Author: ஜோசப் பால்ராஜ்
•9:37 PM
சில காலங்களுக்கு முன்பு வரை கிராமப்புறங்களுக்கு ஏதாவது அவசர செய்திகளை அதிலும் குறிப்பாக மரண செய்திகளை சொல்ல மட்டுமே பயன்பட்டு வந்த தகவல் தொடர்பு முறைதான் தந்தி. சமீபகாலத்தில் செல்லுலார் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்த பின்னர் தந்தி சேவையின் தேவை மிக மிக குறைந்து போயிருந்தது.

ஆனால் சமீபத்தில் ஈழப் போரை நிறுத்தக் கோரி பல முறை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்(???), வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி என பலருக்கும் அடிக்கடி தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி தந்தி அனுப்பி வந்தது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. தான் மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தமிழக மக்கள் அனைவரையும் வேறு தந்தி அனுப்பி போராட்டம் நடத்தி அழிந்து வரும் தந்தி சேவையை காப்பாற்றவும் செய்தார் என்பதும் நாம் அறிந்த ஒன்று.

மின்னஞ்சல் சேவை மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகிய பின்னர் கடிதம் எழுதுவதும் மிக அரிதாகி கொண்டே இருந்த நிலையில் உயிர் போகும் பிரச்சனையாக இருந்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுவேன் என்ற தனது உறுதியான கொள்கையால் பல கடிதங்களும் எழுதி கடித சேவையையும் காப்பாற்றியுள்ளார்.

தபால் மற்றும் தந்தி சேவை ஆகியவை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அமைப்புகள் என்பதால் தொலை தொடர்பு அமைச்சகம், அழிந்து வரும் தபால் தந்தி சேவைகளை காப்பாற்ற கருணாநிதி அவர்கள் செய்துவரும் மாபெரும் சேவைகளைப் பாராட்டி ஒரு பெரிய பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தற்போது இவ்விழாவை நடத்த இயலாது என்பதால் தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை நீங்கள் காப்பாற்றுகிறேன் என எடுத்த முயற்சிகள் அவர்களை காப்பாற்றியதோ இல்லையோ, அழிந்து வரும் தபால் மற்றும் தந்தி முறைகளை காப்பாற்றியுள்ளது மிகவும் பாராட்டத் தக்கதே.

வாருங்கள் முதல்வரை பாராட்டுவோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:23 AM
தமிழ் இன‌ தானைத் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்கள் ஈழத்தில் நடக்கும் இன ஒழிப்புப் போரில் அநியாயமாய் கொல்லப்படும் தமிழர்களின் உயிர்களைக் காக்க மிக நீண்ட காலமாக யோசித்து சமீபத்தில் அறிவித்த அருமையான திட்டமான பிரதமருக்கு தந்தி திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று ஒரு நாளில் மட்டும் கோடிக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு குவிந்துள்ளன. தமிழகமெங்கும் அனைத்து தந்தி அலுவலகங்களிலும் வேறு எந்த தந்தியும் அனுப்ப இயலாத அளவுக்கு இன்று முழுவதும் பெருமளவில் மக்கள் வரிசையாக நின்று தந்தி அனுப்பியுள்ளனர். மேலும் பல தந்தி அலுவலகங்களுக்கு அருகில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கடுமையான கூட்டம் கூடி பல மணி நேரம் வரிசையில் நின்று அனைவரும் தந்தியடித்துள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தில் தமிழர்களிடம் இருந்து வரும் தந்திகளை குவிக்க என மாபெரும் கிடங்கு ஒன்றை வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளார்கள். அந்த அளவுக்கு வந்து குவிந்த தந்திகளைப் பார்த்து பிரதமர் பதறிபோய் உடனடியாக என்ன செய்வது என்றுத் தெரியாமல் சோனியாவை சந்தித்துவிட்டு அவரது ஆலோசனையின் பேரில் உடனடியாக மத்திய அமைச்சரவை கூடி ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளது. அந்த கடுமையான முடிவை உடனடியாக செயல்படுத்தியும் விட்டார்கள்.

அதன்படி, உடனடியாக இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழைத்து அவரிடம் இந்தியா தனது கடுமையானக் கண்டணங்களை தெரிவித்துள்ளது. இந்தக் கடும் கண்டணத்தை நேரில் வாங்கிய இலங்கைத் தூதர் தற்போது டெல்லியில் நிலவும் கடுமையான குளிரிலும் பயங்கரமாய் வேர்த்து கொட்டி, மிக அதிகளவில் நீர் கேட்டு வாங்கி குடித்துள்ளார். இந்த கடும் கண்டணத்தை வெளியுறவு அமைச்சரது அனுமதியுடன் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்தே தொலைபேசி வாயிலாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவிடம் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக இந்த கடும் கண்டணத்தை கேள்வியுற்ற இலங்கை அதிபரும் பேரதிர்ச்சிக்குள்ளாகி அலரி மாளிகையில் இருந்த அவ்வளவு நீரையும் குடித்தப் பின்னரும் மேலும் நீர் கேட்டமையால் உடனடியாக இரு லாரிகளில் குடிநீர் கொண்டுச் செல்லப்பட்டதாக கொழும்பில் இருந்து வந்த நம்பத்தகுந்த செய்திகள் அறிவிக்கின்றன.

போதுமான அளவு நீர் அருந்தி முடித்த‌ இலங்கை அதிபர் உடனடியாக ராணுவத் தளபதி சரத் பொன் சேகாவை அழைத்து அனைத்து படை நடவடிக்கைகளையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் இனி இலங்கைக் கடற்படையினர் கடலுக்குள்ளேயே செல்லக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். எனவே இனி இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட மாட்டார்கள் எனவும், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கைக் கடற்படையினரின் தொல்லை இனி இருக்காது என்றும் தெரியவருகிறது.

இது கலைஞர் கருணாநிதியின் அறிவுப்பூர்வமான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

இப்போராட்டத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து தமிழகத்தில் மின்வெட்டை கண்டித்து ஆற்காடு வீராச்சாமிக்கு தந்தி அடிப்பது அல்லது தபால் கார்டு எழுதுவது போன்ற போராட்டங்களை கலைஞர் அறிவிப்பார் எனவும் தெரிகிறது.

பின்ன என்னங்க, எங்க ஊருல ஒரு கதை சொல்லுவாய்ங்க. ஒரு சரியான கஞ்சன், சாப்பிட்டுக்கிட்டு இருக்கப்ப எச்சக்கையால காக்கா கூட விரட்டாத ஒருத்தன் வீட்டுக்கு, ஒரு நாள் ஒரு விருந்தாளி வந்தாராம். என்னடா இது நம்ம ஊட்டுல சாப்புட இவன் வந்துட்டானே, எப்படி துரத்துறதுனு திரு.கஞ்சனும், அவரது மனைவியும் திட்டமிட்டு கணவண் மனைவி இடையே கடுமையான சண்டை என்பது போல நடித்தார்களாம். திரு.கஞ்சன் தன் திருமதியை அடி அடி என அடிப்பது போல் நடித்தாராம். அதப் பார்த்த விருந்தாளி, இது என்னடா நாம வந்த நேரம் சரியில்லைப் போலன்னு நினைச்சுக்கிட்டு அப்படியே திரும்பி போயிட்டாராம். அவர் போயிட்டாருன்னு நினைச்சுக்கிட்டு கஞ்சனும், அவரு மனைவியும் தங்கள் சாதனையை பெருசா பேசிக்கிட்டாங்களாம்.

திரு.கஞ்சன்: நான் வலிக்காமல் அடித்தேனே!!.

திருமதி.கஞ்சன்: நானும் நோகாமல் அழுதேனே!!.

இவ‌ங்க‌ ரெண்டு பேரும் போயிட்ட‌தா நினைச்ச‌ விருந்தாளி உள்ள‌ குதிச்சு..

நானும் போகாம‌ல் இருந்தேனே!!!! அப்டினு சொன்னாராம்.

வ‌லிக்காம‌ல் அடித்த‌ க‌ருணாநிதியும், நோகாம‌ல் அழுத‌ ம‌த்திய‌ அர‌சையும், போகாம‌ல் இருக்கும் இல‌ங்கைய‌ர‌சின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தையும் வேற‌ என்ன‌ச் சொல்லுவ‌து.

தன்னால் முடியும் என்ற நிலையில் இருந்த போதும், எதிர்கட்சிகள் எல்லாரும் உண்ணாவிரதம் இருக்கின்றார்களே, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இப்படித் தனது கட்சியும் அங்கம் வகிக்கும் மத்தியரசின் கவனத்தை ஈர்க்க, தந்தி போராட்டம் அறிவிக்கும் கலைஞரை என்ன சொல்லி வாழ்த்துவது?

இதனால் யார் மகிழ்ச்சியடைந்தார்களோ, கட்டாயம் மத்தியமைச்சர் இராசா மகிழ்ந்திருப்பார். பின்ன அவருதானே தபால் தந்தி துறைக்கும் அமைச்சர். அவங்களுக்கு இன்னைக்கு நல்ல வசூல் ஆகியிருக்கும்ல? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:34 AM
இன்றைய செய்தித்தாள்களில் கண்ட இரண்டு செய்திகள் ஒரு நல்ல செயலை முதல்வர் தொடங்கியிருப்பதை தெரிவித்தன.

முத‌ல் செய்தி: தூத்துக்குடி துறைமுக‌த்தின் ஒன்ப‌தாவ‌து ச‌ர‌க்கு த‌ள‌த்தை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைத்துள்ளார்.

2 வ‌து செய்தி: த‌ஞ்சையில் அர‌சு கேபிள் க‌ழ‌க‌த்தின் செய‌ல்பாட்டை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைக்கின்றார்.

இப்பதிவின் நோக்கம் தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்கு தளத்தை பற்றியோ, அல்லது அரசு கேபிள் கழகத்தை பற்றியோ அல்ல.

இந்த இரண்டு திட்டங்களையும் தொடங்கி வைத்த வழி இன்றையக் காலகட்டத்தில் மிகச் சிறந்த வழி. அதற்கு பாராட்டத்தான் இந்த பதிவு.

ஒரு முதலமைச்சர், பிரதமர், அமைச்சர்கள் போன்றோர் வெளியூர் பயணம் செய்ய அரசின் வழிகாட்டும் விதிமுறைகள் பல உள்ளன.

முதல்வர் வெளியூர் பயணம் செய்கின்றார் என்றால் அதற்கான ஏற்பாடுகள் குறைந்தபட்சம் ஒரு 15 நாட்களுக்கு முன்னால் இருந்தே தொடங்கிவிடும். காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு எல்லா அரசு அதிகாரிகளும் இதே வேலையாகத்தான் இருப்பார்கள். அரசு பணம் எல்லாவற்றிற்கும் செலவாகும்.

இது அரசுக்கு ஏற்படும் செலவு. அதைவிட முதல்வர் பயணத்தால் போக்குவரத்து நிறுத்தம் போன்றவை பொது மக்களுக்கு இடைஞ்சல்.

இங்கு நான் முதல்வர் கருணாநிதியின் பயண எளிமையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். முடிந்த அளவுக்கு இவர் இரயில் பயணங்களைத்தான் மேற்கொள்வார். மிக குறைந்த அளவே விமானங்களில் செல்வார். அதுவும் பயணிகள் விமானத்தில்தான் செல்வார். அப்படி செல்லும் போதும் கூட பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. தனிவிமானத்தில் இவர் சென்றதாக இதுவரை நான் அறிந்ததில்லை. மேலும் இவர் பயணிக்கும் பாதையில் போக்குவரத்து மிக குறைந்த நேரமே நிறுத்தப்படும்.

சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கே ஹெலிகாப்டரிலும், சாலை வழிப்பயணம் என்றால் பயணிகள் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியும் சாதனைகள் புரிந்த முன்னாள் முதல்வரைக்குறித்து நான் தனியாக எழுத வேண்டியதில்லை.

மேலும் சாதரணமாக முதல்வர் ஒரு ஊருக்கு வருகின்றார் என்றால் அவர் சார்ந்த கட்சிக்காரர்கள் செய்யும் ரகளை இருக்கின்றதே அது சொல்லி மாளாது.
இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

ஒரு ஊருக்கு அரசு விழாவாக சென்றாலும், கட்டாயம் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றிலும் முதல்வர் கலந்துகொள்வார். கட்சி பொதுக்கூட்டத்திற்காக இவர்கள் வசூல் செய்வதும், ஊரெல்லாம் கட்சிகொடியை கட்டுவதும், தோரணங்கள், கட் அவுட்கள் என்று சாலைகளை பெயர்பது இவையெல்லாம் தவிர்க்க முடியாத நிகழ்வுகள்.

ஆக அரசு பணத்திற்கும் வீண் செலவு, அரசு அதிகாரிகளுக்கும் அதிக வேலைப்பளு, செலவு, மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு நன்கொடை செலவு, சாலைகளுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கும் வீண்சிரமம் என எல்லாவற்றையும் தவிர்த்து, அதுவும் எரிபொருட்களின் விலை தாறுமாறாக ஏறியுள்ள இந்த நிலையில் முதல்வர் தூத்துக்குடிக்கும், தஞ்சைக்கும் பயணித்து இத்திட்டங்களை தொடங்கிவைக்காமல் , சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே வீடியோ கான்பரன்ஸிங் முறையில் தொடங்கி வைத்தது மிக நல்லது.

நேரில் சென்றே ஆக வேண்டிய நிகழ்ச்சிகளைத்தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் இதே முறையில் அமைத்தால் அரசுப்பண செலவு, கால விரயம், மக்கள் சிரம் எல்லாம் தவிர்த்துவிடலாம்.

அமைச்சர்கள் செல்வதற்கு இவ்வளவு கெடுபிடிகள் இல்லையென்பதால், அமைச்சர்கள் எல்லோரும் பயணங்கள் செய்து மக்கள் பணியாற்றலாம்.

இந்த வாரம் ஞாநியும் தனது ஓ பக்கத்தில் இதற்காக முதல்வருக்கு பூச்செண்டு கொடுப்பார் என நம்புகின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:34 PM
நாகப்பட்டிணம் ஆற்காடுபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நாகை ஆற்காடுபுரத்திலிருந்து, மீன் பிடிப்பதற்காக வாசகன், நாராயணசாமி மற்றும் முரளி ஆகியோர் தான் இலங்கை படையினரால் சுடப்பட்டு முரளி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வாசகன், நாராயண சாமி இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

செத்தது தமிழர்கள் தானே? இவர்கள் என்ன தீவிரவாதிகளா? இவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி தானே? என்ன செய்யப்போகின்றீர்கள் இதற்கும் ?

இங்கு சாகும் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட‌ ந‌ம‌து முத‌ல்வ‌ருக்கு எங்கே நேர‌ம் இருக்கும்? அவ‌ருக்கு தான் ப‌ல‌ க‌வ‌லைக‌ள் இருக்குமே? இதை கேட்டால் அவ‌ர் என்ன‌ துப்பாக்கியை தூக்கிக்கொண்டா போய் ச‌ண்டை போட‌ முடியும் என்று அண்ண‌ண் ல‌க்கிலுக், அபி அப்பா போன்றோர் கேட்பார்க‌ள்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதே சட்ட விரோதம் என்று அறிவிக்கச்சொல்லுங்கள். கடலில் இறங்கினால் நாங்களே சுடுவோம் என அறிவியுங்கள். செத்தாலும் இந்தியப் படையினரால் சுடப்பட்டு இறந்தோம் என்ற பெருமையாவது கிடைக்கட்டும் எங்கள் இந்திய மீனவர்களுக்கு.

ஏன் நம் நாட்டுக்கு கீழே கையகலமே உள்ள ஒரு நாட்டின் கடற்படையால் சுடப்பட்டு சாகணும்?
தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்தே பிரித்துவிட்டார்களா என்ன ? த‌மிழ‌ன் செத்தால் இந்தியா க‌ண்டுகொள்ளாதா?

ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்தின் தமிழர்களை இலங்கைப்படை கொல்வதில் இருந்து காப்பாற்றமுடியவில்லை என்றால் இவர்களால் நமக்கு என்ன பயன்?

இத்தனை தமிழர்களை கொன்ற சிங்கள கடற்படையைப் பார்த்து இதுவரை ஒரு எச்சரிக்கை குண்டையாவது சுட்டிருக்கின்றதா பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவின் கடற்படை?

இனியும் எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டு இருக்காது என்று சட்டசபையில் அறிவித்த முதல்வர் இப்போது என்ன செய்யப்போகின்றார்? கடிதம் எழுதுவதைத் தவிர ?

இதுவரை எத்தனை மீனவர்களை கொன்றுள்ளது அந்த கேடுகெட்ட சிங்களப்படை? இதுவரை எத்தனை கடிதம் எழுதியுள்ளீர்கள்? அத்தனை கடிதங்களுக்கும் ஒரு பதில் கடிதாமாவது வந்துள்ளதா?

கலைஞரின் கடிதங்களாவது பிரதமரை சென்றடைகின்றதா? இல்லை அத்தனையும் குப்பை கூடைக்களுக்குத்தான் செல்கின்றதா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:21 AM
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 70 தமிழ் படங்களுக்கு ஒரு படத்திற்கு 7 லட்சம் வீதம் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மானியமாக அளிக்கப்படுகின்றது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏன் திரைத்துறையினருக்கு மட்டும் இத்தனை சலுகைகளை வாரிவாரி வழங்க வேண்டும் என்று கேட்டால், அதில் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றார்கள் என்று பதில் சொல்லும் அண்ணண் லக்கி லுக், அபி அப்பா போன்றோர், ஏற்கனவே எடுத்து வெளியிடப்பட்ட இந்த படங்களுக்கு இன்று சலுகை அளிப்பதால் இது தயாரிப்பாளரை மட்டும் சென்றடையுமா அல்லது அதில் பணிபுரிந்த அனைத்து சாதரண ஊழியர்களுக்கு கொடுக்கப்படுமா என்று விளக்கினால் நல்லது.

இன்னும் பள்ளிகளே இல்லாத எத்தனை கிராமங்கள் உள்ளன? பெயரளவில் பள்ளி இருந்தும் அதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் இல்லாமலும் எத்தனை பள்ளிகள் உள்ளன?
வெறும் மரத்தடியில் மாணவர்களை அமரச்செய்து பாடம் நடத்தும் அவலங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது?


நெல்லை மாவட்டத்தில் நதியின் ஒரு கரையில் இருக்கும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் நதியின் மறுகரைக்கு செல்ல பாலம் இல்லாமல், தினமும் தண்ணீரில் நீந்தி நதியை கடந்து அக்கரையை அடைந்து சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட இப்படி நதியை கடந்து சென்றுதான் தங்கள் படிப்பையே தொடர வேண்டிய அவலமும் இதே தமிழகத்தில் தான் நடக்கின்றது.

அங்கு ஒரு பாலம் கட்ட கட்டாயம் 4.9 கோடி செலவு ஆகாது. அங்கு பாலம் கட்டினீர்களேயானால் எத்தனையோ மாணவர்கள் சிரமமின்றி தங்கள் கல்வியை தொடர்வார்கள்.

ஆனால் இவர் கதை வசனம் எழுதிய பாசக்கிளிகள் படத்திற்கும் சேர்த்து 70 தரமான படங்களுக்கு 7 லட்சம் உதவித்தொகை அளிக்கின்றார். இதில் தரமான படம் என்பதை எந்த அளவுகோலை வைத்து தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. இங்கிலிஷ்காரன், வெற்றிவேல் சக்திவேல், 6.2" போன்ற படங்கள் எல்லாம் அந்த தரமான படங்களின் பட்டியலில் இடம்பெற்று 7 லட்சம் பெறுகின்றன.

பட்டியலில் உள்ள பல படங்களின் பெயர்கள் கேள்விப்படமாதிரி கூட இல்லை என்பது தனிக்கதை.

அதிமுக‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌டாத‌ ச‌லுகைக‌ளையும் சேர்த்து இவ‌ர் அறிவிக்கின்றார். இப்போது அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ 70 ப‌ட‌ங்க‌ளும் 2005 ம‌ற்றும் 2006 ஆண்டுகளில் வெளியான‌வை. அப்போ இதே போல் 2007ல் வெளியான‌ 45 ப‌ட‌ங்க‌ளுக்கு வேறு த‌ர‌ப்போகின்றீர்க‌ளா?

ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் இருக்கும் போது, எப்படி மக்களின் வரிப்பணத்தை ஒரு துறைக்கும் மட்டும் வாரி இறைக்க ம‌ன‌ம் வ‌ருகின்ற‌து?

என்ன‌தான் திரைத்துறையில் இருந்து வந்திருந்தாலும், ஒட்டுமொத்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கும் இவர்தான் முத‌ல்வ‌ர் என்ப‌தை நம் முதல்வருக்கு யாராவ‌து அடிக்க‌டி நினைவூட்ட‌ வேண்டுமா என்ன‌ ? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:43 PM
அபி அப்பா பதில்களை இரண்டு பாகங்களாகத் தந்திருக்கின்றார் ( பாகம் 1, பாகம் 2) மிக்க நன்றி அபி அப்பா.
ஆனால் பல இடங்களில் கலைஞருக்கே உரிய வார்த்தை விளையாட்டுக்களை காணமுடிகின்றது.

மீண்டும் மீண்டும் நான் மிட்டாய், உணவு உதாரணத்தை உபயோகிக்க வேண்டியிருக்கின்றது. மிட்டாய் கொடுப்பதை தவறு என்று கூறவில்லை.ஆனால் உணவு அளித்துவிட்டு அதை கொடுங்கள் என்றுதானே சொல்கின்றோம்.
இலவச தொலைகாட்சி வழங்குவதால் எந்த வளர்சிப் பணி பாதிக்கின்றது என்று கேட்டுள்ளீர்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஒன்று?
10 ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு இன்று 10 மடங்கு அதிகமான செலவில் நிறைவேற்றப்படுகின்றது. அதுவும் ஜப்பான் நாட்டு வங்கியின் நிதியுதவியுடன். இத்தனை நாட்கள் தள்ளிப்போனதற்கு காரணம் நிதியில்லை என்பது தான்.
குடிநீர் திட்டத்திற்கு தேவை 1334 கோடி ரூபாய், இதற்கு அந்நிய நாட்டு நிதியுதவி தேவை. ஆனால் இலவச தொலைகாட்சி திட்டத்திற்கு எந்த நாட்டு வங்கியின் நிதியுதவியும் பெறாமல் 2000 கோடி ரூபாய் செலவழிக்கின்றோம் , இது நியாயமா சொல்லுங்கள்?

இலவசம் என்று கூறி மக்களை வீணாக்க வேண்டாம் என்றுதானே எல்லோரும் வேண்டுகின்றோம். நம் வரிப் பணம் தானே அய்யா இந்த இலவச திட்டங்களில் வீணாய் போகின்றது?
இன்னும் சாலைகள் இல்லாத, மின்வசதியில்லாத,பள்ளியில்லாத கிராமங்கள் எத்தனை உள்ளன தமிழகத்தில்? மின்வசதியே இல்லாத கிராமங்களுக்கு கூட இலவச தொலைகாட்சி கொடுத்த செய்தியும் நாம் படித்தோமே. ஆக அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்யாமல் ஏன் ஆடம்பர பொருளை இலவசமாக கொடுக்க வேண்டும்?

ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 30 ரூபாய் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றேன், இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 100 கோடி. ஆனால் சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு ?
வரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார்? திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா? கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே? இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா? குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா? ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் ?
ஒரு நிறுவனத்தில் வேலை பார்பவர்கள் அதன் முதலாளிக்கு லாபம் ஈட்டி தருபவர்கள், ஊழியர்கள் அதிக நேரம் வேலை பார்க்க அதிக சம்பளம் கொடுக்கலாம். ஆனால் ஒரு அரசாங்கம் அப்படி செய்வதை எப்படி சரி என்று சொல்வது ? லாபம் வரும் என்றால் ஊக்கத் தொகை அளிக்கலாம். திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு எதற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்? அவர்களால் அரசுக்கு ஏதேனும் லாபம் வருகின்றதா என்ன?
கேளிக்கை வரி விதித்தால் திரைப்படத்தொழில் நசிந்துவிடுமா? இப்போது கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் மட்டும் சாமன்ய தொழிலாளர்கள் எல்லாம் மாடி வீட்டு மகாதேவர்களாகவா இருக்கின்றார்கள்? கேளிக்கை வரி ரத்து திரைப்படத்துறையில் வேலை பார்க்கும் சாமன்யர்கள் ஆகட்டும், மற்ற சாமன்யர்களாகட்டும், யாருக்கும் உபயோகம் இல்லாத ஒன்று என்பதே உண்மை.
//" துபாயில் கடந்த 2 மாதங்களாக விஷம் போல விலைவாசிகள் ஏறி வந்துவிட்டன. 2 மாதம் முன்னதாக ஒரு கிலோ அரிசி 27 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 102 ரூபாய். நம்புங்கள் உண்மை. ஆனால் உலகத்திலேயே 2 ரூபாய்க்கு அரிசி தமிழகத்தில் மட்டுமே கிடைக்கின்றது. துபாய் காசு 20 காசுக்கு 1 கிலோ அரிசி. இது சாதனையா இல்லை வேதனையா? முன்னே போனா கடிக்கிறீங்க பின்னே போனா உதைக்கிறீங்கப்பா. இப்படி ஒரு கேள்வி கேட்டு உங்கள் பதிவை நகைச்சுவை என வகைப்படுத்தி இருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்."//

துபாயில் அல்ல அய்யா, இங்கு சிங்கப்பூரிலும் அரிசி விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்தியாவில் அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைத்தடுக்க மத்திய அரசு, அரிசு ஏற்றுமதியை தடை செய்துவிட்டது.
வெளிநாடுகளில் அரிசி இருப்பு குறைந்துவிட்டதாலும், நெருக்கடியை பயன்படுத்தி லாபம் பார்க்கும் வியாபரிகளாலும் தான் இப்படி விலை உயர்ந்துவிட்டது.
2 ரூபாய் அரிசி திட்டத்தில் நான் கடிக்கவும் இல்லை, உதைக்கவும் இல்லை. போலி குடும்ப அட்டைகளை ஒழியுங்கள். மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தி அவர்கள் எல்லோரையும் போல் உண்மையான விலையை கொடுத்து வாங்கும் நிலைக்கு உயர்த்துங்கள். இப்படி சலுகைகளையும், இலவசங்களையும் கொடுத்து சோம்பேறிகள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்கின்றேன்.
இதில் நகைச்சுவை என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை.
//" கலைஞருக்கும் கடலோர காவல் படைக்கும் என்ன சம்மந்தம். கலைஞருக்கும் கடலுக்கும் உள்ள ஒரே தொடர்பு அவரை கடலில் தூக்கி போட்டால் கட்டுமரமாக மிதப்பார். நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் அவ்வளவே!! தமிழ் நாட்டின் புலிமலைப்பட்டியில் ஊர்காவல் படையில் வேலை பார்த்து கொண்டு ராவல்பிண்டி ரகீம்கானை பிடித்து வந்து லாக்கப்புல வச்சி எட்டு பக்க "தமில்" வசனத்தை பேசி பேசி அவன் டவுசரை உருவும் விசயகாந்து இல்லைப்பா கலைஞர்!! "//

அண்ணண் லக்கிலுக் அவர்களின் பதிவுக்கு நான் எழுதிய பதிலை நீங்கள் படிக்கவில்லை என்பது, கடற்படை குறித்து நீங்கள் எழுதியுள்ளதில் இருந்தே தெரிகின்றது. விசயகாந் செய்வது திரைபடத்தில், அதுபோல் ஒருவேளை அவரே முதல்வரானாலும் செய்ய முடியாது.

அதே போல் கலைஞர் அல்ல, எவரை தூக்கி கடலில் போட்டாலும் யாரும் கட்டுமரமாக முடியாது.
கலைஞரால் கட்டுமரமாக முடிந்தால் , விசயகாந்தும் ராவல்பிண்டி ரகீம்கானை கைது செய்யமுடியலாம். (இதனால் நான் விசயகாந்தின் ரசிகன் என்றோ, அவரது கட்சிக்காரன் என்றோ நினைத்து விடாதீர்கள்)
ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதை தான் தடுக்க முடியவில்லை, குறைந்த பட்சம் நம் இந்திய தமிழர்களை சிங்களப்படைகள் கொல்வதைக் கூடவா பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பது?
மத்திய கூட்டணி ஆட்சியில் முக்கியத்துவம் வய்ந்த தலைவரும், பாதிக்கப்படும் தமிழர்களின் முதல்வரும் ஆன நம் கலைஞர் ஏன் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககூடாது?

போராடி பெற்ற அமைச்சகங்கள் மக்களுக்கு நன்மை செய்யத்தான் என்று சொன்னீர்கள் உண்மைதான், ஆனால் திறமையாக செயல்பட்ட தயாநிதிமாறனின் பதவியை குடும்ப சண்டையில் பறித்தபின் அதே துறைக்கு நியமிக்கப்பட்ட ராசா என்ன செய்கின்றார்? தயாநிதி அளவுக்கு திட்டங்கள் இல்லையே ? இப்போது மக்கள் நலன் எங்கு சென்றது ? மகனின் நலன் தானே முன் நின்றது?

மற்றபடி செயலலிதா வீட்டில் கோழி திருடிய கதையெல்லாம் உங்கள் வார்த்தைசித்து , அதற்கு நான் என்ன சொல்வது, படித்து ரசிக்கின்றேன்.
//"திமுகவில் இருக்கும் 2 கோடி உருப்பினர்களின் வீட்டு திருமணத்துக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் கலைஞர் போய் வந்தது போல தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்திலும் ஏதாவது ஒரு தலைவனை காட்டமுடியுமா தங்களால்??? அவர் நடத்தி வைத்த திருமணங்கள் எத்தனை? போய் வந்த துக்க நிகழ்ச்சிகள் எத்தனை? இண்டர்காம் தலைவரா அவர். கொஞ்சமாவது மனசாட்சியோடு கேள்வி கேட்க வேண்டாமா? தமிழகமே அவருக்கு உடன்பிறப்பு தான்! சந்தேகமே இல்லை!"//
ஆகா என்ன அருமையாக என்கேள்வியை திசை திருப்பி விட்டீர்கள்? கலைஞரை நான் என்ன எல்லா தொண்டன் வீட்டு நல்ல, கெட்ட காரியங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றா கேட்டேன்? பதவியை ஏன் குடும்பத்தினருக்கே தருகின்றார் என்று தானே கேட்டேன்?
தகுதி வாய்ந்த எத்தனையோ கட்சிக்காரர்கள் இருந்த போதும் ஏன் கனிமொழிக்கும், கயல்விழிக்கும் வாய்பளிக்க வேண்டும்? இதற்கு பதிலையே காணோம்?
அரசு கேபிள் கழகத்தை செயலலிதா ஆரம்பிக்க முயன்ற போது அதை தடுக்க மாநில ஆளுநரிடம் புகார் கொடுத்த அதே கலைஞர் இன்று ஏன் அரசு கேபிள் கழகம் ஆரம்பிப்பதில் இத்தனை தீவிரம் காட்ட வேண்டும் ? அரசு கேபிள் கழகம் குறித்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லையே ?

சேது சமுத்திர திட்டம் மிக அருமையானத் திட்டம்தான் அதை நான் குறை சொல்லவில்லை.
ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் மிக நல்லத் திட்டம். இது தான் தூண்டிலை கையில் கொடுப்பது. அவனுக்கு தேவையான் மீனை அவனே பிடித்துக்கொள்வான் அல்லவா? அதை நான் வரவேற்கின்றேன்.

என் கேள்விகள் சாதாரணமாக எல்லோர் மனதிலும் தோன்றும் சந்தேகங்கள். எல்லாத் திட்டங்களையும் எதிர்பதோ, அல்லது விதண்டாவாதம் செய்வதோ என் நோக்கம் அல்ல. நானும் ஒரு திமுக அபிமான குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் , உரிமையுடன் தான் இந்த கேள்விகளை கேட்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:23 PM
கலைஞருக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சார்பாக பதிலளித்த லக்கி லுக் அண்ணண் அவர்களுக்கு எனது நன்றிகள்.

இது அவருடைய பதிலுக்கு பதில் பதிவு. ஆனால் இதிலும் சில கேள்விகள் இருக்கலாம். ஆனால் லக்கிலுக் அண்ணா, இதை விதண்டாவாதமாகவோ அல்லது எதிர்கட்சிகளின் பாணியிலோ கேட்கவில்லை. இந்த கேள்விகள் பெரும்பான்மையானவர்களின் மனதில் இருக்கின்றது. ஒரு ஆரோக்கியமான விவாதமாக இதை பாருங்கள். விவாதம் தானே ஒழிய விதண்டாவாதம் அல்ல.

//"தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே."//

தொலைகாட்சி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌பொருளாக‌ அல்லாம‌ல் அத்தியாவ‌சிய‌ பொருளாக‌ மாறிவிட்ட‌து என்கின்றீர்க‌ள். ஆனால் நான் என் கேள்வியில் குறிபிட்டிருந்த‌ப‌டி, ப‌சித்த‌வ‌னுக்கு தேவை மிட்டாயா, உணவா?

ம‌க்க‌ள் தீர்ப்பே ம‌கேச‌ன் தீர்ப்பு என்றால் இப்ப‌டி கூட்ட‌ணிக‌ளின் ப‌ல‌த்தில் இல்லாம‌ல் த‌னித்தே ஆட்சியை பிடிக்கும் அள‌வு த‌னிப்பெரும்பான்மை பெற்றிருக்க‌லாமே? அப்போ இந்த இலவசத் திட்டங்களை பிடிக்காதவர்களும் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம் ?
ஏழைக‌ள் இருக்கும் வ‌ரை இல‌வ‌ச‌த்திட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌ம் என்கின்றீர்க‌ள். ஆனால் ஏழைக‌ள் முன்னேற்ற‌த்திற்கு என்று என்ன‌ திட்ட‌ம் இருக்கின்ற‌து? ஏழைக‌ள் ஏழைக‌ளாக‌வே இருந்து கொண்டிருந்தால், எத்த‌னை கால‌ம்தான் இல‌வ‌ச‌ங்க‌ளாக‌வே கொடுத்துக்கொண்டிருப்ப‌து?
எத்த‌னைகால‌ம் தான் மீனை கொடுப்ப‌து? தூண்டிலை கொடுங்க‌ள் என்றுதானே சொல்கின்றோம்.

//"அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்."//

கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சியை நானும் ஒத்துக்கொள்கின்றேன். கல்வித்துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சர்களை நியமித்தது வரவேற்கதக்கது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பணி மிகக்குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. குறிப்பாக‌ ச‌மீப‌த்தில் அவ‌ர‌து தொகுதியில் அவ‌ர் ஏற்பாடு செய்த வேலை வாய்ப்பு முகாம் மிக‌ அதிக‌ள‌வில் ப‌ல‌ருக்கு வேலை வாங்கிகொடுத்தது . அதை எல்லாம் நான் ம‌றுக்க‌வில்லை.

//"துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்."//
சீக்கிரம் நடக்கும் என்று சொல்கின்றீர்கள், நம்புவோம். ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களில் ஆர்வம் காட்டாமல் ஏன் அரசு கேபிள் கழகம் மற்றும் கலைஞர் டிவியிலேயே கவனத்தைக் காட்ட வேண்டும்?இந்த திட்டங்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக அல்லவா இருக்கின்றன?

//"சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது."//
சினிமா துறையிலும் அடித்தட்டு மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் உண்மையாக சொல்லுங்கள், கேளிக்கை வரிச்சலுகைகளால் அவர்கள் தான் பலனடைகின்றார்களா? பலனடைவது தயாரிப்பாளர், விநியோகிப்பவர், மற்றும் திரையர‌ங்கு உரிமையாளர்கள் தானே? எல்லாத் தயாரிப்பாளரும் நேர்மையாய் எல்லா கணக்கு வழக்கையும் தயாரித்து வரி கட்டி கொண்டா உள்ளார்கள்? அங்கு கறுப்பு பணம் அதிகம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இப்படி கறுப்பு பணம் மூலம் ஏற்கனவே வரி ஏய்பவர்களுக்கு ஏன் மேலும் வரிச்சலுகை ? மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரியை எடுத்துக்கொண்டுதானே சம்பளமே கிடைக்கின்றது. இவர்கள் நினைத்தால் கூட வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஆனால் திரைப்படத்துறை அப்படியா?

//"மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும்? 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது."//
ம‌க‌த்தான‌ திட்ட‌ம்தான் ஆனால் அது த‌வ‌றாக‌ உப‌யோகிக்க‌ப்ப‌டுவ‌துதான் பிர‌ச்ச‌னையே. ஒரு மாத‌த்திற்கு 30கிலோ அரிசி 2ரூபாய் விலையில் வெறும் 60 ரூபாயில் வாங்கிவிட‌லாம்.இது ஒரு கூலி தொழிலாளியின் ஒரு நாள் ச‌ம்ப‌ள‌த்தை விட‌ குறைவு. ஆக‌ ஒரு மாத‌ தேவையை ச‌மாளிக்க‌ 10 நாட்க‌ள் வேலை பார்த்தால் போதும் என்று தொழிலாள‌ர்க‌ள் நினைக்கின்றார்க‌ள். இது எங்க‌ள் கிராம‌த்தில் கூட‌ ந‌ட‌க்கின்ற‌து. வ‌ய‌ல்க‌ளில் விவ‌சாய‌ வேலைக்கு வ‌ரும் கூலித்தொழிலாள‌ர்க‌ள், ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை. ஒரு சில‌ர் இதை ந‌ன்றாக‌ உப‌யோகித்து முன்னேறுகின்ற‌ன‌ர். ஆனால் பெரும்பான்மையின‌ர் இத‌னால் சோம்பேறிக‌ளாகின்ற‌ன‌ர். ச‌ரி, க‌ட‌த்த‌ல் எப்ப‌டி ந‌ட‌க்கின்ற‌து ? அடிக்க‌டி நியாய‌ விலைக்க‌டை அரிசி க‌ட‌த்தப்ப‌டுவ‌துகுறித்து நீங்க‌ள் செய்திதாள்க‌ளில் ப‌டித்திருப்பீர்க‌ள். த‌மிழ்நாட்டில் மொத்த‌ம் 60 ல‌ட்ச‌ம் போலி குடும்ப‌ அட்டைக‌ள் இருப்ப‌தாக‌ உண‌வுத்துறை அமைச்ச‌ர் திரு.வேலு ச‌ட்ட‌ச‌பையில் கூறியுள்ளார். ஒரு அட்டைக்கு ஒரு மாத‌த்திற்கு 30கிலோ வீத‌ம் 60 ல‌ட்ச‌ம் அட்டைக‌ளுக்கு எவ்வ‌ள‌வு அரிசி இந்த‌ குறைந்த‌ விலையில் செல்கின்ற‌து ? அது எல்லாம் க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளின் கைக‌ளுக்குத்தானே செல்கின்ற‌து? போலி குடும்ப‌ அட்டைக‌ளை க‌ளைய‌ இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லையே ? போலி அட்டைக‌ள் அனைத்தும் இந்த‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌வை என‌ நான் சொல்ல‌வில்லை. ஆனால் க‌ளைய‌ தீவிர‌மான‌ ந‌ட‌வ‌டிக்கை தேவை என்றுதான் சொல்கின்றேன்.

//"வேறு என்ன செய்யமுடியும்? கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும்? இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?"//
க‌லைஞ‌ரை துப்பாக்கி தூக்க சொல்ல‌வில்லை. ஒரு முத‌ல‌மைச்ச‌ர், அதுவும் ம‌த்தியில் ஆளும் கூட்ட‌ணியில் மிக‌ செல்வாக்குள்ள‌ த‌லைவ‌ர், வெறும் வ‌ருத்த‌ம் தெரிவிப்ப‌தும், க‌டித‌ம் எழுதுவ‌தும் ம‌ட்டும்போதுமா? ஒரு நிர‌ந்த‌ர‌ தீர்வுகாண‌ வலியுறுத்த‌ வேண்டாமா? கூறிய‌ப‌டி இலாக்கா ஒதுக்காமையால் ப‌த‌வியேற்ற‌ திமுக‌ அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள் பொறுப்புக‌ளை ஏற்காமால் போராட‌வில்லை? அதுபோல் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்காக்க‌ ஒரு அழுத்த‌மான‌ போராட்ட‌ம் வேண்டாமா? இவ‌ர் அழுத்த‌ம் கொடுத்தால் ம‌த்திய‌ அர‌சு கேட்காம‌லா போகும்?

//" கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்."//
க‌லைஞ‌ரின் போராட்ட‌ங்க‌ள் தெரியாத‌ த‌மிழ‌ன் இல்லை நான். அவ‌ர் ஏற்க‌ன‌வே பல‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌வ‌ர் என்ப‌தால் தான் த‌ற்போதும் அவ‌ரிட‌ம் இருந்து எதிர்பார்கின்றோம். 1980 க‌ளில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடினார். ஆனால் இன்ற‌ள‌வும் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை தீராம‌ல் தானே இருக்கின்ற‌து? இப்போது ஏன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை? ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் தீர்மான‌மிய‌ற்றிய‌து ம‌ட்டும் போதாதே, அந்த‌ தீர்மானாத்தால் எந்த‌ உப‌யோக‌மும் இல்லை என்பது உங்க‌ளுக்கே ந‌ன்றாக‌ தெரியும். அது ம‌ட்டும் போதும் என்று நினைக்கின்றீர்க‌ளா?

//"இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா? பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது."//

பூர‌ண‌ ம‌துவில‌க்கு வேண்டும் என்று சொல்ல‌வில்லை. க‌ள்ள‌ சாராய‌த்தை ஒழியுங்க‌ள் என்றுதான் சொல்கின்றேன். டாஸ்மாக்கில் இந்தியாவில் த‌யாரிக்கும் அய‌ல்நாட்டு ம‌துவ‌கைக‌ளை (IMFL) விற்கும் போது ஏன் க‌ள் இற‌க்க‌ அனும‌திக்க‌ கூடாது ? குடிப்ப‌வ‌ர்க‌ள் குடிக்க‌த்தான் செய்வார்க‌ள், அவ‌ர் அவ‌ர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு. ம‌ற்ற‌ ம‌துவ‌கைக‌ளோடு ஒப்பிடும்போது க‌ள் ஒன்றும் கொடிய‌து அல்ல‌வே? அதை ஏன் அனும‌திக்க‌ கூடாது?

//"தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா? - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்."//
நீங்க‌ள் தான் என‌து கேள்வியை புரிந்து கொள்ள‌வில்லை. த‌மிழை செம்மொழியாக்கிய‌து ம‌ட்டும் போதாது, த‌மிழ‌னின் வாழ்வும் செம்மையாக‌ வ‌ழிசெய்ய‌ வேண்டும் என்று தான் கேட்டுள்ளேன். இதில் வார்த்தை ஜால‌ம் ஏதுமில்லை. க‌லைஞ‌ரிட‌மே வார்த்தை ஜால‌ம் காட்டும் அள‌வுக்கு நான் பெரிய‌வ‌ன் இல்லை.

//" உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா? தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா? "//
திமுக‌ வில் 2 கேடிக்கும் மேல் உறுப்பின‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்,ஆனால் க‌ட்சியில் எந்த‌ பொறுப்பிலுமே இதுவ‌ரை இருந்திராத‌, க‌ட்சி ப‌ணி எதுவும் செய்யாத‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் எப்ப‌டி ப‌த‌வி கிடைக்கின்ற‌து?
ஸ்டாலின் த‌விர‌ க‌லைஞ‌ர் குடும்ப‌த்தில் யார் தீவிர‌ க‌ட்சிப்ப‌ணியாற்றிய‌து? முர‌சொலி மாற‌னின் ம‌க‌ன் என்ப‌தை த‌விர‌ வேறு எந்த‌ த‌குதியும் இல்லாத‌ போதும் த‌யாநிதி மாற‌ன் பார‌ளும‌ன்ற‌ உறுப்பின‌ராகி, ம‌த்தியில் கேபின‌ட் அமைச்ச‌ராக‌வும் முடிந்த‌து. வேறு யாருக்காவ‌து இப்ப‌டி வாய்ப்பு கிடைக்குமா?
திற‌மையாக‌ ப‌ணியாற்றிய‌ போதும் சொந்த‌ குடும்ப‌ மோத‌லால் அவ‌ர‌து ப‌தவியும் ப‌றிபோய்விட்ட‌து.
இன்று க‌னிமொழிக்கு வாய்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி? 2 கோடி பேருக்கு மேல் உறுப்பின‌ர்க‌ளை கொண்ட‌ திமுக‌ வில் க‌னிமொழியை விட‌ அனுப‌வ‌ம் வாய்ந்த‌ க‌ட்சி ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் இல்லையா என்ன‌?
எத்த‌னையோ த‌குதிவாய்ந்த‌, ப‌ல‌ மேடைக‌ளில் பேசிய‌ அனுப‌வமிக்க‌ க‌ழ‌க‌ பேச்சாள‌ர்க‌ளுக்கு கிடைக்காத‌ வாய்ப்பு க‌ய‌ல்விழிக்கு எப்ப‌டி கிடைத்த‌து? இதையெல்லாம் பார்க்கும் எவ‌ருக்கும் ஐய‌ம் ஏற்ப‌டத்தானே செய்யும்?

//"விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம். "//
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. இது விதண்டாவாதம் இல்லை, விவாதம் தான் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:59 PM
அபி அப்பா எழுதிய பதிவுக்கு நான் அளித்த பின்னூட்டம்தான் இந்த பதிவு.

அபி அப்பா, நானும் கலைஞரின் ரசிகன் தான் ஆனால் இந்த ஆட்சியில் கலைஞரின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை.எனவே கலைஞருக்கு சில கேள்விகள் உங்கள் மூலமாக.
பதில் கலைஞர் சொன்னாலும் சரி அல்லது நீங்களே அவர் சார்பாக சொன்னாலும் சரி, கருத்து சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? 1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே?

பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.

இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?
த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா?

க‌ட‌லூர் மாநாட்டில் பெண்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ எரிவாயு விலையில் 30 ரூபாயை அர‌சே ஏற்கும், அத‌னால் அர‌சுக்கு 100 கோடி ந‌ட்ட‌ம் என்று சொன்னீர்க‌ளே? கேளிக்கை வ‌ரி ர‌த்தால் அர‌சுக்கு ஏற்ப‌டும் வ‌ரி இழ‌ப்பு எவ்வ‌ள‌வு ? அதை ஒரு முறை கூட‌ நீங்க‌ள் சொன்ன‌தில்லையே ஏன்? கேளிக்கை வரியை வசூலித்தால் மொத்த விலையுவர்வான 50 ரூபாயையுமே ( ஒரு சிலிண்டருக்கு ) அரசே ஏற்கலாமே?

நீங்க‌ள் கேளிக்கை வ‌ரியை ர‌த்து செய்த‌தால் திரைய‌ர‌ங்குக‌ளில் க‌ட்ட‌ண‌ம் குறைந்துள்ள‌தா? அப்ப‌டியே குறைந்தாலும் இதுவும் ப‌சியால் அழும் பிள்ளைக்கு அளிக்க‌ப்ப‌டும் இன்னொரு மிட்டாய் தானே ஒழிய‌ , ப‌சி தீர்க்கும் உண‌வில்லை.

ஒருவ‌ன் மீனை கேட்டால் அவ‌னுக்கு தூண்டிலை கொடு என்று ஒரு ப‌ழ‌மொழி உண்டு. ஆனால் நீங்க‌ள் தூண்டிலை கேட்ப‌வ‌னுக்கு கூட‌ செத்துப்போன‌ மீனையோ அல்ல‌து மிட்டாயையோ கொடுத்து , உழைக்க‌ நினைப்ப‌வ‌னையும் சோம்பேறி ஆக்குகின்றீர்க‌ள்.
2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.

ந‌ம் பார‌த‌ நாட்டோடு மூன்று முறை நேரடியாக‌ போரிட்ட‌ இன்றளவும் மறைமுகமாக போரிடும் எதிரியாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ பாகிஸ்தான் நாட்டின் க‌ட‌ற்ப‌டை கூட‌ எல்லை தாண்டும் ந‌ம் நாட்டு மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொன்ற‌தில்லை.

ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள். ( ஒரு வேளை நீங்க‌ள் எழுதும் எந்த‌ க‌டித‌மும் பிர‌த‌மருக்கு போய் சேர‌வில்லையோ ? அஞ்ச‌ல் துறை அமைச்ச‌ர் எப்போதும் உங்க‌ளுக்கு தோள் கொடுத்து கொண்டே இருப்ப‌தால் அவ‌ரை கேட்டாலும் தெரியாது).

2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்?

த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌டும் போது ம‌த்திய‌ அர‌சின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ இப்ப‌டி ஒரு போராட்ட‌ம் ந‌ட‌த்தி இருக்க‌லாம், அல்லது நெல்லை விட‌ உற்ப‌த்தி செல‌வுகுறைவான‌ கோதுமைக்கு ஆதார‌ விலை குவின்டாலுக்கு 1000 ரூபாய் என்றும் நெல்லுக்கு அதை விட‌ குறைவாக‌வும் நிர்ண‌யித்த‌ போது போராடியிருக்க‌லாம், ஆனால் நீங்க‌ள் அதை செய்ய‌வில்லையே?

பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ?

த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? தமிழும் வளரவேண்டும் தமிழனும் வளரவேண்டும் அல்லவா?

ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நடப்பவை எல்லாம் அதை உறுதிபடுத்தும் விதமாகத்தான் இருக்கின்றன.

இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க