Author: ஜோசப் பால்ராஜ்
•7:28 PM
பதிவர் உலகிற்கு புதுவரவான நான் முதன் முதலில் கலந்துகொண்ட முதல் பதிவர் சந்திப்பு.

கோவி.கண்ணண் அண்ணண் மிக வேகமாக நேற்று இரவே இச்சந்திப்பை குறித்து எழுதியிருந்தாலும், என்னையும் எழுத பணித்ததால் எனது பார்வையில் இச் சந்திப்பை விவரிக்கிறேன்.

ஏற்கனவே கோவை பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொள்ளாமலேயே என்னை பங்கெடுக்க வைத்த பெயர் குழப்பம் இங்கு நிகழ்ந்துவிடுமோ எனும் அஞ்சும் அளவுக்கு ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று ஜோ.. அதிலும் L L DASS எனும் பெயரில் பதிவு எழுதிவரும் ஜோசப் பெனடிக்ட் என்பவர், எனது முழுபெயரான ஜோசப் பெனடிக்ட் பால்ராஜில் முக்கால்வாசியை வைத்துக்கொண்டுள்ளார்.

சந்திப்பின் முக்கிய நிகழ்வுகளை அண்ணண் கோவி.கண்ணண் ஏற்கனவே அவரது பதிவில் சொல்லியுள்ளதால் அவர் சொல்லாததை சொல்கிறேன்.

நான் வலை பதிவராகக் காரணம் என்ன என்ற கேள்வியை கோவி.க அண்ணண் கேட்டு உரையாடலை ஆரம்பித்துவைத்தார். அதுக்கு அப்றம் சிற்றுண்டி உண்ண மட்டுமே அவர் வாயை திறந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிப் மீரான் அண்ணாச்சியின் வலைப்பூவை விகடன் மூலம் அறிந்துகொண்டு, அவரது எழுத்தின் மேல் ஆர்வம் கொண்டு பதிவு எழுத ஆரம்பித்த நான் தமிழ்மணத்தில் இணைந்தது மிகச் சமீபத்தில்தான். குசும்பன் எனது வகுப்புத்தோழர். (என் தொந்தரவு தாங்கலன்ன நீங்க தாக்குறதுக்கு ரெண்டு முகவரி கொடுத்துட்டேன்).

நாகர்கோயில் வழக்கில் கேட்க மிக இனிமையானத் தமிழில் என்னிடம் விவசாயம் குறித்த செய்திகளை கேட்டு உரையாடலை ஆரம்பித்த ஜோவுக்கு பதிலளிக்க ஆரம்பித்தவுடன், விவசாய கடன் தள்ளுபடியால் யாருக்கு நன்மை, எல்லா விவசாயிகளும் இதனால் பலனடைகின்றார்களா என்ற அருமையான் வினாவோடு முகவை மைந்தன் எங்கள் உரையாடலில் இணைந்தார். ஆர்வமாய் சென்ற அந்த உரையாடல் எனது உழவும் உழவர்களும் தொடரில் ஒரு பாகமாய் எழுதப்பட வேண்டிய ஒன்று.

ஜோவின் அழகுத்தமிழ் உச்சரிப்பு எனக்கு யாழ்பாணத் தமிழை நினைவுக்கு கொண்டுவந்தது என்பதை அவரிடம் வினவிய போது கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும், ஈழத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள வரலாறு பூர்வமான தொடர்பை அழகாய் விவரித்தார் ஜோ.

இதற்கிடையில் மலையேற இயலாதவர்களின் அழைப்பால் நாங்கள் இடமாற்றம் செய்த போது இறை நம்பிக்கை குறித்த ஒரு சிறு உரையாடல் எங்களுக்குள் நடந்தது.( இது கோவி.க அண்ணணுக்கு தெரியாது.)

சிரமம் வரும்போதுதான் நமக்கு இறை நம்பிக்கையே வருகின்றது, நமக்கு அடுத்துவரும் தலைமுறை நாம் சந்தித்த சிரமங்களை சந்திக்க வாய்பில்லை என்பதால் அவர்களுக்கு இறை நம்பிக்கை இருக்குமா இருக்காதா ? என்ற கேள்விக்கு நான் அடுத்த தலைமுறை இறைநம்பிக்கையில் பெற்றோர்களின் கட்டாயத்தால் ஈடுபாடு காட்டுமே தவிர மதம் குறித்த நம்பிக்கையில் சுதந்திர சிந்தனை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்று சொன்னேன். ஆனால் மற்றவர்கள் ஒரு அருமையான கருத்தை எடுத்துரைத்தார்கள், நன்கு வளர்ச்சியடைந்த அமெரிக்காவிலேயே, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பலரும் தீவிர பக்தியுள்ளவர்களாய் மாறினார்கள் என்ற மேற்கோளுடன் அவர்கள் சொல்லியது எனது கருத்தை சிரமம் அல்லது பயம் ஏற்படும் போதுதான் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும் என மாற்றிக்கொள்ளச் செய்தது.

ஒரு காலத்தில் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பெண்ணோ, பையனே பிற மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினால் கட்டாயம் பிற மதத்தை சேர்ந்தவர் மதம்மாறி கத்தோலிக்க மதத்தை தழுவ வேண்டும் என்று ஒரு கோட்பாடு இருந்ததாம். ஆனால் இப்போது அப்படியில்லை. மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதைத் தான் கத்தோலிக்க மதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என குறிப்பிட்டிருந்தோம்.

இடமாற்றம் செய்து எல்லோருடனும் அமர்ந்து விவாதிக்க ஆரம்பித்த பின்னர் பல சிறு சிறு விவாதங்கள் இடம்பெற்றன. அவற்றில் முக்கியமாய் நான் குறிப்பிட விரும்புவது பதிவராய் இல்லாமல் வாசகராய் மட்டும் இருந்தாலும் மிகுந்த ஆர்வமுடன் இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஆராய்ச்சியாளரான திரு.பாஸ்கரன் அவர்கள் கூறிய தகவல்கள்.

சிங்கப்பூரில் இந்திய மாணவர்களுக்கு உள்ள உயர் கல்வி வாய்ப்புகள், சிங்கப்பூரில் நம் மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறுவிதமான கல்வி உதவித்தொகைகள் தனி ஒரு பதிவு எழுதும் அளவுக்கு தகவல்களைத் தந்துள்ளார். அவர் கட்டாயம் பதிவெழுத வேண்டும், இது போன்ற உபயோகமானத் தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினோம். அப்படி அவரால் எழுத முடியாதபட்சத்தில் அவரிடம் இருந்து விவரங்களை சேகரித்து நாங்கள் எழுதுவோம் என தீர்மானித்தோம்.விரைவில் அது வெளிவரும்.

சிற்றுண்டி பரிமாறிய போது, திருநெல்வேலிக்கு அருகே உள்ள நாகர்கோயிலை சேர்ந்த ஜோவுக்கு கோவி.க அண்ணண் அல்வா தர மறந்துவிட்டார். உடனே திருநெல்வேலிக்கு அல்வா இல்லையா என ஜோ கதற ஆரம்பித்துவிட்டார். உட‌னே அவருக்கு அல்வா கொடுத்து, திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த‌ பெருமையை நான் பெற்றுக்கொண்டேன்.

அடுத்ததாக கோவி.கண்ணண் அண்ணண் தன் பதிவில் ஒரு சக பதிவர்க்கு உதவி செய்வது குறித்து எழுதியிருந்தார். நான் இது குறித்து விவரித்தபோது ஒருமித்த குரலில் எல்லோரும் உதவ முன்வந்தார்கள். நான் சீனா அய்யாவை இதுகுறித்து தொடர்பு கொண்ட போது தற்போதைய தேவைக்கு அதிகமாகவே நிதியை நல்ல உள்ளங்கள் அள்ளிக்கொடுத்துவிட்டதால் தற்போது நிதி தேவையில்லை என்று சொல்லி எங்களுக்கு சொல்லிவிட்டார். அந்த நல்ல காரியத்தில் எங்களால் பங்கு பெற முடியாமல் போய்விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கோ ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு கடைசி நேரத்தில் சந்திப்புக்கு எகிறி குதித்து வந்த பாரி.அரசு, வெண்பா புலவர் அகரம் அமுதாவுடன் ஆர்வமாய் இலக்கிய விவதத்தில் இறங்கினார்.

கோவி.கண்ணண் அவர்கள் தள்ளாத இந்த வயதில் தலைமை பெறுப்பை சுமந்துகொண்டு சிரமப்படுவதால் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, தலைவர் தலைமை எனும் தலைப்பில் மிக அழகான விவாதம் ஆரம்பித்தது. உங்களுள் தலைவனாக விரும்புபவன் முதலில் ஊழியனாய் இருக்கட்டும் என்ற பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி நான் பேச, அதை அனைவரும் ஆதரித்ததால் இனி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிதான் உண்டு, எங்களுள் தலைவர், தலை போன்ற வார்த்தைகளை கூட பிரயோகிப்பதில்லை என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

ஆனால் முகவை மைந்தன் இந்த தீர்மானத்தை விடாபிடியாக பிடித்துக் கொண்டு சந்திப்பு முடிந்தவுடன் சாலமன் மீன் வாங்க சென்ற போது, மீனின் தலையைக்கூட தலை என்று சொல்ல மறுத்தது, எங்கள் தீர்மானங்களை நாங்கள் எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

சந்திப்பு நடந்த புல்வெளியில் இருந்து காபி குடிக்க செல்லும் வழியில் பாரி.அரசு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி மிக இளம்வயதிலேயே மரணத்தை தழுவியவர்கள் குறித்து கூறினார். இதுபற்றி மேலதிக தகவல்களை அவர் திரட்டிக்கொண்டு இருப்பதாகவும்,விரைவில் முழுத் தகவல்களுடன் பதிவிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

சந்திப்புக்கு இடத்தை மலைமேல் தேர்ந்தெடுத்து பல படிகள் ஏறிவரச் செய்ததற்காக கோவி.கண்ணண் அண்ணண் மீது சிறு வருத்தம் முதலில் இருந்தாலும், பாரி.அரசு கூறிய இளம் வயதினரின் மாரடைப்பு மரணங்களை கேள்விப்பட்டவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியதின் அவசியம் புரிந்ததால் கோவி.க அண்ணாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன்.

ஏ ஃபார் ஆப்பிள் தொடரில் நீங்கள் அதிகம் பார்க்கும் தளங்கள் (சைட்) குறித்த தகவல்களை கொடுக்கச் சொன்னால், தான் பார்த்த பெண்களின் பட்டியலை கொடுத்த அண்ணண் புதுகை அப்துல்லாவை கண்டித்து ஒரு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

மேலும் யூத்ஃபுல் விகடனில் கலக்கும் அண்ணண் லக்கி லுக், எங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்திய பரிசல்காரர், எங்கள் மனம் கவர்ந்த லதானந் மாமா ஆகியோரை பாராட்டி தீர்மானம் நிறைவேறியது.

குசும்பனை கண்டித்த நிறைவேற வேண்டிய தீர்மானம் எனது தனிப்பட்ட வேண்டுகோளால் கைவிடப்பட்டது.

மலேசியத் தமிழ் பதிவர்கள் அவர்களுள் யார் பதிவிட்டாலும், மற்றவர்கள் கட்டாயம் பின்னூட்டமிட்டு ஆதரிப்பதால், நாமும் அதேபோல் ஒருவருக்கு ஒருவர் பின்னூட்ட ஆதரவு அளிப்பது என்ற தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேறியது.

இப்ப‌டி ப‌ல‌ உப‌யோக‌மான‌ அலுவ‌ல்க‌ளை த‌ன்ன‌க‌த்தே கொண்ட‌தாக‌ இச்ச‌ந்திப்பு நிக‌ழ்ந்த‌தால், குசும்பன் அமோதித்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் பதிவர்கள் அவர்கள் எந்த துறையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் தமிழ் மேல் அவர்கள் காட்டும் ஆர்வம் கட்டாயம் தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது ஐயமில்லாத உண்மைதான்.

கேரட் அல்வாவும், பீட்ரூட் அல்வாவும் உண்டாதால் மட்டுமல்லாது சக பதிவர்களை சந்தித்தாலும் நெஞ்சு நிறைய இனிப்பு சுவை நிரம்பியிருந்தது என்றால் அது மிகையாகாது.
Udanz
This entry was posted on 7:28 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

26 comments:

On Mon Aug 04, 10:21:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

மி த பர்ஸ்ட்??
நல்லா சொல்லியிருக்கீங்க.
சிலவற்றை விரிவாக சொலியிருக்கலாம்.

 
On Mon Aug 04, 10:45:00 PM GMT+8 , anujanya said...

ஜோசப்,

மெல்லிய நகைச்சுவையோடு சுவையான பதிவு. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

 
On Mon Aug 04, 11:27:00 PM GMT+8 , Anonymous said...

உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிடுவானுங்க.

இந்த பதிவனுங்கள எல்லாம் நம்பாதீங்க, நெம்ப மோசமானவனுங்க.

பெசாம பொழப்ப பாருஞ்சாமி.

 
On Tue Aug 05, 12:07:00 AM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

//மலேசியத் தமிழ் பதிவர்கள் அவர்களுள் யார் பதிவிட்டாலும், மற்றவர்கள் கட்டாயம் பின்னூட்டமிட்டு ஆதரிப்பதால், நாமும் அதேபோல் ஒருவருக்கு ஒருவர் பின்னூட்ட ஆதரவு அளிப்பது என்ற தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேறியது. //

இது எப்போது நடந்தது... புதிய தகவலாக இருக்கிறதே...

 
On Tue Aug 05, 02:04:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

என் பெயரை தவறுதலாய் எழுதி வெளியிட்டமைக்க்காக என் இதயச் சிறையில் உங்களை அடைக்கிறேன்!

பரிசல்காரன்

 
On Tue Aug 05, 02:05:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

//இப்ப‌டி ப‌ல‌ உப‌யோக‌மான‌ அலுவ‌ல்க‌ளை த‌ன்ன‌க‌த்தே கொண்ட‌தாக‌ இச்ச‌ந்திப்பு நிக‌ழ்ந்த‌தால், குசும்பன் அமோதித்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் பதிவர்கள் அவர்கள் எந்த துறையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் தமிழ் மேல் அவர்கள் காட்டும் ஆர்வம் கட்டாயம் தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது ஐயமில்லாத உண்மைதான். //

பதிவர் சந்திப்புல கூட மெசேஜா?

தாங்கலடா சாமி!

 
On Tue Aug 05, 02:08:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//வடுவூர் குமார் said...
மி த பர்ஸ்ட்??//

சந்தேகமே இல்லை, நீங்க தான் முதல்ல.
கோவி.க அண்ணணின் பதிவில் விடுபட்டவையை மட்டும் தான் எழுதவேண்டும் என்ற நினைவில் சில விசயங்கள் விடுபட்டிருக்கலாம். மன்னிக்கவும்.

 
On Tue Aug 05, 02:10:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//
அனுஜன்யா said...
ஜோசப்,

மெல்லிய நகைச்சுவையோடு சுவையான பதிவு. வாழ்த்துக்கள். //

வாருங்கள் அனுஜன்யா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

 
On Tue Aug 05, 02:11:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வணக்கம் பெயரிலி.
உங்கள் பெயரையாவது சொல்லியிருக்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்டி யாராவது உசுப்பேத்தலனா, பாதி நாளு தமிழ்மண முகப்பு வெறுமையாத்தான் இருக்கும். எப்டி பதிவு வரும்?

 
On Tue Aug 05, 02:15:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//
பரிசல்காரன் said...
என் பெயரை தவறுதலாய் எழுதி வெளியிட்டமைக்க்காக என் இதயச் சிறையில் உங்களை அடைக்கிறேன்!//

பரிசல்காரரின் பரிசலில் ஓர் இடம் கிடைக்காதா என ஏங்கியவனுக்கு இதய சிறையில் இடம் என்பது என் பதிவுக்கு நோபல் பரிசு கிடைத்தால் அடையும் மகிழ்ச்சியைவிட அதிகமாய் மகிழவேண்டிய விசயமல்லாவா?
இதற்காகவே இன்னும் பல தவறுகள் செய்யலாம்.

நாங்க எல்லாம் ஒரு இடத்துல கூடி கும்மி அடிச்சா, நாட்டுக்கு ஒரு செய்தி கூட சொல்லாம போக முடியாதுல, நாங்க எல்லாம் சமூக அக்கறையுள்ள பதிவர்கள். எங்களையெல்லாம் குசும்பன்னு நினைச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்.

 
On Tue Aug 05, 02:23:00 AM GMT+8 , Anonymous said...

//ஆனால் மற்றவர்கள் ஒரு அருமையான கருத்தை எடுத்துரைத்தார்கள், நன்கு வளர்ச்சியடைந்த அமெரிக்காவிலேயே, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பலரும் தீவிர பக்தியுள்ளவர்களாய் மாறினார்கள் என்ற மேற்கோளுடன் அவர்கள் சொல்லியது எனது கருத்தை சிரமம் அல்லது பயம் ஏற்படும் போதுதான் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும் என மாற்றிக்கொள்ளச் செய்தது.//


அப்படியா?

எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லையே?
யாரவது தொடர்பான தரவுகள் தரமுடியுமா?

தாக்குதலுக்கு பின் அமெரிக்கர்களின் நாட்டுப்பற்று பொங்கியெழுந்தது என்னவோ உண்மைதான். சீனாவில் இருந்து இறக்குமதி செய்த தேசியக் கொடிகள் ஒவ்வொரு வாகனத்திலும் பட்டொளி வீசிப் பறந்தது. பின்னர் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக அந்தக் கொடிகள் வெயில் காய்ந்து, மழையில் நனைந்து நைந்து நாசமாய்ப் போயின.

இதுதான் நான் கண்டது.

மற்றபடி உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன்.

 
On Tue Aug 05, 03:16:00 AM GMT+8 , கையேடு said...

சந்திப்பு குறித்த நிகழ்வுகளை சுவையாக விளக்கியிருக்கிறீர்கள் பால்.. :)

 
On Tue Aug 05, 09:21:00 AM GMT+8 , ஜோ/Joe said...

மிக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் .
செல்பேசி வகைகள் பற்றியும் சிறிது நேரம் சுவாரஸ்ய தகவல்கள் பரிமாறபட்டது .

பாஸ்கர் அவர்கள் வலைப்பதிவு ஆரம்பிப்பதற்கு முன்னோட்டமாக குறைந்த பட்சம் பின்னூட்டம் இடத் தொடங்கலாம் ..அவருடைய ஆர்வத்தை பாராட்டியே ஆக வேண்டும் .

சிங்.ஜெயக்குமார் என்ற பதிவர் நேற்று அழைத்து முன்னரே தெரியாமல் போனது குறித்து வருந்தினார் .

அடுத்த முறை இன்னும் பல பதிவர்களை வரவழைக்க முடியுமென நம்புகிறேன்.

 
On Tue Aug 05, 09:21:00 AM GMT+8 , ஜோ/Joe said...
This comment has been removed by the author.
 
On Tue Aug 05, 09:34:00 AM GMT+8 , கயல்விழி said...

//கோவி.கண்ணண் அவர்கள் தள்ளாத இந்த வயதில் தலைமை பெறுப்பை சுமந்துகொண்டு சிரமப்படுவதால் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டும் //

அப்படியா?

நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

 
On Tue Aug 05, 12:47:00 PM GMT+8 , குசும்பன் said...

//நான் தமிழ்மணத்தில் இணைந்தது மிகச் சமீபத்தில்தான். குசும்பன் எனது வகுப்புத்தோழர். (என் தொந்தரவு தாங்கலன்ன நீங்க தாக்குறதுக்கு ரெண்டு முகவரி கொடுத்துட்டேன்).//

நல்ல நண்பன்!!! வேறு என்ன சொல்ல:(

 
On Tue Aug 05, 12:50:00 PM GMT+8 , குசும்பன் said...

//கோவி.கண்ணண் அவர்கள் தள்ளாத இந்த வயதில் தலைமை பெறுப்பை சுமந்துகொண்டு சிரமப்படுவதால் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது,//

என்னது தலைவர் கோவியை தூக்கிட்டீங்களா? சொன்னபடி செஞ்சிட்டீயே தோழா:)))

கோரிக்கையை எழுப்பியது நீங்கதானே!!!

 
On Tue Aug 05, 12:58:00 PM GMT+8 , குசும்பன் said...

//குசும்பனை கண்டித்த நிறைவேற வேண்டிய தீர்மானம் எனது தனிப்பட்ட வேண்டுகோளால் கைவிடப்பட்டது.//

அவ்வ்வ் இந்த பச்சமண்ணை கண்டித்து தீர்மானமா? ஏன் குறைவா மொக்கை போடுவதாலா?

 
On Tue Aug 05, 02:50:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

இந்த பதிவு எப்போது வந்தது...ஒரு சொல் சொல்லி இருக்கப்படாதா ?

 
On Tue Aug 05, 02:54:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

கோவி.கண்ணண் அவர்கள் தள்ளாத இந்த வயதில் தலைமை பெறுப்பை சுமந்துகொண்டு சிரமப்படுவதால் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டும்

- ஒரு படத்தில் தங்கவேலு சொல்லுவார். 'தள்ளாத வயது எதையும் தள்ளாதா வயது !'
எனக்கு பொருத்தமாக இருக்கும் !

 
On Tue Aug 05, 03:23:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

me the 21st!!!!
:)

 
On Tue Aug 05, 03:50:00 PM GMT+8 , கிரி said...

//கோவி.கண்ணண் ஏற்கனவே அவரது பதிவில் சொல்லியுள்ளதால் அவர் சொல்லாததை சொல்கிறேன்//

நானும்

//நமக்கு அடுத்துவரும் தலைமுறை நாம் சந்தித்த சிரமங்களை சந்திக்க வாய்பில்லை என்பதால் //

உண்மை தான்..ஆனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனை வேறு மாதிரி இருக்கும் என்றே கருதுகிறேன்.

//உட‌னே அவருக்கு அல்வா கொடுத்து, திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த‌ பெருமையை நான் பெற்றுக்கொண்டேன்//

:-))))

//சக பதிவர்களை சந்தித்தாலும் நெஞ்சு நிறைய இனிப்பு சுவை நிரம்பியிருந்தது என்றால் அது மிகையாகாது. //

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

நல்ல எழுதி இருக்கீங்க..தொடுப்புகளுக்கு இருக்கும் சிகப்பு வண்ணம் கண்களை உறுத்துகிறது, முடிந்தால் அதை வேறு வண்ணங்த்திற்கு மாற்றி விடுங்கள்.

 
On Tue Aug 05, 04:23:00 PM GMT+8 , Known Stranger said...

tea coffe snacks nalla padiya achu appadi podu aruvalla..

 
On Tue Aug 05, 05:44:00 PM GMT+8 , லதானந்த் said...

நேரில் பார்த்தது போன்ற வர்ணனை. நன்றாக இருந்தது.

என்னைக் குறிப்பிட்டமிக்கும் நன்றி.!

 
On Wed Aug 06, 11:53:00 AM GMT+8 , +Ve அந்தோணி முத்து said...

//ஒரு காலத்தில் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பெண்ணோ, பையனே பிற மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினால் கட்டாயம் பிற மதத்தை சேர்ந்தவர் மதம்மாறி கத்தோலிக்க மதத்தை தழுவ வேண்டும் என்று ஒரு கோட்பாடு இருந்ததாம். ஆனால் இப்போது அப்படியில்லை. மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதைத் தான் கத்தோலிக்க மதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என குறிப்பிட்டிருந்தோம்.//
இது மட்டுமா இன்னும் பல மாற்றங்களை கத்தொலிக்கம் சந்தித்து ஏற்றுக் கொண்டுள்ளது மிக வரவேற்கத் தக்கது.

என்ன ஒன்று பழமையில் ஊறியவர்களால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

 
On Sun Aug 10, 08:26:00 PM GMT+8 , Anonymous said...

//திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த‌ பெருமையை நான் பெற்றுக்கொண்டேன். //

வள்ளல் ஜோண்ணா வாழ்க...என்ன ஒரு பெருமை எங்க குடும்பத்திற்கு :P

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க