Author: ஜோசப் பால்ராஜ்
•10:20 PM
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.


இது உழவனின் வாழ்க்கையை அலசும் தொடர்
வயலுக்குள்ளும், வெளியேயும் எங்கள் சொந்தங்கள் சந்திக்கும் சவால்களை உங்களுக்கு சொல்லவே இந்த தொடர்.

எனக்கு தெரிந்த பயிர்களான நெல், கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்வது குறித்தும், அதில் ஆரம்பம் முதல், கடைசிவரை அதாவது விதைப்பில் இருந்து, அறுவடை செய்து பணமாக்குவது வரை விவசாயி என்ன பாடுபடுகின்றான் என்பது குறித்தும் விளக்கப்போவதுதான் இந்த தொடர்.

கரும்பு சாறும், இந்திய பொருளாதாரமும் என்ற எனது பதிவிற்கு பின்னூட்டமிட்ட என் நண்பர் அவர்களின் கேள்விகளுக்கு நான் அளித்த பதிலின்படி இத்தொடரை எழுதுகின்றேன்.

என்னைப்போல் விவசாயகுடும்பத்தை சேர்ந்த பல நண்பர்களும் பரந்துவிரிந்த இவ் வலையுலகில் இருப்பீர்கள். என் தொடரை படித்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள்.
விவசாயம் என்பதை வெளியில் இருந்து மட்டுமே பார்த்தவர்கள் என்னோடு வாருங்கள், எங்கள் வயல்வெளிகளை சற்று பார்த்துவிட்டு வருவோம்.

முதலில் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நெல் சாகுபடியை குறித்து பார்ப்போம்.

வழக்கமாக ஜீன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் அந்த வருடம் இரு போகம் நெல் விளையும். போதுமான அளவு நீர் இல்லாமல், அணை திறப்பு தள்ளிபோனால் ஒரு போகம் மட்டும்தான் நெல் விளைவிக்க முடியும்.

சரி, நடவு முதல் அறுவடை வரை ஆகும் செலவுகள் என்னவென்று பார்ப்போமா?

உழவு செய்ய உழவுஇயந்திர (Tractor) கூலி ஒரு ஏக்கருக்கு ஒரு உழவுக்கு 300 ரூபாய். கட்டாயம் 3 உழவு செய்துதான் நடவு செய்யமுடியும்,ஆக உழவு கூலி மட்டும் 900ரூபாய்.

நாற்றங்காலில் இருந்து நாற்று பறித்து நடவு வயலில் வைக்க ஒரு ஏக்கருக்கு 700 ரூபாய் கூலி. நாற்றங்காலில் இருந்து நடவு வயல் தூரமா இருந்தால் இது இன்னும் அதிகமாகும்.

நடவுக்கு ஒரு ஏக்கருக்கு கூலி 500 ரூபாய்.

அடியுரம் மற்றும் நடவுசெய்த உடன் இடும் மேலுரம் ஒரு ஏக்கருக்கு 4000ரூபாய். பூச்சி மருந்து ஒரு 1500 லிருந்து 2000 வரை. (மீண்டும் மீண்டும் பூச்சித்தாக்குதல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்). உர‌ம் ம‌ற்றும் பூச்சிம‌ருந்து அடிக்க‌ ஆண் ஆளுக்கு கூலி 100ரூபாய். (காலையிலிருந்து ம‌திய‌ம் வ‌ரை ம‌ட்டுமே வேலை).தெளிக்கும் கூலி 500 என்று வைத்துக்கொள்வோம்.

களை பறிக்க ஒரு ஏக்கருக்கு எப்படியும் 20 ஆட்கள் தேவைப்படும். ஒரு பெண் ஆள் கூலி 40ரூபாய். ஆக களைபறிக்க மட்டும் 800ரூபாய். ஆக‌ க‌ளைப‌றிப்பு வ‌ரை ஒரு ஏக்க‌ருக்கு ஆகும் செல‌வு ம‌ட்டும் 8900 ஆகும்.

இத‌ற்குப்பின் அறுவ‌டை, அறுவ‌டைக்கு கூலி எப்போதும் ப‌ண‌மாக‌ கொடுப்ப‌து கிடையாது. ஆட்க‌ள் அறுவ‌டை செய்தால் நெல்லாக‌த்தான் கூலி கொடுப்போம். த‌ற்போது இய‌ந்திர‌ங்க‌ளை கொண்டு அறுவ‌டை செய்ய‌வ‌தால் ஏக்க‌ருக்கு 1800 ( இது க‌ட‌ந்த‌ ஆண்டு நில‌வ‌ர‌ம், டீச‌ல் விலை உய‌ர்வால் இவ்வாண்டு 2300 முத‌ல் 2500 இருக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகின்ற‌து.) .

ஆக இயந்திர அறுவடை என்று வைத்துக்கொண்டால் கூட 11700 ரூபாய் ஆகும்.

இது தவிர வயலை உழவு செய்யும் முன்னர் ஆகும் முன்னற்பாடுகளுக்கு ஆகும் செலவுகளையும், அறுவடைக்கு பின்னர் ஆகும் சில செலவுகளையும் இந்த செலவு கணக்கில் சேர்க்கவில்லை.

சரி இதுவரை செலவுகளை பார்த்தோம். இனி வரவு என்னவென்பதை பார்ப்போம்.

ஒரு வயல் நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 45 மூட்டைகள் விளைச்சல் வரும். மிக நன்றாக விளைந்தால் 48 முதல் 50 மூட்டைகள் வரை கிடைக்கும்.
சராசரியாக 45 மூட்டைகள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மூட்டை சாதாரண ரக நெல் 500ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 22500 ரூபாய் கிடைக்கும்.

நான் இங்கே கொடுத்துள்ளது குறுவை எனப்படும் குறைந்த கால பயிருக்கு ஆகும் செலவுகள். குறுவை பருவத்தில் பொன்னி போன்ற அதி சன்னரக நெல்கள் பயிரிடப்படுவதில்லை. அவை சம்பா சாகுபடியில்தான் பயிரிடப்படும்.
சம்பா குறித்தும் தொடரின் பின் பகுதியில் விவரிக்கின்றேன்.

ஆகா , ஒரு ஏக்கருக்கு 10800 ரூபாய் லாபம் கிடைக்கின்றதே என்று ஆச்சரியப்பட வேண்டாம்.

உல‌க‌த்திலேயே, த‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்யும் பொருளுக்கு தாங்க‌ளே விலை நிர்ண‌யிக்க‌ முடியாத‌ ஒரே உற்ப‌த்தியாள‌ர் எங்க‌ள் உழவர்கள் ம‌ட்டும்தான்.

நெல்லை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் ஆகட்டும் அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்(ளை)முதல் நிலையங்களாகட்டும் எல்லாம் எங்களை எப்படி அடிக்கின்றன என்றும், நெல்லை விற்று காசாக்குவதில் நாங்கள் படும் சிரமங்கள் என்ன என்றும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம். Udanz
This entry was posted on 10:20 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On Thu Jul 10, 12:26:00 AM GMT+8 , கையேடு said...

நண்பர் பால்ராசுக்கு,

பதிவு பல புதிய செய்திகளைத் தருகிறது. விவசாயக் குடும்பப் பிண்ணனியிருந்தும் ஒரு முறைகூட இதைபற்றியெல்லாம் அறிந்து வைத்துக் கொள்ளாதது, கொஞ்சம் உறுத்தவே செய்கிறது.

தொடருங்கள் வாழ்த்துக்கள்.

 
On Thu Jul 10, 12:29:00 AM GMT+8 , K. Srinivasan said...

அருமையாக தஞ்சை மாவட்ட (தற்போது தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்கள்)விவசாயிகள் படும் பாட்டை. நானும் தஞ்சை மாவட்ட விவசாய் குடும்பத்திலிருந்து தான் வருகிறேன் தஞ்சை மாவட்ட விவசாயிகள் துரதிருஷ்டமானவர்கள். விவசாயத்திற்கு தண்ணீர் கிடையாது. விளைபொருட்களுக்கு விலை கிடையாது. இதையும் மீறி, அங்கு விவசாயம் செய்பவர்களை தெய்வம் போல் வணங்கவேண்டும். அடுத்த தலைமுறை இளைஞர்கள் விவசாயம் செய்ய விரும்புவார்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

சீனிவாசன்
http://www.prpoint.com

 
On Thu Jul 10, 01:16:00 PM GMT+8 , Syam said...

//ஒரு வயல் நன்றாக விளைந்தால்//

பல சமயங்களில் இது நடப்பது இல்லை..வெறும் 15 அல்லது 20மூட்டை விளைந்தால் அந்த விவசாயின் நிலைமை கவலைக்கிடம்...

//உல‌க‌த்திலேயே, த‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்யும் பொருளுக்கு தாங்க‌ளே விலை நிர்ண‌யிக்க‌ முடியாத‌ ஒரே உற்ப‌த்தியாள‌ர் எங்க‌ள் உழவர்கள் ம‌ட்டும்தான்//

இது முடிந்தால் நிச்சயம் விவசாயி கடனில் இருந்து தப்பிப்பான்...ஏன்னா வெறும் 50 பைசாவுக்கு விற்கும் தீப்பெட்டியின் விலை கூட உற்பத்தி செய்பவனால் நிர்ணயிக்கப்படுகிறது, ஆனால் விவசாயிக்கு மட்டும் சாபக்கேடு இவன் உயிரை கொடுத்து உற்பத்தி செய்யும் பொருளுக்கு எவனோ ஒருவன் விலை நிர்ணயம் செய்வது....

 
On Thu Jul 10, 01:20:00 PM GMT+8 , Syam said...

அருமையான தொடர்...விவசாயி கஷ்டத்தை வெளி உலகுக்கு கொண்டு வரும் அதே தருணம் வெளி உலகமும் விவசாயத்தை பற்றி அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்

 
On Thu Jul 10, 03:12:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே.
@கையேடு...
நாங்கள் இன்னும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுவதால், எனக்கு இன்னும் அதைப்பற்றி தெரிகின்றது. இதே எங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையினர் என்போன்று விவசாயம் குறித்து அறிந்தவர்களாக இருப்பார்களா எனத்தெரியவில்லை.

 
On Thu Jul 10, 03:16:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@ K. Srinivasan...
நன்றாக சொன்னீர்கள் ஐயா. எத்தனையோ பாடுகள் பட்டுதான் இன்னும் விவசாயத்தில் நம்மவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இயற்கை மட்டுமல்ல பல எதிரிகளை தாண்டி விவசாயம் நடக்கின்றது.

ஓர‌ள‌வு ச‌ம்பாதித்த‌ பின் மீண்டும் விவ‌சாய‌த்திற்கு திரும்ப‌ வேண்டும் என்ப‌துதான் என‌து க‌ன‌வு. என் விவ‌சாய‌ம் க‌ட்டாய‌ம் ர‌சாய‌ன‌ உர‌ம‌ற்ற‌, இயற்கை விவ‌சாய‌மாக‌த்தான் இருக்கும்.

 
On Thu Jul 10, 03:18:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@ Syam...
தாங்களே விலை நிர்ணயிக்கமுடியாததை விட , கிடைக்கும் விலை கூட முழுவதுமாக விவசாயிகளின் கைகளை சென்றடைவதில்லை என்பது தான் மிகப்பெரும் சோகம். அதைப் பற்றி இத்தொடரில் கட்டாயம் எழுதுவேன்.

 
On Thu Jul 10, 08:57:00 PM GMT+8 , Known Stranger said...

i welcome your ideas to make it big. I would request you to make the same web world in english as well- keep a translation web page. It can reach many more minds. Mozhi oru thadaiya iruka vendam unudiya sinthanai senradiya.. ellai tamil pesum ulaga makkal matum padithu sella samuga vishayangallai therinthu kollatum enru nenaithall..,.... hmmm.. keep the tamil blog it is good and maintain a english version. you never know some one from secratriat read it

 
On Thu Jul 10, 11:44:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@Known Stranger ...
கருத்துக்கு நன்றி நண்பா,
நான் தமிழ்வழியில் கல்வி பயின்றவன். எனக்கு தமிழில் எழுதுவதுதான் மிக சுலபமாக இருக்கின்றது.எனினும், உன் யோசனைப்படி கட்டாயம் ஆங்கிலத்திலும் எழுத முயற்சிக்கின்றேன்.

 
On Fri Jul 11, 03:06:00 AM GMT+8 , Sivaram said...

குறுவை, சம்பா , என்றால் என்னவென்று தெரியாத அளவுக்கு , விவசாயத்தில் நான் பூச்சியம். படிக்க ஆவலாக இருக்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்

 
On Fri Jul 11, 07:28:00 PM GMT+8 , Anonymous said...

இளவரசர்,
எனக்கு மிக மிக புதிதான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ஒரு சின்ன கேள்வி..அது ஏன் ஆண் கூலி, பெண் கூலி என வித்தியாசமாக இருக்கு?

 
On Wed Jul 08, 02:45:00 PM GMT+8 , Anonymous said...

sir, we cultivated paddy, and lost around 5000 rupees per acre. wages, fertilizer, tractor, rats all ate up the yield. The harvesters took away what was left.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க