அபி அப்பா பதில்களை இரண்டு பாகங்களாகத் தந்திருக்கின்றார் (
பாகம் 1,
பாகம் 2) மிக்க நன்றி அபி அப்பா.
ஆனால் பல இடங்களில் கலைஞருக்கே உரிய வார்த்தை விளையாட்டுக்களை காணமுடிகின்றது.
மீண்டும் மீண்டும் நான் மிட்டாய், உணவு உதாரணத்தை உபயோகிக்க வேண்டியிருக்கின்றது. மிட்டாய் கொடுப்பதை தவறு என்று கூறவில்லை.ஆனால் உணவு அளித்துவிட்டு அதை கொடுங்கள் என்றுதானே சொல்கின்றோம்.
இலவச தொலைகாட்சி வழங்குவதால் எந்த வளர்சிப் பணி பாதிக்கின்றது என்று கேட்டுள்ளீர்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஒன்று?
10 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு இன்று 10 மடங்கு அதிகமான செலவில் நிறைவேற்றப்படுகின்றது. அதுவும் ஜப்பான் நாட்டு வங்கியின் நிதியுதவியுடன். இத்தனை நாட்கள் தள்ளிப்போனதற்கு காரணம் நிதியில்லை என்பது தான்.
குடிநீர் திட்டத்திற்கு தேவை 1334 கோடி ரூபாய், இதற்கு அந்நிய நாட்டு நிதியுதவி தேவை. ஆனால் இலவச தொலைகாட்சி திட்டத்திற்கு எந்த நாட்டு வங்கியின் நிதியுதவியும் பெறாமல் 2000 கோடி ரூபாய் செலவழிக்கின்றோம் , இது நியாயமா சொல்லுங்கள்?
இலவசம் என்று கூறி மக்களை வீணாக்க வேண்டாம் என்றுதானே எல்லோரும் வேண்டுகின்றோம். நம் வரிப் பணம் தானே அய்யா இந்த இலவச திட்டங்களில் வீணாய் போகின்றது?
இன்னும் சாலைகள் இல்லாத, மின்வசதியில்லாத,பள்ளியில்லாத கிராமங்கள் எத்தனை உள்ளன தமிழகத்தில்? மின்வசதியே இல்லாத கிராமங்களுக்கு கூட இலவச தொலைகாட்சி கொடுத்த செய்தியும் நாம் படித்தோமே. ஆக அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்யாமல் ஏன் ஆடம்பர பொருளை இலவசமாக கொடுக்க வேண்டும்?
ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 30 ரூபாய் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றேன், இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 100 கோடி. ஆனால் சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு ?
வரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார்? திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா? கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே? இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா? குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா? ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் ?
ஒரு நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் அதன் முதலாளிக்கு லாபம் ஈட்டி தருபவர்கள், ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்க்க அதிக சம்பளம் கொடுக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் அப்படி செய்வதை எப்படி சரி என்று சொல்வது ? லாபம் வரும் என்றால் ஊக்கத் தொகை அளிக்கலாம். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்? அவர்களால் அரசுக்கு ஏதேனும் லாபம் வருகின்றதா என்ன?
கேளிக்கை வரி விதித்தால் திரைப்படத்தொழில் நசிந்துவிடுமா? இப்போது கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் மட்டும் சாமன்ய தொழிலாளர்கள் எல்லாம் மாடி வீட்டு மகாதேவர்களாகவா இருக்கின்றார்கள்? கேளிக்கை வரி ரத்து திரைப்படத்துறையில் வேலை பார்க்கும் சாமன்யர்கள் ஆகட்டும், மற்ற சாமன்யர்களாகட்டும், யாருக்கும் உபயோகம் இல்லாத ஒன்று என்பதே உண்மை.
//" துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது. துபாய் காசு 20 காசுக்கு 1 கிலோ அரிசி. இது சாதனையா இல்லை வேதனையா? முன்னே போனா கடிக்கிறீங்க பின்னே போனா உதைக்கிறீங்கப்பா. இப்படி ஒரு கேள்வி கேட்டு உங்கள் பதிவை நகைச்சுவை என வகைப்படுத்தி இருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்."//துபாயில் அல்ல அய்யா, இங்கு சிங்கப்பூரிலும் அரிசி விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்தியாவில் அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைத்தடுக்க மத்திய அரசு, அரிசு ஏற்றுமதியை தடை செய்துவிட்டது.
வெளிநாடுகளில் அரிசி இருப்பு குறைந்துவிட்டதாலும், நெருக்கடியை பயன்படுத்தி லாபம் பார்க்கும் வியாபரிகளாலும் தான் இப்படி விலை உயர்ந்துவிட்டது.
2 ரூபாய் அரிசி திட்டத்தில் நான் கடிக்கவும் இல்லை, உதைக்கவும் இல்லை. போலி குடும்ப அட்டைகளை ஒழியுங்கள். மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தி அவர்கள் எல்லோரையும் போல் உண்மையான விலையை கொடுத்து வாங்கும் நிலைக்கு உயர்த்துங்கள். இப்படி சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து சோம்பேறிகள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்கின்றேன்.
இதில் நகைச்சுவை என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை.
//" கலைஞருக்கும் கடலோர காவல் படைக்கும் என்ன சம்மந்தம். கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே!! தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க "தமில்" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர்!! "//அண்ணண் லக்கிலுக் அவர்களின் பதிவுக்கு நான் எழுதிய பதிலை நீங்கள் படிக்கவில்லை என்பது, கடற்படை குறித்து நீங்கள் எழுதியுள்ளதில் இருந்தே தெரிகின்றது. விசயகாந் செய்வது திரைபடத்தில், அதுபோல் ஒருவேளை அவரே முதல்வரானாலும் செய்ய முடியாது.
அதே போல் கலைஞர் அல்ல, எவரை தூக்கி கடலில் போட்டாலும் யாரும் கட்டுமரமாக முடியாது.
கலைஞரால் கட்டுமரமாக முடிந்தால் , விசயகாந்தும் ராவல்பிண்டி ரகீம்கானை கைது செய்யமுடியலாம். (இதனால் நான் விசயகாந்தின் ரசிகன் என்றோ, அவரது கட்சிக்காரன் என்றோ நினைத்து விடாதீர்கள்)
ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதை தான் தடுக்க முடியவில்லை, குறைந்த பட்சம் நம் இந்திய தமிழர்களை சிங்களப்படைகள் கொல்வதைக் கூடவா பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பது?
மத்திய கூட்டணி ஆட்சியில் முக்கியத்துவம் வய்ந்த தலைவரும், பாதிக்கப்படும் தமிழர்களின் முதல்வரும் ஆன நம் கலைஞர் ஏன் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககூடாது?
போராடி பெற்ற அமைச்சகங்கள் மக்களுக்கு நன்மை செய்யத்தான் என்று சொன்னீர்கள் உண்மைதான், ஆனால் திறமையாக செயல்பட்ட தயாநிதிமாறனின் பதவியை குடும்ப சண்டையில் பறித்தபின் அதே துறைக்கு நியமிக்கப்பட்ட ராசா என்ன செய்கின்றார்? தயாநிதி அளவுக்கு திட்டங்கள் இல்லையே ? இப்போது மக்கள் நலன் எங்கு சென்றது ? மகனின் நலன் தானே முன் நின்றது?
மற்றபடி செயலலிதா வீட்டில் கோழி திருடிய கதையெல்லாம் உங்கள் வார்த்தைசித்து , அதற்கு நான் என்ன சொல்வது, படித்து ரசிக்கின்றேன்.
//"திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா தங்களால்??? அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை? போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை? இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா? தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான்! சந்தேகமே இல்லை!"//ஆகா என்ன அருமையாக என்கேள்வியை திசை திருப்பி விட்டீர்கள்? கலைஞரை நான் என்ன எல்லா தொண்டன் வீட்டு நல்ல, கெட்ட காரியங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றா கேட்டேன்? பதவியை ஏன் குடும்பத்தினருக்கே தருகின்றார் என்று தானே கேட்டேன்?
தகுதி வாய்ந்த எத்தனையோ கட்சிக்காரர்கள் இருந்த போதும் ஏன் கனிமொழிக்கும், கயல்விழிக்கும் வாய்பளிக்க வேண்டும்? இதற்கு பதிலையே காணோம்?
அரசு கேபிள் கழகத்தை செயலலிதா ஆரம்பிக்க முயன்ற போது அதை தடுக்க மாநில ஆளுநரிடம் புகார் கொடுத்த அதே கலைஞர் இன்று ஏன் அரசு கேபிள் கழகம் ஆரம்பிப்பதில் இத்தனை தீவிரம் காட்ட வேண்டும் ? அரசு கேபிள் கழகம் குறித்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லையே ?
சேது சமுத்திர திட்டம் மிக அருமையானத் திட்டம்தான் அதை நான் குறை சொல்லவில்லை.
ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் மிக நல்லத் திட்டம். இது தான் தூண்டிலை கையில் கொடுப்பது. அவனுக்கு தேவையான் மீனை அவனே பிடித்துக்கொள்வான் அல்லவா? அதை நான் வரவேற்கின்றேன்.
என் கேள்விகள் சாதாரணமாக எல்லோர் மனதிலும் தோன்றும் சந்தேகங்கள். எல்லாத் திட்டங்களையும் எதிர்பதோ, அல்லது விதண்டாவாதம் செய்வதோ என் நோக்கம் அல்ல. நானும் ஒரு திமுக அபிமான குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் , உரிமையுடன் தான் இந்த கேள்விகளை கேட்கின்றேன்.