சு.

2008ல ஆனந்த விகடன்ல வரவேற்பரையில் ஆசிப் அண்ணாச்சியோட வலை குறித்து எழுதியிருந்தது பார்த்து, அவரோட வலைப்பூவுக்கு போயி அவரோட பதிவுகளப் படிச்சேன். அவரு பதிவுல பல இடங்கள்ல தமிழ்மணம் அப்டிங்கிற பெயர் இருந்துச்சு. அது என்னத் தமிழ்மணம் அப்டின்னு பார்க்க போயி , அப்டியே புடிச்சு வந்துட்டேன் உள்ளற. ( ஒரு வழியா நாமளும் ரவுடி தான்னு ஜீப்ல ஏறியாச்சு)

அந்த காலகட்டத்தில சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்புக் குறித்து கோவியார் எழுதியிருந்தார். அதப் பார்த்துட்டு ரொம்ப மகிழ்சியாயிருச்சு. தனிமையில போரடிச்சுக் கிடக்கோமே, நமக்கு இங்க ஒரு கூட்டம் இருக்குடான்னு முடிவு பண்ணிட்டு ஒட்டகம் கூடாரதுக்குள்ள நுழைஞ்ச மாதிரி கூட்டத்துல இணைஞ்சுட்டேன். ( இப்ப கூடாரத்துல நடுவுல இருக்கோம்னு நான் சொல்லித் தான் தெரியனுமா என்ன? )

இங்க ஒரு முக்கியமான விசயத்த சொல்லனும். சிங்கையில எந்தப் புதிய பதிவர் எழுத ஆரம்பிச்சாலும், அவங்கள தொடர்பு கொண்டு, ஊக்கப்படுத்தி, சந்திச்சு, அவங்களையும் அடுத்த பதிவர் சந்திப்புக்கு கூட்டிவந்து எல்லோருடனும் இணைத்து மகிழச் செய்யும் சீரியப் பணியை கோவி.கண்ணண் மிகச் சிறப்பா செஞ்சுகிட்டு இருக்கார். சந்திப்புகளுக்கெல்லாம் செல்லும் முன்னரே ஒரு முறை நான் அவரோட தொலை பேசியில் உரையாடினேன். அடுத்த வார இறுதியிலேயே என் இல்லம் வந்து சந்தித்து சென்றார். சிங்கைப் பதிவர்களப் பத்தி சொல்லனும்னா அதையே ஒரு தொடரா எழுதணும். இங்க இருக்கது பதிவர் குழுமம் இல்ல, இது பதிவர் குடும்பம். (இதுக்கு மேல என்னத்த சொல்ல? )

பெருசா ஒன்னும் எழுதி கிழிக்கலைன்னாலும், பதிவுலகத்துக்கு வந்தமையால் பல அன்பு உள்ளங்களின் நட்பு கிடைத்தது நான் அடைந்த பெறும் பேறு. என் கூட முதுகலையில் ஒன்றாகப் படித்தவரும், தற்போதைய பிரபலப் பதிவருமாகிய குசும்பன் அவர்களைக் கூட மீண்டும் தொடர்பு கொள்ள உதவியது பதிவுகள் தான்.
சுருக்கமா சொல்லனும்னா, நமக்கு உலகம் பூர சொந்தக் காரங்க இருக்காங்கன்னு சொல்லிக்க வைச்சுருக்கு இந்தப் பதிவுலகம்.

தொடர்ந்து எழுதாமலேயே பதிவர்னு சொல்லிக்கிட்டு திரியிறேன். பார்ப்போம், இந்த சிறு துளி பல துளிகளா பல்கிப் பெருகுதா, இல்ல அப்டியே ஒரு துளியாவே நிக்குதான்னு.

இந்த தொடர் விளையாட்டுக்கு நான் அழைக்கும் சொந்தங்கள்


Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•2:20 PM
நேற்றைய அறுவை சிகிச்சைக்குப் பின் மயக்கத்தில் இருந்த செந்தில் நாதன் அண்ணண் தற்போது கண்விழித்து விட்டார். அவரது மனைவி சென்று பார்த்துள்ளார்.

உலகெங்கிருந்தும் தங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும், பிரார்தனைகளையும் தெரிவித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் அன்புடனும், ஆதரவுடனும், மாற்று இதயம் கிடைத்ததும் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் இதேபோல் வெற்றிகரமாக செந்தில் நாதன் கடந்து முழுமையாக குணமடைவார். தொடர்ந்து உங்கள் உதவிகளையும், அன்பையும், வேண்டுதல்களையும் யாசிக்கிறோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•3:58 PM
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை 3.30 மணிக்கு முடிந்து தற்போது செந்தில் நாதன் அண்ணண் அவர்கள் Post Operative Care Unit க்கு மாற்றப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், எல்லாம் நல்லமுறையில் நடந்துள்ளதாகவும், செந்தில் அண்ணண் நன்றாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

உலகெங்கிருந்தும் அண்ணணுக்காக பிரார்தனைகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் அனைவரின் அன்பாலும், வாழ்த்துக்களாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே இது சாத்தியமாயிற்று. தொடர்ந்து உங்கள அன்பையும், வேண்டுதல்களையும் வேண்டுகிறோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:51 PM
அண்ணண் சிங்கை நாதனுக்காக நாளை 27.08.2009 அர்ச்சனை செய்ய வசதியாக பலர் அவரது பெயர் மற்றும் நட்சத்திர விவரங்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அனைவரின் கவனதிற்க்காகவும் இதை பதிவாக வெளியிடுகிறேன்.

முழுப் பெயர் : செந்தில் நாதன்
நட்சத்திரம் : பூராடம்
இராசி : தனுசு.


27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.

உங்களுக்கு விருப்பமான முறைகளில் தொடர்ந்து உங்கள் ப்ரார்தனைகளை செந்தில் நாதன் அண்ணணுக்காக செய்யுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:32 PM
அன்பு நண்பர்களே, உலகெங்கும் இருக்கும் நல்ல உள்ளங்களின் தொடர் முயற்சியாலும், உதவியாலும் நமது இலக்கில் 75 சதவீதத்தை தற்போது அடைந்துள்ளோம். இத்தனை பெரிய தொகையை எப்படி அடைவது என்று அஞ்சியவர்களை பதிவிட்ட 10 நாட்களில் உலகெங்குமிருந்தும் உதவிகளை குவித்து சாத்தியமாக்கிய அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

VAD எனும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை தேதி 26ல் இருந்து 27க்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.

எங்களைப் பார்க்கும் போதெல்லாம் சிங்கை நாதன் அண்ணன் கேட்பது கூட்டுப் பிரார்தனை செய்யுங்கள் என்பது தான். இந்த பெரிய அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து , செந்தில் அண்ணா நல்லமுறையில் தேறி வர உங்கள் பிரார்தனைகளை தாருங்கள்.

வியாழன் அன்று செந்தில் நாதன் அவர்களுக்காக சிறப்பாக வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தவர்கள் உங்க மத முறைகளில் வழிபாடுகள் ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நல்ல உள்ளங்களும் ஒருங்கிணைந்து வேண்டும் போது அது நிச்சயம் நடக்கும்.

உதவிக் கொண்டுள்ள அத்தனை அன்புள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள். தொடர்ந்து சிறப்பாக உங்கள் ப்ரார்தனைகளையும், உதவிகளையும் வேண்டுகிறோம்.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:58 PM
சிங்கை நாதன் அவர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக Ventricular Assist Device (VAD) எனப்படும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 26 புதன் அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. VAD கருவி இதய மாற்று அறுவை சிகிச்சை வரை தற்காலிக தீர்வாக செய்யப்படுகிறது.


அன்று நம் அனைவரையும் கூட்டுப் பிரார்தனை செய்யுமாறு செந்தில் நாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்து அடுத்து மாற்று இதயம் கிடைத்ததும் அடுத்த அறுவை சிகிச்சை என இரண்டு பெரிய சிகிச்சைகளை கடக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அவரது உடல் நலனுக்காக சிறப்பாக பிரார்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.




வலையுலகம் வெறும் மாய உலகமல்ல என நிருபிக்கும் இந்த மாபெரும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். தொடர்ந்து போராடுவோம். நம் உதவிகளாலும் , ப்ரார்தனைகளாலும் செந்தில் நாதன் அண்ணணை மீட்டெடுப்போம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:27 PM
இது தான் உன் முடிவா?

ம்ம்ம்ம்

ஏன் திடீர்னு இப்டி ஒரு முடிவு?

திடீர்னு எல்லாம் இல்ல , ரொம்ப நாளாவே நினைச்சுக்கிட்டு இருந்ததுதான்.

இல்ல, இவ்ளோ நாள் இல்லாம இந்த நேரத்துலயா இத செய்யனும்?

இது தான் சரியான நேரம் , இப்ப செஞ்சாதான் நல்லாருக்கும்

கள நிலம தெரியாம நீ இந்த முடிவுக்கு வந்துட்டியோன்னு தோணுது..

என்ன கள நிலைமை , எப்பவும் வழக்கமா இருக்க நம்ம ஆட்கள் தானே இப்பவும் இருக்காங்க , இப்ப மட்டும் கள நிலைமை என்ன புதுசா மாறிடுச்சு? வானத்துலேருந்து எல்லாம் யாரும் குதிச்சுரலைல்ல? சொல்லப் போனா என்னைய பார்த்து தான் எல்லாரும் பயப்படனும்.
ஏன் நான் மட்டுமா புதுசா இறங்குறேன், இதுவரைக்கும் வராத நிறையா பேரு இப்ப வரலையா?

அப்போ எல்லாரும் வர்றாங்க, அதுனால நானும் போறேன்னு போறியா நீ?

நெவர், என்னால முடியும்னு நினைக்கிறேன், அதான் இறங்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

புலியப் பார்த்து பூனை சூடு போட்ட மாதிரின்னு பேர் வந்துடாது?

ஹேய் லுக், என்னைய தேவையில்லாம பழமொழியெல்லாம் சொல்லி டிஸ்கரேஜ் பன்னாத, பூனையோட பரிணாம வளர்சிதான் புலி. நான் என்ன கடைசிவரைக்கும் பூனையாவே இருக்கணும்னு சொல்றியா?


இல்லப்பா, நீ கோபப்படாத, எதிராளிங்க எல்லாம் பழம் தின்னு கொட்டைப் போட்ட ஆளுங்க. அதுனாலத்தான்....

அதுனால? ஸோ வாட் யா? இப்ப தென்சென்னையில சரத் பாபு துணிச்சலா களமிறங்கல? எதிராளிங்க எல்லாம் அரசியல் கட்சியில இருக்கவங்க, தொண்டர், குண்டர் படை, அதிகாரம், பணம் எல்லாம் உள்ளவங்க அப்டின்னு அவரு யோசிச்சாரா? இல்லைல ? துணிஞ்சு இறங்குனாருல்ல? அப்டித்தான் நானும் துணிஞ்சு இறங்குறதுனு முடிவு செஞ்சுட்டேன்.

சரி, நீ சொன்ன சரத் பாபு வெற்றிபெறலையே? அப்ப நீ தோக்கப் போறோம்னு தெரிஞ்சே இறங்கப் போறியா?

ஹே, கமான் யா, லெட் மீ ட்ரை. முத தடவையே வெற்றியடையும்னு இல்லைல. இங்கயே உக்காந்திருந்தா எப்டி? முதல்ல இறங்கிப் பார்ப்போம். அப்பறம் வெற்றியப் பத்தி யோசிக்கலாம். குறைஞ்சது ஒரு போட்டி அனுபவமாச்சும் கிடைக்கும்ல?

இருந்தாலும் களத்துல இருக்கவங்களோட பிண்ணணியெல்லாம் என்னான்னாவது தெரிஞ்சுகிட்டு செய்யலாம்ல ?

எல்லாரும் ஏற்கனவே இதுல அனுபவம் உள்ளவங்க, பத்திரிக்கைகள்ல எல்லாம் அவங்க புகழ் பரவியிருக்கு, அதத் தானே சொல்ல வர்ற?

ஆமா.

அவங்களும் என்னைய மாதிரி ஒரு நாள் புதுசா ஆரம்பிச்சவங்க தானே? இறங்குன உடனே அவங்க எல்லாம் பத்திரிக்கையில வந்துட்டாங்களா என்ன? நான் இப்ப தொடங்குற மாதிரி தானே அவங்களும் ஒரு நாள் தொடங்கியிருப்பாங்க?

சரி, இதுக்கு மேல நான் சொல்றத நீ கேக்க மாட்ட, உரையாடல் சிறுகதை போட்டிக்கு கதை அனுப்புற உன் முடிவுல இருந்து மாறமாட்ட. வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா.

நன்றி டா.

டிஸ்க்கி:
1. உரையாடல்னு சிறுகதை போட்டி வைச்சுருக்கதுனால எனக்கும் என் மனசாட்சிக்கும் இடையே நடந்த உரையாடலையே கதைங்கிற பேர்ல எழுதிட்டேன்.

2. கதை எழுத நானும் முயற்சி செஞ்சேன் அப்டின்னு வரலாற்றுல பதிச்சாச்சு.( வரலாறு முக்கியம்ல)

என்னடா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லன்னு கேட்கிறவங்களுக்கு

அதான் எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த உரையாடல்னு சொல்லிட்டேன்ல, மனசாட்சியே இல்லாம எப்டி அதோட உரையாட முடியும்? ???
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:41 PM
ரொம்ப நாளவே இந்த விளையாட்டு நடந்துக்கிட்டேத்தான் இருக்கு. ஆனா நம்மல யாரும் கூப்பிடல. ஏன் என்னைய யாரும் கூப்பிடலன்னு ஒரு சிலர கேட்டேன். ஒருத்தரு சொன்னாரு நீங்கள்லாம் பெரிய ஆளு, உங்களையெல்லாம் முன்னாடியே வேற யாராச்சும் கூப்பிட்டுருப்பாங்கன்னு நினைச்சுத்தான் கூப்புடாம விட்டுட்டோம்னாங்க. ஆகா, இந்த உலகம் இன்னமும் நம்மல நம்புதேன்னு விட்டுட்டேன். ஒருவழியா நம்மளையும் ரெண்டு பேரு கூப்புட்டுட்டாங்க. களத்துல இறங்கிட்டேன்.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அ.ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் இதுதான் என்னோட முழுப் பெயர். ஜோசப் என்பது எங்கள் குடும்பத்துல எங்க தலைமுறையில இருந்து எல்லாருக்கு வைச்சுருக்க பொது பெயர், வீட்ல மொத்தம் 8 ஜோசப் இருக்கோம்.

கிறிஸ்தவர்களில் புனிதர்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள்.அவர்களது பிறந்த தினங்களை அவர்களது Feast என கொண்டாடுவது வழக்கம், நான் பிறந்த ஜூலை 11 ஆம் நாள் புனித பெனடிக்ட் அவர்களின் Feast. இதனால் என் பெயருடன் பெனடிக்ட் சேர்ந்து கொண்டது.

நான் பிறந்த வருடம் தான் முந்தைய போப் 2 ஆம் ஜான் பால் அவர்கள் போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். எனவே பால் என்பதும் என் பெயரில் சேர்ந்துவிட்டது. ஜோசப் பெனடிக்ட் பால் அப்டின்னு இருந்தா நல்லாருக்காதுன்னு ராஜ் அப்டிங்கிற பெயர் எச்ச விகுதிய சேர்த்து முழுப் பெயரையும் உருவாக்கிட்டாங்க.

இவ்ளோ நீளமான பெயரா இருக்கதால விண்ணப்ப படிவங்கள்ல எல்லாம் எழுத சிரமப்பட்டாலும், எல்லாத்துக்கும் பொருத்தமான விளக்கமிருப்பதால் என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

30.4.2009 நள்ளிரவுல இருந்து இன்று வரை , தினமும் என் தந்தையின் மறைவை நினைத்து நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் .

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். காரணம் என்னான்னா வேற யாருக்கும் என் கையெழுத்து புடிக்காது. புரியிற மாதிரி எழுதுனாத்தானே புடிக்கிறதுக்கு.

4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் ஆச்சாரமான அசைவ குடும்பத்துல பொறந்தவன். கொஞ்சமாச்சும் அசைவம் இருந்தா நல்லாருக்கும். ரொம்ப புடிச்சது ஆட்டிறைச்சி, ஆனா சிங்கப்பூர்ல கிடைக்கிறது ஆஸ்த்ரேலியால இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, அது அவ்ளோ நல்லா இருக்காது. அதுனால அதிகமா சாப்புடுறதில்ல. கோழி, மீன் இதெல்லாம் ரொம்ப புடிக்கும்.
தயிர் சாதம் ரொம்ப புடிக்கும்.

இதே காலை உணவுன்னு கேட்ருந்தா என்னோட பதில் மொதல் நாள் வடிச்ச சோறுல தண்ணி ஊத்தி அடுத்த நாள் காலையில அதுல தயிர் ஊத்தி, சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு , சுண்ட வைச்ச பழைய குழம்போட , மோர் மிளகா வத்தல் வறுவல் வைச்சுக்கிட்டு, வயகாட்டு வரப்புல தண்ணி ஓடிக்கிட்டு இருக்க வாய்கல்ல கால வைச்சுக்கிட்டு உக்காந்து சாப்புடுறதத் தான் சொல்லுவேன். இந்த உலகத்துல எங்க போய் என்ன சாப்புட்டாலும் இதுக்கு ஈடா ஒன்னு வராது. அனுபவிச்சவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எல்லாருகிட்டயும் உடனே நல்லா பேசிருவேன், ஆனா எதிராளி எப்டி பழகுறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் அவங்களோட நட்பா இல்லையான்னு முடிவு செய்வேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி, கடல் , பாத்ரூம் என எங்கயா இருந்தாலும் குளிக்க புடிக்கும். ரொம்ப புடிச்சது எங்க ஊர்ல ஆத்துல எதிர் நீச்சல் போட்டு குளிக்கிறது தான்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

இதத்தான் பார்கணும், இதத் தான் பார்ப்பேன்னு இதுவரைக்கும் எந்த வரைமுறையும் வைச்சுக்கிட்டதில்ல. பெரும்பாலும் கண்களப் பார்த்து பேசுவது உண்டு.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது : தெரியலை, எனக்கு என்னைய ரொம்ப புடிக்கும், எத சொல்றதுன்னு தெரியல.
பிடிக்காதது: சோம்பேறித்தனம், எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பி ஏமாறுறது, ஏமாத்துறான்னு தெரிஞ்சும் சிலருக்கு உதவி இ.வான்னு பேர் எடுக்கிறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

தெரியலைன்னு சொல்றது சரியா இருக்கும். இந்த கேள்விய நான் சாய்ஸ்ல விடுறேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என்னைய வளர்த்த என் வாத்தியார் தாத்தா நான் நல்லபடியா வேலையில இருக்கத பார்க்க கூட இல்லையேன்னு வருத்தம் இருக்கு & அப்பா....

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வீட்டில் இருப்பதால் வெண்நிற அரை கால்சட்டையும், சாம்பல் நிற பனியனும்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் மடிக்கணிணியின் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ( திரையப் பார்க்காம என்னால தட்டச்சு செய்ய முடியாதுங்க)
அண்ணண் மகள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நான் இப்டியே இருந்துட்டுப் போயிடுறேனுங்க, எதுக்கு என்னைய போயி பேனாவா மாத்துறீங்க, அப்டியெல்லாம் மாத்துனா எழுதுறவங்க கட்டுப்பாட்ட மீறி நானு எழுதிக்கிட்டேயிருப்பேனாக்கும். சரி மாத்துறதுனா சிவப்பு நிற பேனாவா மாத்துங்க.

14.பிடித்த மணம்?

மழை பெய்ய ஆரம்பிக்கும் போது வரும் மண் வாசனை, நெற்பயிர் கதிர்விடும் போது வயல்வெளியெங்கும் உள்ள வாசனை, சேற்று உழவு செய்யும் போது வரும் மணம், கடலைய சட்டியில போட்டு தீயாம வறுக்கும் போது வரும் வாசம் , இப்டி சொல்லிக்கிட்டே போகலாம், அது ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

திவ்யா - சிறந்த கதாசிரியர் , அருமையான நண்பர்
சென் - என் வகுப்புத் தோழன், ஆருயிர் நண்பண்
ஜெகதீசன் - சிங்கை பதிவர், அன்புத் தோழர்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


லதானந்த் மாமா அவர்களின் அனைத்துப் பதிவுகளிலும் உள்ள நகைச்சுவையும்,கொங்கு தமிழும் , துறைசார்ந்த பதிவுகளில் பல நல்ல விசயங்களை எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக சொல்லுதலும்.

ரெங்காவின் கவிதைகளும், பட்டாம்பூச்சி சொல்லித்தந்ததும்

17. பிடித்த விளையாட்டு?

இறகு பந்து, கூடைப் பந்து, கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட்( ஓரளவுக்கு)

நீச்சல் ( இதையும் விளையாட்டுல சேர்கலாம்ல??)

18.கண்ணாடி அணிபவரா?

அது ஆச்சு 10 வருசம். பொட்டித் தட்டுற வேலையில இருக்கதுனால கண்ணாடி அணிய வேண்டியது மிக அவசியமாயிருச்சு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைசுவையானப் படங்கள் குறிப்பாக கமல் நடித்த நகைச்சுவைப் படங்கள் ( வசூல் ராஜா, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம், நள தமயந்தி போன்றவை)

மனசுக்கு கஷ்டம் தராத சுபமான முடிவுகள் கொண்ட படங்கள் புடிக்கும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன் படம் திரையரங்கில் பாதி பார்த்துக்கிட்டு இருக்கப்ப தான் அப்பா இறந்த செய்தி வந்தது
கடைசியா முழுசாப் பார்த்த தமிழ் படம் : ஜெயங்கொண்டான்

அப்பறம் இடையில வாண்டட் அப்டின்னு ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், வளைச்சு வ்ளைச்சு சுடுறது, ஒரு குண்ட வளைச்சு அடிச்சா வட்டமா நிக்கிற எல்லாரையும் ஒரே குண்டு கொன்னுட்டு , சுட்டவங்களையும் சாய்க்கிது. இந்தமாதிரி படம் எல்லாம் MLA விசயகாந்த இல்லன்னா MP தானை தலைவன், அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் தவிர வேறு யாராலும் தமிழில் எடுக்க இயலாது.

21.பிடித்த பருவ காலம் எது?

எல்லாக் காலமும் பிடிக்கும். இதுல எல்லாம் எந்த சிறப்பு விருப்பமும் இல்லீங்க.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

மதன் எழுதிய கி.மு கி.பி

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இரு அண்ணண்களின் பிள்ளைகளையும் நான் வைத்திருக்கும் படம் தான் என் கணிணியில் இருக்கும் , அதை மாற்றுவதில்லை. இரண்டு பேரும் மறுபடியும் ஒன்னா பார்குறப்ப புதுசா படமெடுத்த பின்னாடிதான் மாத்தனும்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : குழந்தைங்க பேச்சுல ஆரம்பிச்சு நிறையா இருக்கு
பிடிக்காதது: தேவையில்லாத கோபத்தின் போது வந்து விழும் எந்த வார்த்தைகளின் ஓசையும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

Air Distance - 2881.5 KM ( தஞ்சாவூர் - சிங்கப்பூர்).

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிதி மேலாண்மை & ஆலோசனையளித்தல்
ஒருங்கிணைத்தல்
மனச் சோர்வுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் செய்வது

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கடவுள் பார்த்துக்குவாரு விடுன்னு சொல்றத என்னால ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மேலயே எல்லாத்துக்கும் பாரத்த போட கூடாது. நாம செய்யவேண்டியத நாம தான் செய்யனும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

பொசுக்கென்று வரும் கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மலைப் பிரதேசங்கள் எதுவாயிருப்பினும் பிடிக்கும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிஞ்சளவு உழைக்கணும், உழைப்புக்கேற்ற வளர்சி இருக்கனும், என் மறைவிற்கு பிறர் வருந்தும் அளவுக்கு சிறப்பா வாழணும்.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தெரியல, இதையும் சாய்ஸ்ல விடுறேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

"Nothing is Impossible, Nothing Is Difficult, Everything is a challenge" Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 AM
A

B

C

D

E

F

G

H

I

J

K

L

M

N

O

P

Q

R

S

T

U

V

W

X

Y

Z

அவர  நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் அப்டியே 
இவரையும் நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்.



Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:53 PM
இலங்கை அரசால் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளை தயவு செய்து நம்பவோ பரப்பவோ செய்யாதீர்கள்.

இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்து இதுபோல ஆயிரம் முறை அவரை இது போல் கொன்றுள்ளார்கள் வெறும் செய்தியில் மட்டும். இது சர்வதேச சமுதாயத்தை திசை திருப்பும் ஒரு செயல் என்றே படுகின்றது.

இத்துனை நாள் போராடியவர் இப்போதா தப்பிச் செல்லப் போகின்றார்? யோசிக்க வேண்டிய நேரமிது. அஞ்சலிப்பதிவு எழுதும் நேரமல்ல.

எனவே அனைவரும் அமைதி காப்போம். நல்லதே நடக்க நம்மால் இயன்றவற்றை செய்வோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:37 PM
சில காலங்களுக்கு முன்பு வரை கிராமப்புறங்களுக்கு ஏதாவது அவசர செய்திகளை அதிலும் குறிப்பாக மரண செய்திகளை சொல்ல மட்டுமே பயன்பட்டு வந்த தகவல் தொடர்பு முறைதான் தந்தி. சமீபகாலத்தில் செல்லுலார் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்த பின்னர் தந்தி சேவையின் தேவை மிக மிக குறைந்து போயிருந்தது.

ஆனால் சமீபத்தில் ஈழப் போரை நிறுத்தக் கோரி பல முறை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்(???), வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி என பலருக்கும் அடிக்கடி தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி தந்தி அனுப்பி வந்தது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. தான் மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தமிழக மக்கள் அனைவரையும் வேறு தந்தி அனுப்பி போராட்டம் நடத்தி அழிந்து வரும் தந்தி சேவையை காப்பாற்றவும் செய்தார் என்பதும் நாம் அறிந்த ஒன்று.

மின்னஞ்சல் சேவை மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகிய பின்னர் கடிதம் எழுதுவதும் மிக அரிதாகி கொண்டே இருந்த நிலையில் உயிர் போகும் பிரச்சனையாக இருந்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுவேன் என்ற தனது உறுதியான கொள்கையால் பல கடிதங்களும் எழுதி கடித சேவையையும் காப்பாற்றியுள்ளார்.

தபால் மற்றும் தந்தி சேவை ஆகியவை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அமைப்புகள் என்பதால் தொலை தொடர்பு அமைச்சகம், அழிந்து வரும் தபால் தந்தி சேவைகளை காப்பாற்ற கருணாநிதி அவர்கள் செய்துவரும் மாபெரும் சேவைகளைப் பாராட்டி ஒரு பெரிய பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தற்போது இவ்விழாவை நடத்த இயலாது என்பதால் தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை நீங்கள் காப்பாற்றுகிறேன் என எடுத்த முயற்சிகள் அவர்களை காப்பாற்றியதோ இல்லையோ, அழிந்து வரும் தபால் மற்றும் தந்தி முறைகளை காப்பாற்றியுள்ளது மிகவும் பாராட்டத் தக்கதே.

வாருங்கள் முதல்வரை பாராட்டுவோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•2:04 PM

நம்ம குசுமபன் இன்று திருமண வாழ்வின் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறான்.


அய்யனார் தம்பதியருக்கும் இன்று திருமண நாள்.

வாங்க தம்பதிகளை வாழ்த்துவோம்.


என் அன்பு நண்பண் சரவணவேல் & மஞ்சு எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:29 PM

நாடளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவது மட்டும் தான் வாக்காளர்களின் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக தேர்தல் நாளன்று நமது ஓட்டை பதிவு செய்கிறோம்?

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் என்று விளம்பரம் செய்தாலும் கூட தேர்தல் அன்று கிடைக்கும் விடுமுறையை வீட்டில் இருந்து அனுபவிக்கத்தான் மனமிருக்குமே தவிர ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போட மனம் வராது. இந்தியாவில் வெளிமாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள், வெளியூரில் வேலைப் பார்ப்பவர்கள் கூட தங்களுக்கு வாக்குரிமை இருக்கும் ஊரில் தேர்தல் நடைபெறும் நாளில் அங்கு சென்று ஓட்டளிக்க எத்தனைபேருக்கு மனம் வரும்?

துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் வெறும் இரண்டே நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்து செல்ல இருக்கிறார் என்றால் அதை நம்ப சிறிது சிரமமாகக் கூட இருக்கலாம். ஆனால் அபி அப்பா அதை செய்ய இருக்கிறார்.

அவர் எந்த கட்சிக்கு ஓட்டளித்தாலும், ஓட்டளிக்க வேண்டும், தனது ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக விமானக் கட்டணம் மட்டும் 13 ஆயிரம் இந்திய ரூபாய்கள் செலவு செய்து வர இருக்கிறார்.
ஓட்டுரிமையை நிலைநாட்ட என்றே தாய்நாட்டிற்கு வருகை தர இருக்கும் அபி அப்பா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊரில் இருக்கும் நண்பர்களே மறக்காமல் ஓட்டுப் போடுங்கள். உங்கள் உரிமையை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள். துபாயில் இருந்து வந்து ஓட்டளிக்க இருக்கும் அபி அப்பாவின் செயலை பார்த்து குறைந்தது நான்கு பேராவது தங்கள் கடமையைச் செய்தால் அது அவருக்கு நாம் சொல்லும் சிறந்த வாழ்த்தாக இருக்கும்.


எல்லாம் சரி நீ எப்டின்னு என்னையப் பார்த்து கட்டாயம் என் மாப்பி சஞ்சய் கேட்பாரு. எனக்கு இன்னும் ஓட்டுப் போடுற வயசு வரல மாப்ளன்னு சொன்னா நீ நம்ப மாட்ட. சரி உண்மையச் சொல்லிடுறேன், 2004 தேர்தல்ல இருந்தே என் பெயர் வாக்காளர் பட்டியல்ல இல்ல. 2004 தேர்தலப்போ சென்னையில இருந்து ஓட்டுப் போடுறதுக்காக எங்க ஊருக்குப் போயிட்டு ஓட்டுப் போட முடியாம வந்தேன், அதுக்கு அப்றம் நான் இங்க வந்துட்டதுனால என் பெயர் சேர்க்கப்படாமலே போயிருச்சு. அதுனால நான் வந்தாலும் ஓட்டுப் போட முடியாது. ( சஞ்செய்ய வம்பிழுத்தாச்சு.)

ஒழுங்கா பதிவு எழுதப் போறியா இல்லையான்னு என்னைய மிரட்டிய அன்புத் தங்கை தூயாவிற்கு நன்றிகள். நம்ம வலைப்பூவ அருமையா வடிவமைச்சதும் தூயா தான்.

ராயல் சல்யூட் அப்டிங்கிற வார்த்தைய தமிழ்படுத்த தெரியல.அதனால் அப்படியே ஆங்கில வார்த்தைய உபயோகிச்சுடேன், தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிக்கவும். Udanz
Author: Anonymous
•11:56 AM
ஜோண்ணா,
ஒழுங்கு மரியாதையா பதிவ போடுற வேலைய பாருங்க. அதென்ன பதிவே போடாமல் பதிவர் ஒன்று கூடலுக்கு மட்டும் நேரத்துக்கு போறிங்க?! இதில சிங்கை பதிவர்கள் தலைவர் பதவி வேறு!! ம்ம்கும்

ஏதோ உங்களுக்கு மட்டும் தான் வேலை அதிகம் போலவும், நாங்கெல்லாம் வேலை இல்லாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றீர்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உடனே பதிவு போடுங்கள், அது சஞ்சயை கலாய்க்கும் பதிவாக இருந்தால் கூட மகிழ்ச்சியே!

உங்கள் பதிவு வரவில்லை எனில்:

தூயா சமையல்கட்டில் தினமும் 3 தடவைகள் மட்டுமல்லாது 6 தடவைகள் சமைப்பார்.
லீ 1 நாள் சாப்பிட்டு கொண்டே உண்ணாவிரதம் இருப்பார்.
ராம் அதிசயபறவைகளை கண் கொண்டும் பார்க்க மாட்டார்.
ஜோதி அண்ணா வீட்டு இட்லி உங்க பக்கம் வரும்.
ஜமால் உங்களுக்காக டீ குளிப்பார்

இவ்வண்ணம்,
தூயா
வாழ்நாள் தலைவர்
ஜோண்ணாவை மிரட்டுவோர் சங்கம்
'தல'மை செயலகம்
ஒஸ்திரேலியா Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•11:46 PM
இது காதலர் தின சிறப்பு பதிவு.

கலாச்சாரத்த காப்பாத்துறோம்னு காதலர் தினத்தன்னைக்கு ஒன்னா இருக்க காதலர்களுக்கு எல்லாம் கட்டாயமா திருமணம் செஞ்சுவைப்போம், இல்லைன்னா அந்த பொண்ண விட்டு பையனுக்கு ராக்கி கட்ட வைப்போம்னு ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு. ( என்னா ஒரு வில்லத்தனம்??)

இவங்க திட்டத்த கேட்டு அப்டியாவது நமக்கெல்லாம் கல்யாணம் ஆகாதான்னு இங்க ஒரு தொழிலதிபர் பட்டு வேட்டி கட்டிக்கிட்டு சனிக்கிழமை கோயம்புத்தூர்ல இருந்து பெங்களூருக்கு வர திட்டம் போட்டுக்கிட்டு இருக்கத வேற தகவல் வருது. ( இந்த தொழிலதிபருக்கு எந்த பொண்ணையாச்சும் கட்டாயத் திருமணம் செஞ்சு வைக்க முயற்சி செஞ்சா,அந்த பொண்ணு ஒரு ராக்கி என்ன 100 ராக்கி கட்டுறேன்னு கைல மட்டும் இல்ல கழுத்துல கூட ராக்கி கட்டிட்டு தப்பிச்சுடும், இருந்தாலும் அந்த அளவுக்கு சோதனை தேவையா? )


இவங்க ஆர்பாட்டத்த எதிர்த்து இன்னொரு கூட்டம் இவங்களுக்கு பிங்க் கலர் பெண்கள் உள்ளாடை அனுப்ப கிளம்பியிருக்கு.( என்ன ஒரு அருமையான ஆயுதம்???, அப்ப பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கனும்னா என்ன செய்வானுங்க??)

இம்புட்டு பேராடா வேலையில்லாம அலையிறீங்க? அடப் கெரகமே. என்ன செய்யிறதுன்னு தெரியாம அலையிறீங்களா? இந்த காதலர் தினம் எல்லாம் வருசத்துக்கு ஒரு தடவ தான் வரும், அப்ப மட்டும் நீங்க இந்த அலப்பற அடிக்கிறத விட்டுட்டு கீழ சொல்லியிருக்க வேலைய எல்லாம் செஞ்சீங்கன்னா, வருசம் முழுக்க வேலை இருந்துகிட்டே இருக்கும்.
இப்ப உங்கள எதிர்த்து ஜட்டி அனுப்புறவன் எல்லாம் உனக்கு பூங்கொத்து அனுப்புவான், உங்கூட சேர்ந்துக்க கூட செய்வான்.

உங்களால உருப்படிய யோசிக்க முடியாதுன்னு தெரியும், அதான் உங்களுக்காக நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லியிருக்கேன். இதுவும் செய்ய சுவரசியமாத்தான் இருக்கும். நீங்க அப்பாவி காதலர்கள மிரட்டி உங்க வீரத்த காட்டுறதுக்கு பதிலா இப்டி உருப்படிய வீரத்த காட்டுனா நல்லா இருக்கும். எங்க முடிஞ்சா இதையெல்லாம் செய்யப்பாருங்க .

1) ஊர்ல எங்க பார்த்தாலும் குப்பையும், கூளமுமா இருக்கே அத சுத்தம் பண்ணுங்க, பொது இடத்துல குப்பை போடுறவன பொளேர்னு அடி, கம்பத்த பார்த்தா காலத்தூக்குற நாய் மாதிரி கண்ட இடத்துலயும் அசிங்கம் பண்றவன விரட்டி விரட்டி அடி.

2) எல்லா அரசாங்க அலுவலகத்துக்கும் போங்க, அங்க எந்த வேலையா போனாலும் அநியாயமா லஞ்சம் வாங்குறானுங்களே மொள்ள மாறிங்க, அவிங்களுக்கு ஆப்பு வையிங்க. லஞ்சம்னு எவனும் கேட்கவே பயப்புடனும் அப்டி அடி.

3) எல்லாத் திறமையும் இருந்து படிக்க வழியில்லாம கஷ்டப்படுற ஏழைப்பசங்களுக்கு உதவி பண்ணு. கல்விய கூறு போட்டு விக்கிற வியாபரிய ஓட ஓட விரட்டியடி. கஷ்டப்பட்டு காசு குடுத்து படிக்கிற மாணவக் கூட்டம் உன் பின்னாடி வரும்.

4) சாலையில பல இடங்கள்ல போற வர்ற வண்டிய எல்லாம் மடக்கி, கைய நீட்டுற காவலர்கள கண்டா இந்தியன் தாத்தா மாதிரி மரியாதை செஞ்சு அனுப்பு.

5) ஒரு நாளைக்கு ஒரு சாலையின்னு திடீர்னு போயி நில்லுங்க,எவன் தேவையில்லாம ஹாரன் அடிக்கிறானோ அவன பொடேர்னு அடி, விதிமுறைய மீறுனா வண்டிய புடுங்கிடு.

6) எல்லா ஊர்லயும் எந்த வசதியிருக்கோ இல்லையோ, குடிசைப் பகுதிகள் கட்டாயம் இருக்கும், அது தேர்தல் நேரத்துல மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு நினைப்பு வரும், அங்க போயி அவங்களுக்கு தேவையான வசதிகள செஞ்சு கொடு. இதுக்கெல்லாம் நீ உன் கை காச செலவு செய்ய வேண்டாம், அரசாங்க அதிகாரிகள புடிச்சு கொண்டுவந்து செய்ய வைய்யி. குடிசையில இருக்கவங்க எல்லாம் உனக்கு கோயில் கட்டுவாங்கள்ல? நீ செஞ்சு வைச்சுருக்க வசதிய எல்லாம் உபயோகிக்காம குடிசைய சுத்தி குப்பைய எவனாச்சும் போட்ட அடி.

(படிக்கிறவங்களுக்கு இதே மாதிரி நல்ல யோசனைகள் தோன்றினால் உடனே பின்னூட்டமிடுங்கள்)

இப்டி உருப்புடியா செய்ய ஆயிரம் வேலை இருக்கப்ப, காதலர்கள அடிக்கிறேன், கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்னு கிளம்புறது எந்த விதத்துல நியாயம்?

மேல சொன்னதையெல்லாம் செய்ய முடியாதுல்ல? அங்கயெல்லாம் போயி உன்னால வீரத்த காட்ட முடியாதுல்ல? அப்டியே ஒரு வேளை போயி அடிச்சா, உனக்கு டின்னு கட்டிருவான்னு தெரியும்ல, ஊருக்கு பயந்து, வீட்டுக்கு தெரியாம காதலிக்கிறவனுங்ககிட்டத்தானே உன் வீரத்த காட்ட முடியும்?

என்னைய கூடத்தான் எந்த பொண்ணும் காதலிக்கல, அதுக்காக நான் என்ன எல்லா காதலர்களையும் பார்த்து பொறமைப் பட்டுக்கிட்டா இருக்கேன்? இல்ல உங்கள மாதிரி வில்லத்தனமா யோசிக்கிறேனா? இவ்ளோ நல்லா யோசிக்கிறேன்ல. அப்டி நீங்களும் நல்லபடியா யோசிங்கய்யா.

கடைசியா ஒரு சின்ன வேண்டுகோள், நீ என்ன சொல்றது நாங்க என்ன செய்யிறதுன்னு உங்க செயற்குழு தீர்மானம் போட்டுருச்சுன்னா, குறைந்தபட்சம் உங்க அமைப்போட பெயரையாச்சும் மாத்திருங்கய்யா. பாவம் இராமரு. அயோத்தியில ஆரம்பிச்சு ஆதம் பாலம் வரைக்கும் அவரு அடி பின்னி எடுத்துட்டீங்க. போதும் விட்ருங்க அவர, இதுக்கு மேல அவரால தாங்க முடியாது. அதான் ஏற்கனவே ஒரு கட்சி ஒட்டு மொத்தமா அவரக் குத்தகைக்கு எடுத்து கும்மிக்கிட்டு இருக்குல்ல, அப்றம் என்ன போட்டிக்கு நீங்க வேற?

பிற்சேர்க்கை:
இந்த இராம் சேனா, பிங்க் ஜட்டி கூட்டம் எல்லாம் போதாதுன்னு வா(மு)ட்டாள் நாகரசு வேற கலத்துல எறங்கிட்டாரு இப்ப. அவரு காதலர்களுக்கு ஆதரவா அவங்க ஊரச் சுத்தி வர்றது வாகன வசதி செஞ்சுத் தரப்போறாராம்.

எத்தனையோ கிராமங்கள்ல காலையில பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு கூட பேருந்து வசதியில்லாம எம்புட்டு குழந்தைங்க நடந்து போயி படிச்சுட்டு வர்றாங்க. அவங்களுக்கு வாகன வசதி செஞ்சுத் தரலாம்ல இவரு? இவரு தமிழ்நாட்டை எதிர்கிறதுல மட்டும் தான் கோக்குமாக்கா யோசிப்பாருன்னு நினைச்சேன், அப்டியெல்லாம் இல்லீங்க, நாங்க எப்பவுமே இப்டித்தான் கோக்கு மாக்காத்தான் யோசிப்போம்னு நிருபிச்சுக்கிட்டு இருக்காரு. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:30 PM
எனது ஐம்பதாவது பதிவாக நான் எழுதிய சுந்தரி டீச்சர் எனும் பதிவை படித்தவர்களுக்கு என் 17 வருடத் தேடல் தெரிந்திருக்கும்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கையின் மூத்தப்பதிவர் கோவி.கண்ணண் அண்ணண் அவர்கள் தனது இப்பயணத்தின்போது நாகையில் அரும்பாடுபட்டு எனது மதிப்பிற்குறிய டீச்சரின் தற்போதைய இருப்பிடம், தொலைபேசி எண் ஆகியவற்றை கண்டறிந்து எனது 17 வருட தேடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, என்னை அளவில்லாப் பேரின்பத்தில் ஆழ்த்திவிட்டார்.

டீச்சரின் தொலைபேசி எண் கிடைத்த உடனே தொடர்பு கொண்ட நான் என் ஊர் பெயரான மாரநேரியை சொல்லி முடிக்குமுன்னர் டீச்சர் யாரு பால்ராஜா, டைட்டஸா(என் அண்ணண்) என கேட்டது அதைவிட ஆனந்தம். டீச்சரும் எங்களை மறக்கவில்லை என அறிந்த போது மிக மிக மகிழ்சியடைந்தேன்.

அடுத்த முறை இந்தியப் பயணம் எப்போது செய்வேன், எப்போது என் டீச்சரை நேரில் சந்திப்பேன் என மிக ஆவலாய் உள்ளேன்.

தனது இந்தியப் பயணத்தில் இடைவிடாது பல இடங்களுக்கும் சென்று பல பதிவுலக நண்பர்களையும் சந்தித்து அளவில்லா மகிழ்சியில் ஆழ்த்திய கோவியார், இந்தப் பயணத்தின் வாயிலாக எனக்கு செய்துள்ள உதவி என் வாழ்நாளில் எந்நாளும் மறக்க இயலாது. நன்றி என்று சொல்லி அவரை அந்நியப்படுத்த விரும்பவில்லை.

அண்ணண் அப்துல்லா தனது பதிவில் வலையுலக உறவுகளைப் பற்றி சொல்லியிருந்த இந்த வாக்கியம் "எங்களுக்கெல்லாம் இது வெறும் வலை உறவு அல்ல! வாழ்க்கை உறவு!" எத்தனை சத்தியமான சொற்கள் இவை? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:29 PM
ஆபரேஷன் கமலா ( பெயரெல்லாம் நல்லாத்தான் வைக்கிறாய்ங்க). இந்த பெயர படிச்சுட்டு ஏதோ தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கோ, அல்லது ஏதாவது ஒரு முக்கிய நடவடிக்கைக்கோ இப்டி ஒரு பெயர வைச்சு ஏதோ நம்ம ராணுவம் சாதிச்சுருக்கும்னு நினைச்சா நம்மள விட கேணயன் வேற எவனும் இருக்க மாட்டான்.

தேவகவுடா செஞ்ச கூட்டணித் துரோகத்துனால முதல்வர் நாற்காலியில ஏறுன வேகத்துல இறங்குன எடியூரப்பா, சம்பந்தமேயில்லாம தமிழக எல்லையில இருக்க ஹோகேனக்கல்ல வந்து பிரச்சனைய எல்லாம் கிளப்பி ஓட்டுக்காக அரசியல் செஞ்சு தேர்தல சந்திச்சும், தனி பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாகத்தான் அவங்களால ஜெயிக்க முடிஞ்சது எல்லாருக்கும் தெரியும். அத சரி பண்ண அடிச்சாங்க பாருங்க ஜனநாயகத்து மேல ஓங்கி ஒரு அடி, அதுக்குப் பெயர் தான் ஆபரேஷன் கமலா.

அதன்படி இவங்க மொத்தம் 8 எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள விலைக்கு வாங்கிட்டாங்க. ஆனா கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ஞ்சுரும்ல? இதனால கட்சி தாவுன பாசக்காரங்கள எல்லாம் அவங்க சட்டமன்ற உறுப்பினர் பதவியில இருந்து விலகச் சொல்லி, அவங்கள தங்களோட கட்சியில உறுப்பினராக்கி, இடைத்தேர்தல்ல திரும்பவும் அவங்களையே நிக்க வைச்சு 8ல 5 சீட்டுல பாரதிய சனதா கட்சிகாரங்க வெற்றியடைஞ்சு சட்ட சபையில தனிப் பெரும்பான்மைய வாங்கிட்டாங்க. அதுக்கு தான் ஆபரேஷன் கமலா.

நாட்டுல நாங்க மட்டும்தான் யோக்கியம், மத்தவங்க எல்லாம் அயோக்கியர்கள்னு சொன்ன கட்சி, நாடாளுமன்றத்துலயே கோடிக்கணக்குல பணத்த கொட்டி எங்கள விலைக்கு வாங்கப் பார்த்தாங்கன்னு எல்லாம் அழுகாச்சி ஆட்டம் ஆடுன கட்சி தன் ஆட்சிய காப்பாத்திக்க என்னமா ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுத்துருக்காங்க பாருங்க மக்களே. ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க நாட்டாமை வர்றாரு சொம்பத் தூக்கி உள்ள வையின்னு. இவங்களுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க இவங்க கட்சியில இருந்து எங்க எங்கயோ கொள்ளையடிச்ச பணத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்குறது எல்லாம் சரி, ஆனா இந்த இடைத்தேர்தல் என்ன இவங்க கட்சி செலவுலயா நடந்துச்சு? அது யாரு ஊட்டு பணம்? நம்ம வரியா குடுக்குற பணம் தானே?

இன்னைக்கு ஒரு சாதாரன குடிமகன் கையில கூட அலைபேசி இருக்கு. அதுக்கு அவன் செலுத்துற காசுல 12% வரி, ஒரு லிட்டர் பெட்ரோலோட அடக்க விலை 11 ரூபாய்தானாம். ஆனா விக்கிற விலை 48 முதல் 55 ரூபாய் வரை. மிச்ச காசு எல்லாம் என்ன? நாம மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கொடுக்குற வரி தானே? அதுல இருந்து தானே இந்த இடைத் தேர்தல் முதுகுத் தேர்தல் எல்லாம் நடக்குது? ஆக முனுசாமி டிவிஸ் 50க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா அதுல தர்ற வரி, குப்புசாமி 300 ரூபாய்க்கு தன்னோட அலைபேசிக்கு கட்டணம் செலுத்துனா அதுல வர்ற 36 ரூபாய் வரி இதெல்லாம் எங்க போவுது பாருங்க. இவுங்களோட ஆபரேஷன் கமலாவுக்கு நாம தெண்டம் அழுவ வேண்டியிருக்கு.

ஏற்கனவே தரம்சிங் தலைமையில அமைந்திருந்த காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசை கலைத்து குமாரசாமி தலைமையில ஆட்சி அமைக்க வைச்ச பாஜகவுக்கு கூட்டணி தர்மத்தை பத்தி பேச அருகதையே இல்லையில்லைன்னு தெரிஞ்சதுனாலத்தான் எடையூரப்பா ஹோகேனக்கல் பிரச்சனைய ஆரம்பிச்சு ஓட்டுப் பொறுக்கும் அரசியல ஆரம்பிச்சாரோ?

இம்புட்டு நல்ல பாரதிய சனதா கட்சியோட டெல்லி தலைமை அலுவலகத்துல அவங்க பாதுகாப்பு பெட்டகத்துல வைச்சுருந்த 2.6 கோடிய அவுங்க ஆளுங்கள்லயே யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்களாம். யோக்கியவானுங்க காவல்துறையில கூட புகார் குடுக்காம தனியார் துப்பறியும் நிறுவனங்க வைச்சும், ஜோசியம், வாஸ்து எல்லாம் பார்த்து அந்த சொம்ப தூக்குன நாட்டமைய கண்டுபிடிக்கப் போறாங்களாம். என்னக் கொடுமை சார் இது?

இலங்கை அரசாங்கம் செய்யிறது எல்லாம் அநியாயம்னாலும், அங்க எனக்கு புடிச்ச ஒரே ஒரு விசயம் அங்க இடைத்தேர்தல்னு ஒன்னு கிடையவே கிடையாது. எத்தன தடவ எதிர்கட்சி ஆளுங்கள கொன்னாலும், அந்த காலி ஆகிற இடத்துக்கு பொதுத் தேர்தல்ல எந்த கட்சி வெற்றி பெற்றுச்சோ அதே கட்சிதான் வேற ஒரு உறுப்பினர நியமிக்குமேத் தவிர இடைத் தேர்தல், முதுகுத் தேர்தல் எல்லாம் அங்க கிடையாது. இடைத் தேர்தல்னு ஒன்ன வைச்சுக்கிட்டு நாம படுற பாடு இருக்கே, அதப் பத்தி நான் வேற சொல்லணுமா? முடிஞ்சா திருமங்கலம் தொகுதிகாரங்கள கேட்டுத் தெரிஞ்சுகங்க.

இப்டியெல்லாம் ஜனநாயகப் படுகொலைகள் நடக்கிறத தடுக்க இடைத்தேர்தல முதல்ல ஒழிக்கணும். மதிமுக வெற்றி பெற்ற திருமங்கலம் தொகுதியில இடைத்தேர்தல்ல தன்மான சிங்கம் வைகோகிட்ட கேட்காமலேயே புரட்சித் தலைவி தன் கட்சி வேட்பாளரை நிறுத்துறது, தமிழகத்து ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இவுங்க இங்க பணம் கொடுத்தாங்க, அவுங்க அங்க பணம் கொடுத்தாங்கன்னு புகார் கொடுக்குறது, இருக்க வேலையெல்லாம் பத்தாதுன்னு இந்த இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பு வேலையின்னு நம்ம துணை ராணுவம் வர்றது, இருக்க அமைச்சர் எல்லாம் தன்னோட வேலையெல்லாம் விட்டுட்டு பிரச்சாரம் செய்யிறது, முதல்வர் வரைக்கும் போயி பிரச்சாரம் செய்யிறது இப்டி ஆயிரத்தெட்டு தொல்லைகளையும், அநாவசியச் செலவுகளையும் தடுக்க முதலில் இந்த இடைத் தேர்தல்களை ஒழிக்க வேண்டும்.

ஆனா ஒன்னு நாங்க மட்டும் தான் யோக்கியமானவனுங்கன்னு சொல்லிக்க இங்க எந்த கட்சிக்கும் அருகதையில்ல. எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கந்தான். அப்ப தேர்தல்ல நாமெல்லாம் ஓட்டுப் போடணுமா, போடாம விட்டா தப்புன்னு சொல்றாங்களேன்னு கேட்குறீங்களா? கட்டாயம் ஓட்டுரிமை இருக்கவங்க எல்லாம் ஓட்டு போடணும். உங்க உரிமைய விட்டுக் கொடுக்க கூடாது. 49 ஓ இருந்தா அதுல போடுங்க. இல்லன்னா இருக்கதுல நல்லவரு யாருன்னு பார்த்து ஓட்டுப் போடுங்க. ஏன்னா இன்னையத் தேர்தல் “ Choosing the best among the worst".

பின் குறிப்பு: எங்க அநியாயம் நடந்தாலும் தாண்டிக் குதிச்சு தட்டிக்கேட்கின்ற பத்திரிக்கையாளர் சோ இந்த ஆபரேஷன் கமலா பத்தி ஏதாச்சும் எழுதுனாரான்னு துக்ளக் படிக்கிறவங்க முடிஞ்சா பின்னூட்டமிடுங்க. அப்டி அவரு வேலைப்பளுவால எழுதாம விட்ருந்தா அவருக்குப் பதிலா டோண்டு சார் ஆச்சும் பதில் சொல்லுவார் என நம்புவோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:35 PM
மீண்டும் ஒரு எதிர்பதிவு, இம்முறை என் அன்பிற்குறிய அண்ணண் கோவியாரின் பதிவுக்கு எதிர்பதிவு எழுத வேண்டிய நிர்பந்தம் எழுந்துவிட்டது. காரணம் அவர் எழுதிய "பிரபல" பதிவர்கள் - இது அன்பால சேர்ந்த கூட்டம் :) என்ற பதிவு தான் காரணம்.

கோவி.க அண்ணே என்னாச்சு உங்களுக்கு?
இன்னைக்குத்தான் இந்தப் பதிவ படிச்சேன், இப்டி ஒரு மெகா மொக்கைப் பதிவு தேவையா?
பிரபலப் பதிவராயிருந்தா என்ன, பிரபலமில்லாமல் இருந்தா என்ன? ஏன் இந்த தேவையற்ற அளவுகோல்கள்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படிப்பட்ட அளவுகோல்களை கொண்டு நான் பிரபலங்களை தீர்மானிக்க விரும்பவில்லை. மேலும் சூடான இடுகைகளையும் நான் நம்புவதில்லை. அதிக பேர் படித்தபின்னர் தானே சூடாண இடுகையில் வருகிறது? படித்தவர்கள் அத்தணை பேரும் அது சிறந்த பதிவு என கருதினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நீங்கள் சொல்லியது போல் அன்பினால் சேர்ந்த கூட்டம் நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்கள் என்ற ஆவலில் படித்து விட்டு ச்சே என்னாச்சு கோவியாருக்கு, இப்டியெல்லாம் மோசமா எழுதியிருக்காரேன்னு புலம்பிக்கிட்டு கூட போயிருக்கலாம் இல்லையா? இது உங்களுக்கு மட்டுமல்ல, சூடாண இடுகைகள்ல வர்ற பதிவுகளை எழுதும் எல்லாருக்குமே பொருந்தும். நான் கூட சூடாண இடுகைகள்ல வர்ற பல பதிவுகளை படிச்சுட்டு அடக்கெரகமேன்னு தலையில அடிச்சுக்கிட்டு போயிருக்கேன்.

உதாரணங்கள் நிறைய கொடுக்கிற அளவுக்கு தலைப்புகளும், எழுதுனவங்களும் நினைவுல இருந்தாலும், அவர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அவற்றை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

பிரபலம் என்பதால் எந்த கிரீடமும் வந்துவிடுவதில்லை, பணம் அல்லது வேறு ஏதாவது பலன்களும் வரப் போவதில்லை. பின் ஏன் இந்த அளவுகோல்கள்? அதற்கு நீங்கள் ஒரு பதிவு எழுத வேண்டும்? இந்த அளவுகோல்களும், மதிப்பீடுகளும் வெறும் மொக்கைப் பதிவுகளுக்காக எழுதப்பட்டிருந்தால் கூட தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து.

2009 ஆம் ஆண்டின் முதல் எதிர்பதிவை எழுதிய துர்பாக்கியத்திற்காக வருந்துகிறேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:36 AM
என் அன்புக்குறியவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறந்துள்ள இவ்வாண்டு எல்லா வளங்களையும் எல்லாருக்கும் அளிக்கட்டும்.

தீவிரவாதமும், ஜாதி, மத மோதல்களும் இல்லாத ஆண்டாய் அமையட்டும்.

உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருப்பதால் இவ்வாண்டு எல்லாருமே மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. பணியில் நமது இருப்பை உறுதி செய்ய நம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு, பன் முகத் திறன் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். எனவே மேலும் மேலும் புதுத் திறமைகளை வளர்த்துக் கொண்டு நம்மை மெருகேற்றிக் கொள்ள இவ்வாண்டில் முயற்சிகளை மேற்கொள்வோம்.

பதிவுலகில் எந்த பதிவரசியலும், அநாகரீகமான தாக்குதல்களும் இல்லாத ஆண்டாகவும்,கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ளும் ஆண்டாகவும் இவ்வாண்டு அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பணிச்சுமைகளால் தொடந்து எழுத முடியாது மிக நீண்ட இடைவெளியை விட்டிருந்த நான் இவ்வாண்டில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். ஊக்கமளித்தவர்களுக்கும், தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தவர்களும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க