Author: ஜோசப் பால்ராஜ்
•7:40 PM
தமிழக அரசால் பள்ளிமாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பேருந்துப் பயணச் சலுகை எல்லா இடங்களிலும் எள்ளல்களுக்கு உள்ளாவது உண்டு. அவற்றின் உச்சமாக ஒரு சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள செல்வராஜ் உயர்நிலைபள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர் அரசு பேருந்தில் வந்த போது, அவர்களது பள்ளி இருக்கும் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர். மாணவிகள் பேருந்தை நிறுத்தக்கோரி சத்தமிட்டதால் எரிச்சலடைந்த நடத்துநர் அவர்களை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

இலவசம் என்றால் இவர்களுக்கு இளக்காரமா? இவர்களின் ஊதியத்தில் இருந்தா அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கின்றது? என்ன கொடுமை இது? ஓடும் பேருந்தில் இருந்து ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவிகளை கீழே தள்ளுகிறார் என்றால் அவருக்கெல்லாம் மனம் என்று ஒன்று இருக்கின்றதா? உண்மையிலேயே நல்ல மனநிலை உடையவர்தானா அந்த நடத்துநர் அல்லது மனநிலை சரியில்லாதவரா?

கீழே விழுந்த குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்கள், ஒரு வேளை பலத்த அடிபட்டிருந்தாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தாலோ இவர்களால் அதை ஈடு செய்ய முடியுமா? ஆனால் இவர்களையெல்லாம் கடுமையாக தண்டிக்க நம்மிடம் சரியான சட்டங்கள் இல்லாததுதான் மிகப்பெரிய கொடுமை.

போக்குவரத்துகழகம் அந்த ஓட்டுநரையும், நடத்துநரையும் இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறதாம். மற்றவர்களுக்கு இது போல் நடக்க கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கின்றதாம். என்ன ஒரு கடுமையான தண்டணை கொடுத்துள்ளார்கள் பார்த்தீர்களா?

உடனடியாக அவர்களை கைது செய்து ,குறைந்தபட்சம் கொலை முயற்சி வழக்காவது பதிவு செய்திருக்க வேண்டும், உடனடியாக அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ததாகக்கூட செய்தியில் இல்லை.

நான் எப்போதும் என் நாட்டைப் பிற நாட்டோடு ஒப்பிட்டுவது கிடையாது. நான் இருக்கும் நாட்டில் இருக்கும் வசதிகள் என் நாட்டிலும் சீக்கிரம் வரவேண்டும் என்ற ஆதங்கம்தான் அடைவேன். சிங்கப்பூரில் நடந்த ஒரு சம்பவம் இந்த செய்தியோடு நினைவுக்கு வந்து அந்த ஆதங்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றது.

ஒரு முறை இங்குள்ள பேருந்தில் இருந்து தனது நிறுத்தத்தில் இறங்கிய ஒரு பெண்மணி, இறங்கும் போது நிலைதடுமாறி பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு தூணில் மோதி தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் நிலை தடுமாறியதற்கோ, அல்லது காயம் அடைந்ததற்கோ அந்த பேருந்தின் ஓட்டுநர் எள்ளளவும் காரணமில்லை. நிறுத்தத்தில் நன்றாக பேருந்தை நிறுத்தி, Hand Brake lock செய்துவிட்டு, பின்னர் தானே இங்கு பேருந்தின் கதவையே திறப்பார்கள், அதனால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் அந்த ஓட்டுநரின் வேலை உடனடியாக பறிக்கப்பட்டு,வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அந்த பெண் நிலை தடுமாறியதையோ, காயமடைந்ததையோ, உதவி கேட்டு அவர் கையை ஆட்டியதையோ அவர் கவனிக்காமல் அங்கிருந்து பேருந்தை எடுத்து சென்றுவிட்டார். இதுதான் அவர் செய்த தவறு. பேருந்து ஓட்டுநர் தன் பேருந்தில் இருந்து இறங்கியவர் கீழே விழுந்ததை எப்படி கவனிக்காமல் சென்றார்? அந்தப் பெண் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்தாரே என்று இப்படிக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என நிர்வாகம் விளக்கமளித்தது.

ஆனால் நம்மவர்கள் சர்வ சாதாரணமாக பணியிடை நீக்கம் மட்டும் செய்துள்ளார்கள்.

இலவச சலுகையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் மாணவர்கள் எல்லா இடங்களிலும் இப்படி இழிவுபடுத்தப்படுவது தொடர்கதையாகத்தான் இருக்கின்றது. இந்த ஓட்டுநர், நடத்துநரின் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் தண்டணை இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றும் கொஞ்சம் சொல்லுங்கள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:29 PM
தமிழுக்காக பல பதிவுகளை நான் எழுதியிருந்தாலும், நேற்று நடந்த ஒரு வலையுரையாடல் என்னை இப்பதிவை எழுத தூண்டியது.

பலநாட்களாய் வலைப்பூ வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதிவந்தாலும் தற்போது தமிழில் எழுத ஆரம்பித்திருக்கும் என் உயிர் நண்பண் ஒருவன் நேற்று ஒரு பதிவை எழுதிவிட்டு என்னை படிக்க சொன்னான். ஆங்கில வழியில் கல்வி பயின்ற அவன் தமிழில் பல எழுத்துப்பிழைகளுடன் எழுதியிருந்தான். ண, ன ,ர,ற ,ள,ல,ழ வித்தியாசங்கள் சுத்தமாக தெரியாமல் எழுதியிருந்தான். மிக கோபமாகவே கேட்டேன் என்னடா இப்படி தப்புத்தப்பா எழுதியிருக்க, தமிழ் கூடவா தெரியாதுன்னு கேட்டேன்.

ஆனால் என் நண்பணின் வாதம் என்னவென்றால், இது அவர்களது தவறில்லை, நமது கல்வி முறையின் தவறுதான் என்பதே. நம் கல்வி முறை எப்படி மாற்றியமைப்பது என்று யோசிக்க வேண்டும் என்று சொல்கிறான் அவன்.

இதில் நம் கல்வி முறையின் தவறு என்னவென்று எனக்கு தெரியவில்லை. கட்டாயம் ஆங்கிலத்தில்தான் மாணவர்கள் பேச வேண்டும் என சில பள்ளிகளில் விதிமுறை விதிப்பது குறித்தெல்லாம் பேச்சு வந்தது. தமிழ் நம் தாய்மொழி, ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி, இன்று வேலை வாய்ப்பை பெற ஆங்கில அறிவு மிக அதிகமாக தேவை என்பதால் ஆங்கில அறிவு அத்யாவசியமான ஒன்று. எனவே ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள, அதில் சரளமாக பேசவும், எழுதவும் பள்ளிகளில் பயிற்சி அளிக்கத்தான் வேண்டும். அதில் தவறே இல்லை. ஆனால் உங்கள் வீடுகளிலும், பள்ளிக்கு வெளியிலும் உங்களை அவ்வாறே பேசச் சொன்னது யார்?

இப்படித்தான் கடந்த மே மாதம் நான் ஊருக்கு சென்றிருந்த போது என் சகோதரியின் மகன், ஆங்கிலவழிக் கல்வியில் ஆறம் வகுப்பு முடித்திருந்தவனுக்கு தமிழை சரளமாக வாசிக்கவும், எழுதவும் தெரியவில்லை. மிக சாதாரணமாய் இல்லை மாமா,எனக்கு தமிழ் எல்லாம் படிக்கத்தெரியாதுனு சொன்னாரு என் அருமை மாப்பிள்ளை. எனக்கு கடுமையான சினம் வந்தது, அதே நேரம் இதை எப்படி சரிசெய்வது என்று சிந்தித்தேன், பள்ளிக்கல்வி வேண்டுமாணால் அவர்களுக்கு தமிழ் அறிவை அளிக்க தவறி இருக்கலாம். பிள்ளைகளும் அதையே பின்பற்றிக்கொண்டு செல்லலாம், ஆனால் நமக்கு எங்கே போனது புத்தி? என் புள்ளைக்கு தமிழ் படிக்ககூட தெரியாதுன்னு சொல்றதுல தானே நமக்கு பெருமை? பின்ன எங்க நமக்கு தாய்மொழி மேல அக்கறை வரப்போவுது?

கடைசியா என் மாப்பிள்ளைக்கு நான் சொன்ன தீர்வு, தமிழ் செய்திதாள்களை வாங்கி படிக்க சொன்னேன், தினமும் சத்தமாக படிக்க சொன்னேன், இப்போ மாப்பிள்ளை ஒழுங்கா தமிழ் படிக்கிறாரு. நான் இதை சுட்டிக்காட்டிய பின்னர்தான் என் சகோதரியும் இதை உணர்ந்தார். இனி கட்டாயம் என் சகோதரி தன் மகன் தமிழை மறக்க விடாமல் செய்வார். இதுதான் ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டியது.

பிள்ளைகள் ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை கட்டாயம் கற்கவேண்டும். முடிந்தால் ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பான் மொழிகளையும் கற்றுக்கொள்ள சொல்லுங்கள். பிற மொழிகளை எத்தனை முடியுமோ அத்தனை கற்க சொல்லுங்கள். ஆனால் அதே நேரம் தாய் மொழியை மறக்காமல் இருக்க செய்யுங்கள். பள்ளிகளில் அவர்கள் வேற்று மொழியை கற்கட்டும். வீட்டில் தாய் மொழியை பழக்குங்கள்.

நம் மூத்த பதிவர் டோண்டு ராகவன் அய்யா கூட பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகளை கற்றறிந்து, மொழிபெயர்பாளராக பணியாற்றிக்கொண்டுதானே இருக்கின்றார். இத்தனை மொழிகளையும் கற்றதால் அவர் தமிழை பிழையாகவா எழுதுகின்றார்? இல்லை எனக்கு தமிழே தெரியாது என்று சொல்கிறாரா என்ன ? நேற்று என்னோடு உரையாடிய நண்பண் சொன்னது, தற்போது எல்லாவற்றையுமே என்னால் ஆங்கிலத்தில்தான் சிந்திக்கவே முடிகின்றது என்று சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சிந்திக்கக் கூட அந்நிய மொழிதான் என்ற அளவுக்கு தாய்மொழியை கண்டுகொள்ளாமல் விட்டது யார் தவறு?

சிங்கப்பூரில் தமிழ் மொழி ஒரு தேசிய மொழி, இங்கு எல்லா இடங்களிலும் தமிழ் மொழி உண்டு. ஆனால் இங்கு இருக்கும் எனது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு தமிழே தெரியாது. இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் கூட அவர்கள் இந்தியா வரும்போது அந்த குழந்தையுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் தமிழ் என்றால் என்னவென்றே தெரியாத நாட்டில் இருப்பவர்கள் நிலை ?

இந்த‌ விச‌ய‌த்தில் ந‌ம‌து ஈழ‌த்து ச‌கோத‌ர‌ர்க‌ள் ந‌ம்மைவிட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள். கால‌ சூழ்நிலையில் அவ‌ர்க‌ள் ப‌ல்வேறு நாடுக‌ளுக்கு புல‌ம்பெய‌ர்ந்தாலும், இளைய‌ த‌லைமுறையின‌ர் இன்னும் த‌மிழை விட்டுவிட‌வில்லை. நேற்றுகூட‌ ஆஸ்திரேலியாவுல‌ உள்ள‌ ஈழ‌த‌மிழ் ச‌கோத‌ரி ஒருவ‌ட‌ன் வ‌லை மூல‌ம் பேசிய‌போது, அந்த‌ ச‌கோத‌ரி முத‌லில் ஆங்கில‌த்தில் பேசினாலும், சுதாரித்துக்கொண்டு உட‌னே த‌மிழில் பேச‌ ஆர‌ம்பித்தார். இனிய‌ த‌மிழில்தான் எங்க‌ள் உரையாட‌ல் சென்ற‌து.

ஆஸ்திரேலியாவில் தமிழை ஒரு பாடமாக படிக்காத போதும், தனது சொந்த முயற்சியால் தமிழைக் கற்று, வலையுலகில் எனக்கு முன்னரே தொடங்கி பல பதிவுகளை அழகுத் தமிழில் வெளியிட்ட என் அன்பு சகோதரி தூயாவிற்கு இந்த பதிவு சமர்பணம். இப்படி உள்ளவர்கள் இருக்கும் வரை என் இனிய தாய்மொழி காப்பாற்றப்படும்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன்னர் பல்வேறு நாடுகளில் சிதறிக்கிடந்த யூத இனம், தங்களது மொழியை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியதால்தான் இன்று அவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி மிக நன்றாக முன்னேறியுள்ளார்கள்.

வெறும் அந்நியமொழியால் மட்டும் நமக்கு முன்னேற்றம் கிட்டாது என்பதற்கு ஜப்பானையும், சீனாவையும் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக கூறத்தேவையிருக்காது.

செம்மொழியாகிவிட்டால் போதாது, அது நம்மொழியாய் இருக்க வேண்டும். தயவுசெய்து தாய்மொழியே வீட்டில் நம் மொழியாய் இருக்கட்டும்.

வீட்டிலும் நாம் நம் மொழியை மறந்துவிட்டால், மெல்ல தமிழ் இனி சாகும்... Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:19 AM
இன்றைய தினமலர் செய்தியில் படித்த ஒரு செய்தி என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ரயில் குண்டுவெடிப்பால் டாக்டரின் 'ஸ்பீக்கர்' அவுட்: யோகா, இயற்கை வைத்தியத்தால் கிடைத்தது பலன்.

தேவையேயில்லாமல் ஆங்கிலச் சொற்களை கலந்து தருவதில் தினமலர் தான் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கை. ஒரு தமிழ் தினசரியில் ஆங்கில வார்த்தைகளை எதற்கு கலக்க வேண்டும் ?

சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும், அதற்கான தமிழ் வார்த்தையே பலருக்கு புரியாது என்று சொல்லும் நிலை இன்று பல வார்த்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆனால் காது கேட்க்கும் திறனை இழந்தார், அல்லது காது செவிடாகிவிட்டது என்பது போன்ற வார்த்தைகள் கூடவா மக்களுக்கு புரியாமல் போகும்?

சரி ஆங்கிலத்தை கலந்ததுதான் கலந்தீர்கள், அதுவாவது சரியா ?
ஸ்பீக்கர் என்பது ஒலி பெருக்கி, ஒலியை பரப்ப பயன்படும் ஒரு வெளிப்படுத்தும் கருவி (Output Device). அது உள்வாங்கியல்ல ( Input Device). ஆனால் செவி என்பது ஒலியை உள்வாங்க பயன்படும் ஒரு உடல் உறுப்பு. எப்படி ஒரு வெளிப்படுத்தும் கருவியை போய் ஒரு உள்வாங்கும் உறுப்புக்கு பதிலாக உபயோகிக்கலாம்?

பல திரைப்படங்களில் நகைச்சுவைக்காக செவியை ஸ்பீக்கர் எனச் சொல்லியிருக்கலாம். அதற்காக அதுதான் சரியான் வார்த்தை என்பதுபோல் ஒரு தினசரி பத்திரிக்கை நடந்துகொள்வது என்ன நியாயம்?

எனது சிறுவயதில் நன்கு தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் தாத்தா , என்னையும், என் சகோதரனையும் தினசி பத்திரிக்கையை சத்தமாக வாசிக்க சொல்லுவார். இதை பல பெரியவர்கள் செய்வார்கள். இனியெல்லாம் பிள்ளைகள் தமிழ் கற்க தமிழ் தினசரிகளை அவர்கள் கண்களிலேயே காட்டாமல் வைத்திருப்பதுதான் நல்லது.

நன்கு படித்த, அயல்நாடுகளில் வேலைபார்க்கும் பல வலை பதிவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்றுகூட ஏன் இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு இல்லை ? இது அப்பட்டமான மொழிக்கொலை. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:34 PM
நாகப்பட்டிணம் ஆற்காடுபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நாகை ஆற்காடுபுரத்திலிருந்து, மீன் பிடிப்பதற்காக வாசகன், நாராயணசாமி மற்றும் முரளி ஆகியோர் தான் இலங்கை படையினரால் சுடப்பட்டு முரளி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வாசகன், நாராயண சாமி இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

செத்தது தமிழர்கள் தானே? இவர்கள் என்ன தீவிரவாதிகளா? இவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி தானே? என்ன செய்யப்போகின்றீர்கள் இதற்கும் ?

இங்கு சாகும் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட‌ ந‌ம‌து முத‌ல்வ‌ருக்கு எங்கே நேர‌ம் இருக்கும்? அவ‌ருக்கு தான் ப‌ல‌ க‌வ‌லைக‌ள் இருக்குமே? இதை கேட்டால் அவ‌ர் என்ன‌ துப்பாக்கியை தூக்கிக்கொண்டா போய் ச‌ண்டை போட‌ முடியும் என்று அண்ண‌ண் ல‌க்கிலுக், அபி அப்பா போன்றோர் கேட்பார்க‌ள்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதே சட்ட விரோதம் என்று அறிவிக்கச்சொல்லுங்கள். கடலில் இறங்கினால் நாங்களே சுடுவோம் என அறிவியுங்கள். செத்தாலும் இந்தியப் படையினரால் சுடப்பட்டு இறந்தோம் என்ற பெருமையாவது கிடைக்கட்டும் எங்கள் இந்திய மீனவர்களுக்கு.

ஏன் நம் நாட்டுக்கு கீழே கையகலமே உள்ள ஒரு நாட்டின் கடற்படையால் சுடப்பட்டு சாகணும்?
தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்தே பிரித்துவிட்டார்களா என்ன ? த‌மிழ‌ன் செத்தால் இந்தியா க‌ண்டுகொள்ளாதா?

ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்தின் தமிழர்களை இலங்கைப்படை கொல்வதில் இருந்து காப்பாற்றமுடியவில்லை என்றால் இவர்களால் நமக்கு என்ன பயன்?

இத்தனை தமிழர்களை கொன்ற சிங்கள கடற்படையைப் பார்த்து இதுவரை ஒரு எச்சரிக்கை குண்டையாவது சுட்டிருக்கின்றதா பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவின் கடற்படை?

இனியும் எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டு இருக்காது என்று சட்டசபையில் அறிவித்த முதல்வர் இப்போது என்ன செய்யப்போகின்றார்? கடிதம் எழுதுவதைத் தவிர ?

இதுவரை எத்தனை மீனவர்களை கொன்றுள்ளது அந்த கேடுகெட்ட சிங்களப்படை? இதுவரை எத்தனை கடிதம் எழுதியுள்ளீர்கள்? அத்தனை கடிதங்களுக்கும் ஒரு பதில் கடிதாமாவது வந்துள்ளதா?

கலைஞரின் கடிதங்களாவது பிரதமரை சென்றடைகின்றதா? இல்லை அத்தனையும் குப்பை கூடைக்களுக்குத்தான் செல்கின்றதா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•2:00 AM

சென்னை, கொருக்குப்பேட்டை குப்பை மேடு.
மலைமலையாகக் குவிந்திருக்கிறது குப்பைகள். தீயிடப்பட்டு புகை கக்கிக்கொண்டு இருக்கும் குப்பை மேடுகளில் சின்னதொரு உறுமலோடு ஏறி இறங்கி வருகிறது மாநகராட்சி லாரிகள்.

தூரத்தில் லாரியைப் பார்த்ததும் முதுகில் சாக்குப்பையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் சிறுவர்கள். குப்பையைக் குறிவைத்து சிறுவர்களை முந்தி ஓடி வருகிறது தெரு நாய்கள். அவற்றை விரட்டி விட்டு பிஸ்கட் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், டின்கள் என விதவிதமான குப்பைகளைப் பொறுக்கி எடுக்க ஆரம்பிக்கிறார்கள் சிறுவர்கள். இது சென்னையின் ஒரு பகுதி வாழ்க்கை!

''அண்ணாத்தே... ஸ்கூல் போய்ப் படிக்கிற அளவுக்கு அப்பாகிட்ட துட்டு கிடையாது. அப்பா இங்கதான் எங்கேயாவது பொறுக்கினு இருக்கும். தெனம் ரெண்டு டைமாவது இப்படி குப்பை பொறுக்குனாதான் வீட்டுல ரெண்டு வேளைக்குச் சோறு திங்க முடியும். வூட்டுக்குப் போனா இருமல் வந்துகினேஇருக்கும். குப்பையிலே புரண்டுகிட்டு இருக்குறதால நைட்டு முழுக்கத் தூங்க முடியாது. நைநைன்னு அரிச்சுக்கிட்டே இருக்கும். ஒரு நாளைக்கு கொறஞ்சது முப்பது ரூபாயாவது கிடைக்கும். அத னால அரிப்பைப் பொறுத்துக் குவேன்''

இது ஆங்கே குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனின் குரல். இதுபோல் எத்தனையோ குரல்கள். இந்த வார விகடனில் படியுங்கள். மனசு வெறுத்து போகுது இதையெல்லாம் படித்து விட்டு.

இப்படியே விடலாமா? படித்துவிட்டு அதை வைத்து ஒரு பதிவும் போட்டுவிட்டால் போதுமா? நான் விகடனில் இந்த கட்டுரைக்கு எழுதிய கருத்தையே இங்கும் கொடுக்கின்றேன்.

குப்பையில் உழலும் இந்த சிறுவர்களின் குடும்பங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தீர்களேயானால், அவர்கள் பெற்றோர் இல்லாதவர்களாகவோ, அல்லது பெற்றோர் உழைக்க இயலாத உடல்நிலையில் உள்ளவர்களாகவோ, அல்லது உழைக்க உடல் வலு இருந்தும், உழைக்க மனமில்லா குடிகாரர்களாகவோ இருப்பார்கள்.

எத்தனை நாட்களுக்கு இப்படியே நாம் படித்துவிட்டு மனம் வருந்துவது போவது? இதற்கு தீர்வுதான் என்ன? எனக்கு தோன்றும் ஒரு யோசனையை இங்கு வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

பெற்றோர் இல்லாதவர்கள், பெற்றோர் இருந்தும் குடிகாரர்களாகவோ இருக்கும் குழந்தைகளை ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாக, தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.

குழந்தைகளை குப்பை பொறுக்கவைத்து குடிக்கும் அந்த மிருகங்கள் எல்லாம் எப்படி போனால் என்ன ? முடிந்தால் உழைத்து உண்ணட்டும், இல்லையேல் போய் குப்பை பொறுக்கட்டும்.

உழைக்கும் நிலையில் உடல்வலு இல்லாமல் குழந்தைகளின் உழைப்பை நம்பி வாழும் நிலையில் உள்ள பெற்றோர்களையும் , அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து காப்பாற்ற வழிசெய்ய வேண்டும்.

ஏதவது ஒரு பகுதியில் நாம் எல்லாரும் சேர்ந்து செய்தால் நம்மைப் போல நல்ல உள்ளங்கள் கட்டாயம் இதை பிற பகுதிகளில் செய்ய முன்வருவார்கள்.ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும். என்ன சொல்கின்றீர்கள் ?

ஏதாவது செய்யலாம், எத்தனைகாலம் தான் இப்படியே படித்துவிட்டோ அல்லது ஒரு பதிவு எழுதிவிட்டு சொல்வதோ தீர்வாகாது. நாம் ஒரு இயக்கமாக சேர்ந்து செய்ய வேண்டும் என்று நினைத்தால் முடியாத என்ன ?

உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.

* இந்த பதிவை எழுத தூண்டியது ஆனந்த விகடன் 16-07-2008 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை. Udanz

Author: ஜோசப் பால்ராஜ்
•11:40 PM
சமீப காலங்களில் சில சின்னஞ்சிறு குழந்தைகள் வெறிநாய்கடிக்கு பலியாகும் கொடூர செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்க முடிகின்றது.
மதுரை போஸ், சாத்தூர் வினோத்ராஜ், விருதுநகர் விஷ்ணுராம், சிவகங்கை கவிதா... நீண்டுகொண்டே போகின்றது இந்த கொடூர சாவுகள்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிறைச்சாலை போன்ற ஒரு தனி கூண்டுக்குள் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றார்கள். அப்படியும் யாரையும் காப்பாற்றமுடியாமல் அநியாயமாக அந்த பிஞ்சு குழந்தைகள் உயிர்விடுகின்றன.
ரேபிஸ் நோய் வந்து இறப்பவர்கள் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசுமருத்துவமனையில் இருந்து நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்துசென்று எரித்துவிடுகின்றார்கள்.அது தான் நோய் பிறருக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி என்றாலும், செய்திதாள்களில் படித்தபோது பதறாத மனமும் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

இது யார் குற்றம் அய்யா? வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் வேலைதானே? யாரோ சில பிராணிகள் நலச்சங்கத்தினர் தொடுத்த வழக்கினால் தெருநாய்களையும், வெறிநாய்களையும் கொல்வது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றாக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என்று உத்தரவு போட்டிருக்கின்றார்கள்.

போடாதா சாலையையே போட்டதாக கணக்கு காட்டி சம்பாதிப்பவர்கள் இருக்கும் நம் நாட்டில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டம் எல்லாம் அவர்கள் பணம் சம்பாதிக்க கிடைத்த அட்சயப் பாத்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாய்களுக்கு ஆதரவாக மட்டும் வழக்கு போடும் மாண்புமிகு பிராணிகள் நல சங்கத்தினர்தான் இந்த கேடுகெட்ட மனிதர்களை நினைக்கவில்லை என்றால், மாநிலம் ஆளும் நம் முதல்வரும் நினைக்கவில்லையே என்பது தான் பெரும் சோகம்.
இந்த வாரம் சென்னையில் அண்ணா சாலை அருகில் கட்டி முடிக்கப்படாத ஓர் எட்டுமாடி கட்டிடத்தில் படப்பிடிப்பு நடத்த சென்ற திரைப்படக் குழுவில் இருவர் மின் தூக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகி பலியானார்கள் என்ற செய்தியை படித்தோம். இறந்தவர்கள் பாவம்தான், இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் அவர்கள் வேலை பார்தது பல கோடி ரூபாய்களை கொட்டி படம் எடுக்கும் ஒரு நிறுவனத்துக்காக. அதே போல் அவர்களின் உயிர் இழப்பிற்கு காரணம் அந்த மின் தூக்கியை நிறுவியவர்களின் கவனக்குறைவு. ஆனால் யாரும் கோரிக்கை வைக்காமலேயே நம் முதல்வர்இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகையை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அளித்துள்ளார்.
நம் முதல்வருக்கு திரைப்படத்துறையினரின் மீது இருக்கும் பாசம் எல்லோரும் நன்கு அறிந்ததுதான். ஆனால் தற்போது இவர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் முதல்வர் என்பதால் இது அநியாயமாய் படுகின்றது. நியாயமாகப் பார்த்தால் இந்த உயிர் இழப்புகளுக்கு காரணமாகிய தயாரிப்பாளர் மற்றும் மின் தூக்கியை நிறுவியவர்கள் தான் தண்டணைக்குறியவர்கள். அவர்கள் தான் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும்.
அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து உடனடியாக இழப்பீடு வழங்கச் செய்திருக்க வேண்டும். அதுவும் ஒரு லட்சம் மட்டும் அல்ல. இன்னும் பெரிய தொகையை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும்.
திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் என்பதற்காக யாரும் கோரிக்கை வைக்காமலேயே உதவி அளித்த நம் முதல்வர், இப்படி ஆட்சியாளர்களின் கவனமின்மையால் உயிர்விட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு எந்த உதவியும் செய்ததாக இதுவரை செய்திதாள்களில் படிக்கவில்லை.
கள்ளச் சாரய சாவு எனில் அதற்கும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து உதவியளிக்கின்றார்கள். ஆனால் வழக்காமாக கையூட்டு பெற்றுக்கொண்டு, கள்ளச்சாரய வியாபரத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறையினருக்கு வெறும் இடமாற்றம், பணியிடை நீக்கம் மட்டும்தான் தண்டணை.
சாராயம் குடித்து இறப்பவர்கள் கூட தீங்கு என்று தெரிந்தும் அதை குடிக்க செல்பவர்கள் தான். ஆனால் நாய்கடிக்கு ஆளாகி இறப்பவர்களின் சாவுக்கு காரணம் அவர்களா? நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம் என மிக அருமையான அறிவுரை கூறிய நீதிமன்றம், வெறிபிடித்த நாய்களை என்ன செய்வது என்று கூறாமல் போனது நியாயமா?
பிராணிகளுக்காக மட்டும் வழக்கு போடும் அமைப்புகள், அவற்றால் பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்காக எதுவும் செய்யாமல் இருப்பது நியாயமா?
இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கத்தினர் கட்டுப்படுத்தாமல் விட்டதால் நேரும் உயிர் இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்காமல், திரைப்படத்துறையினருக்கு மட்டும், அதில் அரசாங்கத்தின் தவறோ, பங்கீடோ இல்லையென்ற போதும் யாரும் கேட்காமல் உதவியளிப்பது நியாயமா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•2:10 PM
விகடன் பதிப்பாளர் அவர்களுக்கு மிக நீண்ட காலமாக தமிழ் பத்திரிக்கை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் விகடன், நவீனயுகத்திற்கேற்ப மாற்றங்களை உள்வாங்கிக்கொள்வது கண்டும் மகிழும் அதே வேளையில், நாளுக்கு நாள் விகடனில் அதிகரித்து கொண்டே வரும் ஆங்கில கலப்பு எம்மை வருத்தமடைய செய்கிறது.

ஏன் தமிழில் நவீன கருத்துக்களை எழுதகூடாது? தமிழில் வார்தைகள் இல்லையா அல்லது தமிழில் எழுதினால் யாரும் படிக்கமாட்டார்களா? தற்போது பெருகிவரும் வலைப்பூக்களில் பல இளையோர்கள் தூய தமிழில் தங்களது கருத்துக்களை அழகாக எழுதுகின்றார்கள். 2 வாரங்களுக்கு முன்னர் விகடன் வரவேற்பரையில் குறிப்பிடப்பட்டிருந்த சாத்தன்குளம் ஆசிப் மீரான் அவர்களின் வலைப்பூ ஒரு உதாரணம்.

வலைப்பூக்களை எழுதும் இளையோர் அனைவரும், தற்கால நவீன சமுதாய வாழ்வில் ஈடுபடும், நன்கு படித்து நல்ல வேலையில இருப்போரே. இது போன்ற இன்றைய இளையோர்களே, தூய தமிழில் எழுதவேண்டும் என்ற சமூக பொறுப்போடு செயல்படும்போது, விகடன் போன்ற மிக பிரபலமான பத்திரிக்கைகள் தங்களது சமூக கடமையில் இருந்து தவறுவது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. தயவு செய்து விகடன் குழும பத்திரிக்கைகளில் பிறமொழிக் கலப்பை இல்லாதொழிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.

இந்த கருத்தை படிக்கும் பிற வாசகர்கள், இதை ஆதரித்தால் உங்கள் ஆதரவையும் , எதிர்த்தால் உங்கள் எதிர்பிற்கான காரணங்களையும் இப்பகுதியில் இணைக்குமாறு வேண்டுகிறேன்


விகடனுக்கு வேண்டுகோள்னா அதை விகடனுக்கு அனுப்பாம, இங்க எதுக்குடா எழுதுறனு கேட்காதிங்க, மேல இருக்க வேண்டுகோள் நான் விகடன் ஆசிரியருக்கு , இந்த வார ஆனந்த விகடன் இதழின் வாசகர் கருத்து பகுதி மூலமா அனுப்பியதுதான். இதை படிக்கிற தமிழ் மீது ஆர்வம் கொண்ட என்ன போல சிந்திக்கிற நாலு பேராவது விகடனுக்கு எழுதி ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துனா நல்லதுதானே, அதுக்குத்தான் இங்கயும் எழுதியிருக்கேன். நல்லது நடக்கணும்ணா நாலு வழியிலயும் முயற்சி செய்யணும் பாருங்க.
. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:50 PM
மிக நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு. இது ஒரு சுயநலம் கலந்த பொதுநலப் பார்வையும் கூட.

வளர்ந்து வரும் நவீனயுகத்தில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் போன்ற மரபுசார் எரிபொருட்களின் தேவையும், சர்வதேச சந்தையில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெயின் விலையால் எல்லோரும் பாதிப்படைவது பற்றி நான் ஓன்றும் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் மரபுசாரா எரிசக்தி எனும் ஒரு அரிய வளத்தை நம் கையில் வைத்துக்கொண்டு இன்னும் ஏன் நாம் அதை உயோகிக்க மறுக்கிறோம் என்பது தான் எனது கேள்வி.

கரும்பில் இருந்து சர்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவுப்பாகில் (மொலாசஸ்) இருந்தும், மக்கா சோளத்தில் இருந்தும் தயாரிக்கப்படும் எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கலாம் என்பதை ஏற்கனவே பிரேசில் போன்ற நாடுகள் நிரூபித்துவிட்டன. விவசாயத்தை முக்கியத்தொழிலாக கொண்டுள்ள இந்தியாவில் கரும்பும் , சோளமும் மிக அதிகமாக பயிரிடப்படும் பயிர்கள் தான்.

பிரேசில் நாட்டில் உயிர் எரிபொருள்(Bio Fuel) ஆக எத்தனாலை பயன்படுத்தி கார் போன்ற வாகனங்களை இயக்கிவருகிறார்கள். தொழில்நுட்பம் குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இணைய முகவரிக்கு சென்று பாருங்கள். (http://en.wikipedia.org/wiki/Ethanol_fuel).


இது நாள்வரை சர்க்கரை ஆலைகளில் கழிவாக வெளியேற்றும் மொலசஸ் தற்போதுவரை வேண்டாத ஒரு கழிவாகத்தான் வீணாக்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆலைகளுக்கு இது ஒரு செலவு தான். ஆனால் இதே மோலாசஸ்தான் எத்தனால் தயாரிக்க முக்கியமான மூலப்பொருள். ஆனால் எத்தனால் என்பது இதுவரை சாரயமாகவும், மிக சில மருத்துவ தேவைகளுக்காகவும் மட்டுமே உபயோகிக்கப்படுவதால் தற்சமயம் பெருமளவில் தயாரிக்கப்படுவதில்லை. இதே எத்தனாலை உயிர் எரிபொருளாக உபயோகிக்கும் நிலை வந்து மிகப்பெருமளவில் தயாரிக்க வேண்டியத் தேவைகள் உருவானால் இன்று சர்க்கரை ஆலைகளுக்கு செலவாக இருக்கும் மொலசஸ் எத்தனால் தயாரிப்புக்கு மூலப்பொருளாக விற்கப்பட்டு வருவாயாக மாறிவிடும். இதனால் கரும்புக்கு கூடுதல் விலை கிடைக்கும் .

மக்காசோளம் மிக குறைந்த நீரைகொண்டு பயிரிடப்படும் ஒரு பயிர். கரும்பைவிட மிக குறைவான நாட்களில் விளையும், மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் இடங்களிலும் பயிரிட முடியும். ஆனால் தற்போது உணவு பொருளாகவும், கோழி பண்ணைகளில் தீவனமாகவும் மட்டுமே பயன்படுவதால் மிகக்குறைந்த விலையே இதற்கு கிடைத்துவருகிறது. சோளத்தில் இருந்தும் எத்தனால் தயாரிக்கமுடியும் என்பதால் இதற்கும் நல்ல விலை கிடைக்கும். இவையெல்லாம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.

பெட்ரோலிய எரிபொருட்களை உபயோகிப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட , எத்தனாலையோ அல்லது எத்தனால் கலந்த எரிபொருளையோ உபயோகிப்பதால் ஏற்படும் கேடு குறைவானது என்றும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உலகின் வெப்பம் அதிகரித்து பல கடலோரப்பிரதேசங்கள் வெகுவிரைவில் நீரில் மூழ்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ள இந்த சூழலில் சுற்றுபுறச் சூழலை பாதுகாக்கவும் இது ஒரு மி்கச்சிறந்த வழியாகும் என்பதில் ஐயமில்லை. ஆக சுற்றுப்புற சூழலை காரணமாக கொண்டும் இதை தடுக்க முடியாது.

நாட்டின் இறக்குமதியில் பெருமளவு கச்சா எண்ணெய் தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று , வெறும் 30 % எத்தனால் கலந்த எரிபொருளை உபயோகித்தால் கூட , கச்சா எண்ணெய் இறக்குமதி 30% குறையும் இதனால் ஒரு 15% பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்தாலும் எல்லோருக்கும் நன்மைதானே ? மேலும் இறக்குமதி குறைவதால் நாட்டின் பொருளாதாரமும் உயரும் அல்லவா?

மேலும் இந்தியாவில் உயிர் எரிபொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தினால், மேலும் பல நாடுகள் இதை பயன்படுத்த முன்வரலாம், எல்லோராலும் எத்தனால் தயாரிக்கமுடியாது என்பதால் எத்தனால் ஏற்றுமதியில் கூட பெரும் லாபம் ஈட்ட முடியும்.

ஆக என் சிற்றறிவுக்கு புரிந்த வகையில் எந்த கோணத்தில் பார்த்தாலும் நன்மையளிக்கும் இந்த திட்டத்தை ஏன் எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவதில்லை?

சரி இதுல என்ன பொது நலம் கலந்த சுயநலம் உனக்கு அப்டினு யாரும் கேட்குற மாதிரி வைக்க கூடாதுல, அதையும் தெளிவா சொன்னாதானே சரியா இருக்கும்

பொது நலம் : 1) நாட்டின் பொருளாதார முன்னேற்றம்2) குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் போன்றவை3) சுற்றுப்புற சூழல் பாதிப்பு குறைவது போன்றவை.

சுய நலம் : என்னதான் கணிப்பொறி துறையில வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் நான் மாரனேரி என்னும் கிராமத்துல ஒரு விவசாய குடும்பத்துல பிறந்தவன் தானே. கரும்புக்கும் சோளத்துக்கும் நல்ல விலை கிடைக்கும்னா என்ன மாதிரி விவசாயிகளுக்கு பெரிய நன்மைதானே ... Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:59 PM
எல்லாரயும் பார்துட்டு நாமளும் ரொம்ப வீராப்பா வலைப்பூவ தொடங்கிட்டோமே, என்னடா எழுதறதுனு யோசிச்சுகிட்ட்டே வெள்ளிகிழமை சாயங்காலம் சீக்கிறமா வேலைய விட்டு வீட்டுக்கு வந்த நானு யோசிச்சுகிட்டே, இணையத்துல ஆனந்த விகடன படிச்சுகிட்டு இருந்தேன். நீ என்ன பண்ணா எங்களுக்கு என்னா? சொல்ல வந்தத சொல்லுடானு திட்டக்கூடாது, ஏன்னா, நம்மள எது எழுதத் தூண்டுதுனு சொல்லுறதுதானே ஒரு பெரிய எழுத்தாளனுக்கு அழகு? ( 2 வது பதிவுலயே பெரிய எழுத்தாளனானு கேள்வி* உங்களுக்கு வந்தா அதுக்கு விடை கடைசியில இருக்கு) .

இந்த வார விகடன்ல சினிமா பகுதியில நம்ம இளம் கதநாயகர் பரத்தோட பேட்டி இருந்துச்சு. அவரு இப்போ "சூப்பர் ஹிட்" இயக்குநர் பேரரசுவோட படத்துல நடிக்கிறாரு. படம் பேரு பழனி, இந்த பேட்டில பரத்து " விஜய்க்கு ஒரு சிவகாசினா, எனக்கு பழனி" அப்டினு சொல்லிப்புட்டாரு.

இப்போ எல்லாம் விகடன் பத்திரிக்கைய இணையத்துல படிச்சா , அதுல ஒரு ஒரு பகுதிக்கும் நாம கருத்து எழுதலாம் பாருங்க, அங்க தான் நிறைய பேரு அவங்க அவங்க கருத்து சுதந்திரத்த காட்டுவாங்க( நான் உட்பட). அட நீ வலைப்பூவுல எழுதிகிழிக்கிறப்ப, அவங்க எல்லாம் விகடன்ல எழுதகூடாதானு நீங்க எல்லாம் கேட்க கூடாது.

அதுல ஒருத்தர், கீழ்கண்ட கருத்த எழுதியிருந்தாரு

"அய்யா சாமி நீங்கள்லாம் சினிமாக்கு எதாவது நல்லது பண்ணனும்னு நெனச்சா காதல் மாதிரி படங்கள்ல நடிக்கிறதோட நின்னுக்குங்க. விஜயோட கம்பேர் பண்ணி பேசறதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்கண்ணா... அவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய ஸ்டார் ஆக எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை சந்தித்து இருப்பார். திடீர்னு யாரும் பெரிய ஆள் ஆகிவிட முடியாது. "

இங்க தான் என் கேள்வி ஆரம்பிக்குது. (அப்பா ஒரு வழியா ஆரம்பிச்சுட்டேன்).
அப்டி என்னங்ணா விஜய் கஷ்டப்பட்டாரு? அவங்கப்பா டைரக்டரு சும்மா மவனுக்காக பக்கா மசாலா படமா எடுத்து மவன ஒரு கமர்ஷியல் ஹீரோவாக்குனாரு, நடிக்க வந்து ரொம்ப நாளைக்கு அப்றம் பூவே உனக்காக படத்துல நடிச்சதுக்கு அப்றம் தானே விஜய் வெளியிலயே தெரிஞ்சாரு. ஆக விஜய் ஒண்ணும் யாருமே படாத கஷ்டம் எல்லாம் பட்டு பெரிய ஆளா ஆகலை. வேற மொழிகள்ல நல்லா ஒடுன படத்த வாங்கி, ரீ மேக் பண்ணித்தான் அவரோட பாதி படம் வருது. அப்டி எந்த விதத்துல அவரோட ஒப்பிட கூட முடியாத அளவுக்கு அவரு பெரிய ஆளு?

நம்ம பரத் அப்டியா? 5 பேரோட ஒருத்தரா பாய்ஸ் படத்துல அறிமுகமாகி, அப்டியே 4 ஸ்டூடண்ட்ஸ் ல 4 பேருல ஒருத்தரா வந்து, அப்றம் வில்லத்தனமா எல்லாம் நடிச்சு, படிப்படியா முன்னேறி இன்னைக்கு ஒரு கதநாயகனா வந்துருக்காருல. இதுல முக்கியமான விஷயம் அவங்க அப்பா தயாரிப்பாளர் இல்ல, அவங்க அண்ணண் இயக்குநரும் இல்ல.
அது ஏன் நம்ம தமிழ் நாட்ல மட்டும் நான் அடுத்த சூப்பர் ஸ்டாரவேண் அப்டினு யாரும் சொன்னா, உடனே எல்லாரும் சீறி பாய்ஞ்சு வந்து, அது எப்டி நீ அடுத்த சூப்பர் ஸ்டாரவேன்னு சொல்லலாம்னு திட்றாங்க?
பாவம் ஒருத்தரு அப்டி சொல்லிட்டு, எல்லாரும் சொன்ன கருத்தையெல்லாம் கேட்டு " நான் பேஷ் மாட்டேன், இனிமே நான் பேஷ்வே மாட்டேன்னு" புலம்பிக்கிட்டி கிடந்தாரு. (இப்பதன் மறுபடியும் பேஷ ஆரம்பிச்சுருக்காரு)

ஒரு பள்ளிகூடத்துல படிக்கிற பையன் நான் முதல் ரேங்க் வாங்க ஆசைப்படுறேன்னு சொன்னா தப்புனு சொல்வீங்களா? ஆசைப்படுறது அவன் அவன் உரிமை. அதுக்கு தகுந்தபடி உழைச்சா அவன் அதை அடையப்போறான். இது நாம வேலை பார்குற இடம், சினிமா, அரசியல் எல்லாத்துக்கும் பொருந்தும்.

இப்போ சரத்குமார், விஜயகாந்த், ராமதாசு, இவ்ளோ ஏன் நம்ம தமிழ்நாடு காங்கிரஸ்ல சிலரே 2011 ல நாங்கதான் ஆட்சியமைப்போம்னு சொல்றாங்கள்ல ? நான் கூட சீக்கிரம் ப்ராஜெக்ட் மானேஜர் ஆகணும், அப்றம் சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு, பெருசா இல்லனாலும் ஏதோ ஒரு பில்கேட்ஸ் அளவுக்காவது வரணும்னு ஆசைப்படுறேன்.

தகுதியும் திறமையும் இருந்தா ஆசைப்படுறத அடையப்போறோம். அப்துல் கலாம் சொன்ன மாதிரி எல்லாரும் கனவு கண்டாதனே முன்னேற முடியும்?
அப்டித்தான் நம்ம பரத்தும் சொல்லியிருக்காரு. அத போய் தப்பு சொன்னா எப்டி ? ஆசைப்படுறது தப்பாங்க ?

* 2 வது பதிவுலயே பெரிய எழுத்தாளாராடா நீ ? என்ற கேள்விக்கு பதில்: நான் பெரிய எழுத்தாளராகணும்னு ஆசைப்படுறேன். ஏனுங்க, ஆசைப்படுறது தப்பா? Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க