Author: ஜோசப் பால்ராஜ்
•10:13 PM
கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...

என்ன கொடுமை குருவாயூரப்பா இது?

மேற்கண்ட வரிகள் என் அன்புச் சகோதரர் பரிசல் அண்ணணின் பதிவில் இருந்தது.

ஆனால் இவர் என்னக் கொடுமை குருவாயூரப்பா எனக் கேட்பதைப் பார்த்தால் எங்கே கேரள அரசின் உத்தரவு தவறு என சொல்வாரோ எனச் சந்தேகமாக உள்ளது. முல்லைப் பெரியாறு, நெய்யாறு என தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே உள்ள பல பிரச்சனைகளில் கேரளாவின் செயல்பாடுகளினால் எனக்கு அவர்கள் மீது கோபம் இருந்தாலும், இந்த உத்தரவை நான் மனமாற வரவேற்கிறேன். கோயில்களில் சுடிதாரை தடை செய்துள்ளார்கள் என்பதால் சேலை அணிந்துகொண்டு இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்ல விதித்த தடையை மட்டும் நீக்க சொல்லாதீர்கள்.

நம்ம ஊர்ல ரொம்ப சவுகரியமா ஒரு பக்கமா உக்காந்துகிட்டு அதோட மடில ஒரு குழந்தை, இல்லன்னா நல்ல கனமான பை என இவங்க பயணம் செய்யிறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கும். அதுவும் நம்ம ஊர் சாலைகள் இருக்க அழகுல, நாம எல்லாம் சாலை விதிகள மதிக்குற அழகுல இப்படி எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம பின்னாடி உக்காந்துகிட்டு போறது மிகவும் ஆபத்து.

சேலை அணிந்து இருசக்கரங்களின் வாகனங்களில் செல்லத் தடை விதித்தால் மட்டும் போதாது. சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு, வாகனத்தின் இருப்புறமும் கால்களை இட்டு அமர்ந்துதான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்படி இவங்க பாதுகாப்பு இல்லாம இருசக்கர வாகனங்கள்ல பயணம் செய்ய கேரளாவில் மட்டும் தடை விதித்தா போதாது. இது நாடு முழுவதும் தடை செய்யப் படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

சேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது, பாதுகாப்பானது, அணிவதற்கும் எளிதானது எனப் பல சிறப்புகளை கொண்டது. ஏன் கோயில்களில் சுடிதாரை அனுமதிக்க கூடாது? கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இருக்க முடியும்?

கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயமாக‌ இருக்க முடியும்? உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா? எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு?
எல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே சாமியே கும்புட போறாங்க? அப்ப கட்டாயம் இந்த சட்டத்த எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிச்சு, கட்டாயமா கடைபிடிக்க செய்யிங்க.

சிங்கப்பூர்ல பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் இருபுறமும் கால்களை இட்டு அமர்ந்து தான் இருசக்கர வாகனங்களில் பயணிக்க இயலும். குழந்தைகளை முன்புறம் மட்டும் அல்ல, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மடியில் கூட வைத்துக் கொள்ள முடியாது. இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். ஆனா நம்ம ஊர்ல ஒரு மொத்த குடும்பமும் ஒரு வண்டியில போறது எல்லாம் சர்வ சாதாரணம். இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான். சில விசயங்களை மக்கள் தவறு எனத் தெரியாமலே செய்யும் போது அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.

ஏற்கனவே கட்டாய தலைகவச சட்டத்த வீணாக்குனது மாதிரியில்லாம கொஞ்சம் மக்கள் மேல அக்கறையோட இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச் செய்யணும் என வேண்டுகிறேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:01 PM
உலகப் பிரபல கூகுள் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மிக உன்னதமான சேவை ஒன்றை செய்ய முனைந்துள்ளது. அதுவும் நமது பங்களிப்போடு.

சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பிரிவுகளில் நமது யோசனைகளை தெரிவிக்க ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. www.project10tothe100.com

சமுதாய கட்டமைப்பு, புதிய வாய்புகளை உருவாக்கும் யோசனைகள், ஆற்றல் மேம்பாடு, சுற்றுபுற மேம்பாடு, சுகாதாரம், கல்வி, எல்லோருக்கும் பாதுகாப்பான உறைவிடம் அமைய யோசனைகள், இந்த பிரிவுகள் எதையும் சாராத வேறு எந்த யோசனைகள் என பல பிரிவுகளில் நமது யோசனைகளை விரிவாக இந்த இணைய தளத்தில் உள்ளீடு செய்யும் வகையில் அமைத்துள்ளார்கள்.

வரும் அக்டோபர் மாதம் 20 தேதி வரை நமது யோசனைகளை இந்த இணையத்தில் பதிவு செய்யலாம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை பதியலாம். பதிவு செய்யப்பட்டுள்ள திட்டங்களில் சிறந்த 100 திட்டங்கள் 2009 ஜனவரி மாதம் 27 தேதி அறிவிக்கப்படும். அந்த 100 திட்டங்களில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த 20 திட்டங்களை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்தெடுக்க உள்ளார்கள்.

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 20 சிறந்த திட்ட யோசனைகளில் இருந்து 5 திட்டங்களை நடுவர் குழு தேர்தெடுத்து 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளார்கள்.

சிறந்த திட்டங்களுக்கான யோசனைகளை கீழ்கண்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.

1) இது எவ்வளவு மக்களுக்கு பலனளிக்கும் ?

2) இத்திட்டம் அத்தியாவசியமான ஒன்றா? இது எந்த அளவு மக்கள் பிரச்சனைகளை களைய உதவும்?

3) இத் திட்டம் ஒரு வருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள்ளோ செயல்படுத்த முடியக்கூடிய ஒன்றா?

4) எளிதாகவும், அதிக செலவில்லாமலும் இதை செயல்படுத்த இயலுமா?

5) எத்தனை காலத்திற்கு இத்திட்டம் பலனளிக்கும் ?

இதையாச்சும் செய்வோம் பாஸ் - பெண்ணியவாதிகள் கவனிக்க... என்ற தலைப்பில் நான் ஏற்கனவே எழுதியிருந்த பதிவில் சொல்லியிருந்த ஆலோசனைகளை இந்த தளத்தில் என் பங்குக்கு யோசனையாக வெளிப்படுத்தியுள்ளேன். மாத விலக்கு காலத்தில் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை மிகக் குறைந்த விலையில் கிராமப்புற மகளிர் குழுக்களை கொண்டே உற்பத்தி செய்ய வைத்து, அவர்கள் மூலமாகவே இதை வீடு வீடாக விற்கும் யோசனை நம் நாட்டு கிராமங்களுக்கு மட்டுமல்ல, முன்னேறாத மூன்றாம் உலக நாடுகளின் கிராமப்புற பெண்களுக்கும் மிகவும் பயன்படும் ஒரு யோசனை எனக் கருதியதால் அதை கூகுள் தளத்தில் உள்ளீடு செய்துள்ளேன்.

ஒரு வேளை எனது யோசனை சிறந்த யோசனையாக தேர்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம். அதன் மூலம் அங்குள்ள மகளிர் குழுக்களுக்கு ஒரு வருமானமளிக்கும் சுய தொழிலும், ஏழைப் பெண்களுக்கு குறைந்த விலையில் சுகாதார வசதிகளும் கிடைப்பதோடு, மிகக் குறைந்த விலையில் நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த திரு.முருகானந்தம் அவர்களுக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

சிறு சிறு குழுக்களாக மக்களுக்கு வேலை வாய்ப்பையும், சுகாதார வாய்ப்பையும் நீண்ட நாட்களுக்கு ஏழை நாடுகளில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு அளிக்கும் என்பதால் இதை நான் தேர்தெடுத்துள்ளேன்.

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு யோசனை தோன்றலாம். நீங்களும் உங்களுக்கு தோன்றும் யோசனைகளை இதில் தெரியப்படுத்துங்கள்.

இதையாச்சும் செய்யலாமே பாஸ்...

புதிதாக ஒரு வேலைக்காக விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு சென்று அதில் தேர்வானதாலும், வேலை மாற்றம் தொடர்பான பணிகளாலும், மேலும் சில சொந்த பிரச்சனைகளாலும் இரண்டு வாரமாக பதிவுகள் எதுவும் எழுதவில்லை. என் மேல் உண்மையிலேயே அக்கறையோடு ஏன் பதிவெதுவும் எழுதவில்லை என தொலைபேசி, வலையுரையாடல், மற்றும் மின் மடல்கள் வாயிலாக விசாரித்த அத்தனை சொந்தங்களுக்கும் எனது நன்றிகள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:25 PM
மின் வெட்டால் தமிழகம் மட்டுமின்றி, நாடே தத்தளிக்கும் இவ்வேளையில் ஒரு கிராமம் தன் மின் தேவைக்கு பிறரை சார்ந்திருக்காமல் சாதனை படைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு பஞ்சாயத்துதான் ஓடந்துறை. இந்த பஞ்சாயத்துக்குட்பட்டு மொத்தம் 11 கிராமங்கள். அத்தனை ஊர்களுக்கும் குடிநீர் எந்த வித பிரச்சனையுமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

மரத்துண்டுகளை எரிச்சு, அந்தப் புகையை தண்ணீருடன் கலந்து வடிகட்டி கியாஸ் தயா ரிக்கும் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' (Biomass Gasifier Gas) யூனிட்டை அமைச்சு, அதுல கிடைக்கிற கியாஸ் மூலமா 9 ஹெச்.பி. மோட்டார் ஒண்ணு கரன்ட் இல்லாம இயக்கப்படுகிறது. அதை கொண்டு ஓடந்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல், தெருவிளக்குகள் அனைத்தையும் சூரிய ஒளி விளக்காக அமைத்துள்ளார்கள். இதனால் இரவுகளில் தடையில்லாமல் தெரு விளக்குகள் ஒளிர்ந்து கொண்டுள்ளன.

இந்த‌ கிராம‌ம் காற்றாலை மின் உற்ப‌த்திக்கு ஏதுவான‌ இட‌த்தில் அமைந்திருப்ப‌தால் காற்றாலை ஒன்றையும் சொந்த‌மாக‌ நிறுவியுள்ளார்க‌ள். இத‌ன் மூல‌ம் வ‌ருட‌த்திற்கு ஏழே முக்கால் லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. தங்கள் பஞ்சாயத்தின் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்று சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு காற்றாலைக்காக வாங்கிய வங்கிக் கடனை அடைக்கிறார்கள். கடன் முழுவதும் அடைக்கப்பட்டுவிட்டால் அந்த ஊராட்சி சுய வருமானமுள்ள ஊராட்சியாகிவிடும்.

அதோடு மட்டுமின்றி எல்லா வீடுகளிலும் சூரிய ஓளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பையும், சிறிய காற்றாலை ஒன்றையும் அமைத்து ( Solar and Wind hybrid system )அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வீடுகளின் உபயோகத்திற்கு பயன்படுத்தும் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த இருக்கின்றார்களாம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பச் செலவு அதிகம் என்பதும், இது ஜெர்மன் போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்படும் திட்டம் என்பதும், ஜெர்மனியில் இருந்து மிக குறைந்த விலையில் சோலார் பிளேட்டுகளை வாங்க முடியும் என்பதும் அந்த ஊராட்சித் தலைவி லிங்கம்மாளுக்கு நன்கு தெரிந்து இருக்கின்றது. ஆனால் நம் மின்சார துறை அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ இது தெரியவில்லை.

மரபு சாரா எரிசக்தி உற்பத்திக்கு மத்திய அரசு மானியங்கள் மட்டும் வழங்குகின்றது. ஆனால் அதில் உள்ள வாய்ப்புகளை பெரிய அளவில் விளம்பரம் செய்வதில்லை. இது போல் ஆர்வமாக பல நல்ல திட்டங்களை செய்யும் ஓடந்துறை ஊராட்சிக்கு கட்டாயம் அரசு உதவிகளைத் தாராளமாகச் செய்து கொடுத்தால் அவர்கள் கட்டாயம் அவர்கள் முழு சுயசார்பு ஊராட்சியாக முன்னேறிவிடுவார்கள்.

சூரிய ஒளி விளக்குகளை அமைக்க அரசு தாராளமாய் மானியங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏன் எல்லா கிராமங்களிலும், நகர்புறங்களிலும் உள்ள தெரு விளக்குகளை சூரிய சக்தியில் செயல்படும் விளக்குகளாக மாற்றக் கூடாது? இதை ஏன் அரசே முன் நின்று செய்யக் கூடாது ? இதனால் பெருமளவில் மின் உபயோகம் குறைவதோடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெருமளவில் மின் கட்டணம் குறையும். அதேப் போல் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' நுட்பத்தையும் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தலாமே ? எல்லா ஊராட்சிகளுக்கும் இதை பரிந்துரைக்கலாம் அல்லவா?

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் அவர்களே அவர்களது மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவிகள் செய்து கொடுத்தால் விவசாயிகளும் மின்வெட்டால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடுவார்கள், அதோடு அரசுக்கும் மின் செலவு குறையும். பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் நீர் மூழ்கி மோட்டார்களை இயக்க முடியுமா எனத் தெரியவில்லை. அப்படி முடியாத பட்சத்தில் நீர் மூழ்கியல்லாத அனைத்து மோட்டார்களுக்கும் இம் முறையை பயன்படுத்தச் செய்யலாம்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் விளக்குகள் கோடை காலங்களில் 100 சதவீதம் சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம் பெற்றுவிடும். ஆனால் மழைக்காலங்களிலும் வெயில் குறைவாக இருக்கும் காலங்களிலும் மின் உற்பத்திக் குறைவாகவே இருக்கும் என்பதால், தற்போது இருக்கும் மின்சாரத்தை அச்சமயங்களில் பயன் படுத்திக்கொள்ளும் வகையில் கவனமாக திட்டமிட்டு செயல்படுத்தினால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தெரு விளக்குகளை இயக்க முடியும். கோடை காலங்களில் நீர் மின் உற்பத்தி குறைவால் ஏற்படும் பற்றாகுறையை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொண்டு சமாளிக்கலாம். அதே போல் மழைக்காலங்களில் நீர் மின் உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால் சூரிய ஒளி மின்சாரத்தில் ஏற்படும் பற்றாகுறையை சரி செய்யலாம்.

அதோட இதெல்லாம் சுற்றுப்புறச் சூழலை கெடுக்காத நல்லத் திட்டங்களா வேற இருக்கு. ஓடந்துறையின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் திரு.சண்முகம், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவரான அவரது மனைவி திருமதி. லிங்கமாள் ஆகியோரிடமாவது போய் நம் மின் துறை அமைச்சர் ஆற்காட்டார் பாடம் கற்றுக் கொண்டுவந்தால் மிக நல்லது.

எல்லா ஊர்களும் காற்றாலை மின் உற்பத்தியில் இறங்க இயலாது. ஆனால் சூரிய ஒளி மற்றும் பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறைகளை எல்லோரும் உபயோகிக்க முடியும். இவை எல்லாமே மிக எளிதாக செயல்படுத்த முடிகின்ற திட்டங்கள் தான். அதை நாம் செய்து ஒரு ஊரில் குறைந்தது 100 யூனிட் மின்சாரத்தை சேமித்தாலும் ஒரு மாவட்டத்தில் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்க இயலும்? அது எவ்வளவு உபயோகமாக இருக்கும் ? சும்மா அணு ஒப்பந்தம் நிறைவேறியவுடன் எல்லாம் சரியாயிடும்னு கதை சொல்லிக்கிட்டு இருக்காம சின்ன சின்னதா இது மாதிரி திட்டங்கள நிறைவேத்துனா பலன் பெரிய அளவுல இருக்கும்ல?

இது போன்ற‌ திட்டங்களில் எல்லா ஊர்களிலும் உள்ள ஊராட்சித் தலைவர்கள் சற்று கவனம் செலுத்தினாலாவது நாம் ஆற்காட்டாரை திட்டாமல் நம்ம வேலைய நாமலே பார்த்துக்கிட்டு போகலாம். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்று காந்தியும் சொன்னாரு. அப்துல் கலாமும் சொல்லிக்கிட்டு இருக்காரு. எல்லா கிராமங்களும் இப்படி தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு வந்துட்டா எப்டியிருக்கும் ? நல்ல கற்பனையா இப்போதைக்கு இருக்கிறது, நாலு பேரு மனசு வைச்சா சீக்கிரமே நடக்கும். நடக்கணும்.

பின் குறிப்பு: 14.09.2008 தேதியிட்ட ஜீனியர் விகடனில் வெளிவந்த செய்தியிலிருந்து தெரிந்து கொண்டதை வைத்து தான் நான் இப்பதிவை எழுதியுள்ளேன். செய்தி மூலத்திற்கு ஜீ.வி க்கு எனது நன்றிகள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:44 AM
சாதி ஒழியணும் ஆனால்... என்ற தலைப்பில் கோவி.க அண்ணண் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்த அது சரி என்பவர் பொருளாதரத்தில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். எனது கேள்வியும் இதுவே.

க்ரீமி லேயர் என்று சொல்லும் இவர்கள் இட ஒதுக்கீட்டின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டே சென்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் அதே நிலையிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்படி முன்னேற முடியும்?

இடஒதுக்கீட்டில் தற்போது இருக்கும் நடை முறை மாற வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் ஒரு பிரிவாகக் கருதப்பட வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தில் இட ஒதுக்கீட்டில் கல்வி பயின்று, வேலை வாய்ப்பும் பெற்று நல்ல நிலைக்கு வந்தவர் இட ஒதுக்கீட்டின் பலனை அடைந்த முதல் தலைமுறை, இவரது மகன்/மகள் அந்த குடும்பத்தின் இரண்டாம் தலைமுறைக்கும் இட ஒதுக்கீடு அளிக்கலாம். ஆனால் அதற்கு பின்னர் மூன்றாம் தலைமுறை பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவாக அறிவிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் போகக் கூடாது. இரண்டு தலைமுறையை தூக்கிவிட அரசு உதவலாம். அதற்கு மேல அவனே ஏற வேண்டியதுதான். தான் விலகிக்கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும். சரியானத் திட்டமிடுதலின் மூலம் இதை அருமையாக நடைமுறைப் படுத்தலாம்.

இதை செயல்படுத்த முதல் தேவை ஒருங்கிணைந்த அடையாள அட்டை. ஒரு தனிப்பட்ட அடையாள எண் ( Unique Identification Number) கொண்ட ஒருங்கிணைந்த அடையாள அட்டை எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும். அரசின் சலுகைகள் மூலமாக அவர்கள் அனுபவித்த பலன் எல்லாம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு மாணவண் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, அவனது அடையாள எண்ணைக் கொண்டு அவன் குடும்பத்தில் மொத்தமாக எத்தனை பேர் சலுகைகளை அனுபவித்துள்ளார்கள்,எத்தனை தலைமுறையாக அந்த குடும்பத்தினர் சலுகை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதன் மூலம் அவர்களுக்கு இட ஒதுக்கிட்டின் பலனை அளிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

மேலும் ஒருவர் எந்த முதலீடு செய்தாலும் அதில் அடையாள அட்டை எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு உள்ள சொத்து மதிப்பின் அளவு தெரியும். அவரது குடும்பத்தாருக்கு உள்ள மொத்த சொத்து மதிப்பும் தெரியும். எனவே பொருளாதார அடிப்படையில் அவர்களால் கட்டண இடங்களில் படிக்க முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து உள்ளவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகை காட்டக் கூடாது.

பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் என தற்போது இருக்கும் பிரிவுகளுள் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் என ஒரு பிரிவையும் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மொத்த‌ மாணவர்களில் மேம்பட்ட பொருளாதார வசதிகள் கொண்டவர்களை பொதுப்பிரிவாக கருதி, மீதம் உள்ள மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை அளிக்கலாம். தற்போது இட ஒதுக்கீட்டின் மூலம் எந்த சலுகையையும் அடைய முடியாத மேல்வகுப்பை சேர்ந்தவர்களாய் இருந்தாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாய் இருந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியோர் பிரிவின் கீழ் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

எந்த ஒரு அரசு ஊழியராவது லஞ்சம், ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டணை அடைந்திருந்தால் அந்த வழக்குகளின் விவரங்களும் அவரது அடையாள எண்ணை கொண்டு தெரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி தண்டணை அடைந்தவர்களின் குடும்பத்தார்க்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் மறுக்கப்பட வேண்டும்.

அதே போல் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகராட்சி, மாகநகராட்சி மன்ற உறுப்பினர்கள் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட கூடாது. இது ஏன் என தனியாக நான் சொல்ல வேண்டியதில்லை என நம்புகிறேன்.

இந்த முறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தினால், வருடா வருடம் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள் என்பதை கணக்கிட்டு இட ஒதுக்கீட்டின் சதவீதத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் படிப்படியாக பொதுப் பிரிவின் சதவீதம் கூடி , மற்றப் பிரிவுகளில் சதவீதம் குறைந்து கொண்டே வரும். 100 ஆண்டுகள் கழித்து சுத்தமாக சாதி ரீதியிலான‌ இட ஒதுக்கீடு மறைந்தாலும் மறைந்து விடும். அதன் பின் பொருளாதார வசதிகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்குமாறு செய்யலாம்.

இந்த இட ஒதுக்கீடு முறைக்கு முக்கிய தேவையாக நான் கூறும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை முறையை நடை முறைப்படுத்த மிக அதிக அளவில் செலவாகும், மிக அதிக நாட்கள் ஆகும் என்று தட்டிக்கழிக்க முற்படுவார்கள். 2 ஆண்டுகளாவது இதை நடைமுறைப்படுத்த ஆகும். மேலும் பொருட் செலவும் அதிகம்தான். ஆனால் இது ஒரு அடிப்படை வசதி, இது இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் பயன்படக்கூடிய ஒன்றல்ல. 110 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இன்னும் ரேஷன் அட்டையை அடையாள அட்டையாக உபயோகிக்கும் நிலையில்தான் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். இப்படி ஒரு அடையாள அட்டையை முதலில் கொடுத்து முழுமையான கணிணி நிர்வாகத்தை கொண்டுவருவது தகவல் தொழில்நுட்பத்தில் முண்ணணியில் இருக்கும் நாடான நமக்கு ஒரு பெரிய விசயமே அல்ல.

இட ஒதுக்கீட்டையும் ஓட்டு வாங்கும் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, சாதி வித்தியாசங்களை ஒழிக்க முன்வராமல் அதைத் தூண்டிவிட்டு குளிர்காயும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்பதே இருக்காது. யாராவது ஒரு நல்ல தலைவர் இப்படிச் சிந்தித்தால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றம் வருமா ??? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:05 PM
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாலத்தான் தீ விபத்து நடந்தது - முதலமைச்சர் அறிக்கை

தீயணைப்பு சான்றிதழே பெறாமல் ஐந்து மாடிக் கடை - தீயணைப்புத் துறை இயக்குநர்

அந்த இடத்துல திடீர்னா ஐந்து மாடிக்கட்டிடம் கட்டுனாங்க? பல வருசங்களா அந்த பல மாடிக்கட்டிடம் இருந்துகிட்டேத்தானே இருக்கு ?

இத்தனை நாளு முதல்வருக்கு இது தெரியவே தெரியாதா? தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு அந்த கட்டிடத்துக்கு சான்றிதழ் வாங்கிருக்காங்களா இல்லையான்னு கூடத் தெரியாதா?

தமிழ்நாட்டுலயே மொத்தம் 968 பெரியக் கட்டிடங்கள் தான் இருக்கு, அதுல 661 கட்டிடங்களுக்கு சென்னையில இருக்குன்னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி. மொத்த‌ த‌மிழ்நாட்டுல‌யும் 968 பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ள் தான் இருக்குன்னா, அந்த‌ 968ல‌யும் எல்லா விதிமுறைக‌ளும் பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டிருக்கா, முறைப்ப‌டி தீய‌ணைப்பு வ‌ச‌திக‌ள் செய்ய‌ப்ப‌ட்டிருக்கா, அவ‌ச‌ர‌க்கால‌ங்க‌ளிலும், விப‌த்து நேர‌ங்க‌ளிலும் பொதும‌க்கள் பாதுகாப்பா வெளியேறும் வ‌ழிக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டிருக்கான்னு கூட‌ ந‌ம்ம‌ தீய‌ணைப்புத்துறையால‌ சோத‌னை செய்ய‌ முடியாதா?

தீயணைப்புத் துறையின் அனுமதியே இல்லாமல் இருந்ததாம், தீயணைப்புத்துறை அதிகாரி இப்பத்தான் சொல்றாரு. இவ்ளோ நாளு என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாரு? சரிங்க, என் கேள்வி, இந்த 900+ கட்டிடங்களும் முறைப்படி தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கா, அவசரக் காலத்துல வெளியேற வசதிகள் இருக்கான்னு எல்லாம் யாருமே சோதிக்க மாட்டாங்களா?

விதிமுறைக‌ளை மீறிக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌ட்டிட‌ங்க‌ளை இடிக்க‌ச் சொல்லி தொட‌ர‌ப்ப‌ட்ட‌ பொதுந‌ல‌ வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌ம் இடிக்க‌ச்சொல்லி உத்த‌ர‌விட்டு அதே தியாக‌ராய‌ந‌க‌ரில் உள்ள‌ சென்னை சில்க்ஸ் க‌ட்டிட‌த்தின் சில‌ த‌ள‌ங்க‌ள் இடிக்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்த‌ க‌ட்டிட‌ங்க‌ள் எப்ப‌டி த‌ப்பின‌? அப்போது கூட‌ தெரிய‌வில்லையா இவையும் விதிமுறையை மீறித்தான் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என்ப‌து?

இந்தியாவில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று எல்லோரும் புலம்புகின்றார்கள். இன்னும் மனித உயிர்களுக்கு மதிப்பு மட்டும் உயரவே இல்லை. ஏதாவது விபத்து ஏற்பட்டால் இரண்டு நாட்களுக்கு மட்டும் எல்லோரும் பேசிட்டு போயிகிட்டே இருக்காங்க. அரசாங்கம் முதல்வர் நிவாரண நிதியில கொஞ்சம் பணம் கொடுக்கும், விளம்பரத்துக்கு எல்லா அரசியல்கட்சிகளும் கொஞ்சம் உதவி செய்வாங்க, அவ்ளோதான் எல்லாரும் மறந்துடுவாங்க.

90 பச்சிளம் குழந்தைகள் உயிரோடு கருகியப்பின்னர் தான் பள்ளிகளில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என ஆரய அரசு உத்தரவிட்டது. தற்போது 2 உயிர்கள் பலியாகியுள்ளன. இனியாவது அரசு முழிக்குமா? அதிகாலையிலயே சரவாணா கடை எரிஞ்சதால 2 உயிர்களோட போச்சு, ஆனா அதே விபத்து காலை 11 மணிக்கு மேலயோ அல்லது மாலை நேரத்துலயோ நடந்துருந்தா ??? யோசிக்கவே பயமா இருக்குங்க.

இவ்வளவு மோசமாக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் கட்டாயம் இந்த விபத்திற்கு இழப்பீடு எதுவும் கொடுக்க கூடாது. மேலும் இந்த விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் அதே ரெங்கநாதன் தெரு மட்டுமல்ல, இன்னும் இது போல நெருக்கடி நிறைந்த பல இடங்களில் உள்ள பொதுமக்கள் கூடும் வியாபார நிறுவனங்களில் எல்லாம் முறையாக சோதனை செய்து, அதில் ஏதாவது விதி மீறல்கள் இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது ரம்ஜான் மற்றும் தீபாவளிப் பண்டிகை காலம், மக்கள் பெருமளவில் புத்தாடைகள் வாங்க இந்த கடைகளுக்குத்தான் செல்வார்கள். இப்போதே உடனே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு தாட்சண்யமே இல்லாமல் விதிமுறைகளை மீறிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வந்தாளாவது பண்டிகை கால லாபங்களை இழக்க விரும்பாத நிறுவனங்கள் உடனே விதிமுறைகளை நடைமுறைபடுத்த முன்வருவார்கள். இனியாவது முழிக்குமா அரசு ? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•2:33 PM
இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க.. என்ற தலைப்பில் என் அருமை நண்பர் சஞ்சய் ஒரு பதிவிட்டிருந்தார். எதிர்காலத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக பாடுபட விரும்பும் அவரது தோழி கூறிய திட்டமாக பெண்களின் மாதாந்திர தேவையான சானிடரி நாப்கினை ஒரு ரூபாய்க்கு விநியோகிக்கும் திட்டத்தை எழுதியிருந்தார். முதலில் சஞ்சய்யின் தோழி இப்படி ஒரு சிந்தனை கொண்டவராய் இருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகப்பெரும் நிறுவனங்கள் சானிடரி நாப்கினை தயாரிக்க உபயோகிக்கும் இயந்திரங்களின் விலை 75 லட்சங்களில் இருந்து 2.5கோடிகள் வரை இருக்கும். பெரும் நிறுவனங்கள் தங்களது விளம்பர செலவு முதல், விநியோக செலவு வரை எல்லாவற்றையும் பொருளின் விலையில் சேர்ப்பதால் மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை. இந்த விலை கிராமப்புற ஏழை பெண்களுக்கு இன்னும் எட்டாத அளவில் இருப்பதால் அவர்கள் இதை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க 1 ரூபாய்க்கு விற்பது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம்.

கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் மிகக் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரித்து, அதை கொண்டு நாப்கின் தயாரிக்கும் செய்முறைகளை கற்றுத்தந்து விற்பனை செய்து வருகிறார். இதற்கு மூன்று சிறு இயந்திரங்கள் தேவை. இயந்திரங்களின் விலை, அவற்றை நிறுவுதல் மற்றும் பயிற்சி ஆக மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இவ்வியந்திரங்களை நிறுவி தயாரிப்பு வேலைகளில் ஈடுபட தேவையான இடம் கூட ரொம்ப அதிகமில்லை. 16 அடி நீளம் 16 அடி அகலம் கொண்ட ஒரு கூடம் போதும். 4 வேலையாட்கள் போதும். ஒரு நாளில் 8 நாப்கின்கள் கொண்ட 180 பாக்கெட்டுகள் தயாரிக்க முடியும்.

இந்த இயந்திரங்களை பயன்படுத்தி 8 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் தயாரிக்க 8 ரூபாய் மட்டுமே செலவாகின்றது. ஒரு பாக்கெட் 12.50 க்கு விற்றால் சுயஉதவிக்குழுவினர் லாபகரமாக இத்தொழிலைச் செய்யலாம். மேலும் ஒரு நாப்கின் 1.50க்கு கிடைக்கும்.

இதை கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சியும் அளித்தால் அவர்கள் சுலபமாக தயாரித்து தங்கள் பகுதி கிராமங்களில் நேரடியாக விற்றுவிடுவார்கள். இதனால் விளம்பர செலவு,விநியோக செலவு, சில்லரை வர்த்தக லாபம் போன்றவை தவிர்க்கப்படும்.

நண்பர் சஞ்சய் தனது பதிவில் இலவசமாக அரசே பெண்களுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த இலவசக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏன் எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எல்லாவற்றையும் இலவசமாகவே பெற வேண்டும்?

தற்போது ஏறத்தாழ எல்லா கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் அவர்கள் வெற்றிகரமாக செயல்படுவதில்லை. 5 கிராமத்துக்கு ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள சுய உதவிக்குழுவுக்கு பயிற்சியளித்து இவ்வியந்திரங்களை வாங்க வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்களே வெற்றிகரமாக இதை செய்ய மாட்டார்களா? அவர்கள் தயாரிக்கும் நாப்கின்களை அடுத்த ஊர்களில் உள்ள குழுக்களின் மூலமாக விற்கலாம். நேரடியாக விற்கும் போது ஒரு பாக்கெட் 12.50 க்கு விற்றால் பிற ஊர்களில் உள்ள குழுக்களுக்கு விற்கும் போது 11 ரூபாய்க்கு விற்றால் அவர்கள் 1.50 லாபம் சம்பாதித்துக்கொள்ளலாம்.

வேண்டுமானால் அரசாங்கம் இந்த இயந்திரங்கள் வாங்க அளிக்கும் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மானியமாக அளிக்கலாம். இதனால் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் சுமை குறையும், அதன் மூலம் அவர்கள் இன்னும் குறைந்த விலையில் விற்பனை செய்ய இயலும்.

இந்த இயந்திரங்களின் பயன்பாடு , இதைக் கொண்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கத் தேவையான திட்ட அறிக்கை(Project Report) எல்லாம் கீழேயுள்ள இணையதளத்தில் மிகத் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

திட்ட விளக்கம்

திட்ட அறிக்கை

இந்த இயந்திரங்களை கண்டுபிடித்த திரு. முருகானந்தம் அவர்களை தொடர்பு கொள்ள.

Jayaashree Industries
SF No. 577 KNG Pudur Road
Somayampalaym (Po)
Coimbatore - 641 108.
Mobile; - 92831 55128, 98422 15984


அவரது மின்னஞ்சல் முகவரி: muruganantham_in@yahoo.com

சஞ்சயின் தோழி போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களும், எதையாச்சும் செய்யனும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இதையாச்சும் செய்யலாம். இதில் நாம் ஒன்றும் நம் கை காசை செலவழிக்க வேண்டியதில்லை. நமக்கு தெரிந்த கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இதை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்து தொழிலை ஆரம்பிக்கச் செய்யலாம்.

மிகக் குறைந்த விலையில் கிராப்புறப் பெண்களுக்கு சுகாதாரமான நாப்கின்கள் கிடைப்பது, கிராப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் ஒரு நல்ல தொழில் வாய்ப்பு கிடைப்பது என பல நன்மைகளை கொண்ட இத்திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த முன்வரவேண்டும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:40 PM
தமிழக அரசால் பள்ளிமாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பேருந்துப் பயணச் சலுகை எல்லா இடங்களிலும் எள்ளல்களுக்கு உள்ளாவது உண்டு. அவற்றின் உச்சமாக ஒரு சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள செல்வராஜ் உயர்நிலைபள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர் அரசு பேருந்தில் வந்த போது, அவர்களது பள்ளி இருக்கும் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர். மாணவிகள் பேருந்தை நிறுத்தக்கோரி சத்தமிட்டதால் எரிச்சலடைந்த நடத்துநர் அவர்களை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

இலவசம் என்றால் இவர்களுக்கு இளக்காரமா? இவர்களின் ஊதியத்தில் இருந்தா அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கின்றது? என்ன கொடுமை இது? ஓடும் பேருந்தில் இருந்து ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவிகளை கீழே தள்ளுகிறார் என்றால் அவருக்கெல்லாம் மனம் என்று ஒன்று இருக்கின்றதா? உண்மையிலேயே நல்ல மனநிலை உடையவர்தானா அந்த நடத்துநர் அல்லது மனநிலை சரியில்லாதவரா?

கீழே விழுந்த குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்கள், ஒரு வேளை பலத்த அடிபட்டிருந்தாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தாலோ இவர்களால் அதை ஈடு செய்ய முடியுமா? ஆனால் இவர்களையெல்லாம் கடுமையாக தண்டிக்க நம்மிடம் சரியான சட்டங்கள் இல்லாததுதான் மிகப்பெரிய கொடுமை.

போக்குவரத்துகழகம் அந்த ஓட்டுநரையும், நடத்துநரையும் இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறதாம். மற்றவர்களுக்கு இது போல் நடக்க கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கின்றதாம். என்ன ஒரு கடுமையான தண்டணை கொடுத்துள்ளார்கள் பார்த்தீர்களா?

உடனடியாக அவர்களை கைது செய்து ,குறைந்தபட்சம் கொலை முயற்சி வழக்காவது பதிவு செய்திருக்க வேண்டும், உடனடியாக அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ததாகக்கூட செய்தியில் இல்லை.

நான் எப்போதும் என் நாட்டைப் பிற நாட்டோடு ஒப்பிட்டுவது கிடையாது. நான் இருக்கும் நாட்டில் இருக்கும் வசதிகள் என் நாட்டிலும் சீக்கிரம் வரவேண்டும் என்ற ஆதங்கம்தான் அடைவேன். சிங்கப்பூரில் நடந்த ஒரு சம்பவம் இந்த செய்தியோடு நினைவுக்கு வந்து அந்த ஆதங்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றது.

ஒரு முறை இங்குள்ள பேருந்தில் இருந்து தனது நிறுத்தத்தில் இறங்கிய ஒரு பெண்மணி, இறங்கும் போது நிலைதடுமாறி பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு தூணில் மோதி தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் நிலை தடுமாறியதற்கோ, அல்லது காயம் அடைந்ததற்கோ அந்த பேருந்தின் ஓட்டுநர் எள்ளளவும் காரணமில்லை. நிறுத்தத்தில் நன்றாக பேருந்தை நிறுத்தி, Hand Brake lock செய்துவிட்டு, பின்னர் தானே இங்கு பேருந்தின் கதவையே திறப்பார்கள், அதனால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் அந்த ஓட்டுநரின் வேலை உடனடியாக பறிக்கப்பட்டு,வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அந்த பெண் நிலை தடுமாறியதையோ, காயமடைந்ததையோ, உதவி கேட்டு அவர் கையை ஆட்டியதையோ அவர் கவனிக்காமல் அங்கிருந்து பேருந்தை எடுத்து சென்றுவிட்டார். இதுதான் அவர் செய்த தவறு. பேருந்து ஓட்டுநர் தன் பேருந்தில் இருந்து இறங்கியவர் கீழே விழுந்ததை எப்படி கவனிக்காமல் சென்றார்? அந்தப் பெண் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்தாரே என்று இப்படிக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என நிர்வாகம் விளக்கமளித்தது.

ஆனால் நம்மவர்கள் சர்வ சாதாரணமாக பணியிடை நீக்கம் மட்டும் செய்துள்ளார்கள்.

இலவச சலுகையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் மாணவர்கள் எல்லா இடங்களிலும் இப்படி இழிவுபடுத்தப்படுவது தொடர்கதையாகத்தான் இருக்கின்றது. இந்த ஓட்டுநர், நடத்துநரின் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் தண்டணை இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றும் கொஞ்சம் சொல்லுங்கள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:46 PM
அன்பு நண்பர் கிரி எழுதிய சைக்கிள் கேப்பில் லாரி ஒட்டிய சத்யராஜ் என்ற பதிவிற்கு பதிலை பதிவாக வெளியிடுகின்றேன் என்ற எனது வாக்கை இதன் மூலம் காப்பாற்றுகிறேன்.

முதன் முதலில் சில விசயங்களை சொல்லிவிட்டுத்தான் நான் இதை ஆரம்பிக்க வேண்டும்.
1) திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் சத்தியராஜ் கூறிய கருத்துகள் மிக சரி என்றாலும், அதை அவர் வெளிக்காட்டிய விதம் அநாகரீகமானது என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை.

2) நான் சத்தியராஜின் ரசிகரோ அல்லது ரஜினியை வெறுப்பவனோ அல்ல.

சந்தை மதிப்பில் ரஜினி அளவுக்கு சத்தியராஜ் இல்லைதான். தனது மதிப்பு என்னவென்று தெரியாதவர் இல்லை சத்தியராஜ்.

ரஜினி படம் குவிக்கும் அளவுக்கு வசூலை சத்தியராஜ் படம் குவிக்காதுதான். ஆனால் ரஜினியும், சத்தியராஜும் ஒரே அளவுதான் ஊதியம் வாங்குகின்றார்களா?

ரஜினியின் படம் 100 கோடி வசூலை குவிக்கின்றது, ரஜினி 10 கோடிக்கு மேல் ஊதியம் பெறுகின்றார். ஆனால் சத்தியராஜின் படங்கள் அந்த அளவுக்கு வசூல் ஆவதும் இல்லை, அவர் கோடிகளில் ஊதியம் வாங்குவதும் இல்லை. எனவே இதில் இருவர் படத்தின் வசூலையும் ஒப்பிட்டு பேசுவது சரியில்லை. அப்படி வசூலை ஒப்பிட்டால் அவரது ஊதியத்தையும் ஒப்பிடுங்கள்.

சத்தியராஜ் திரையுலகில் நுழைந்ததன் வெள்ளி விழாவை கொண்டாடிய போது அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற எல்லா நடிகரையும் பார்த்தும் கேட்கப்படும் கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன பதில் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் என்பது சினிமா துறை போல இயக்குநர் சொன்னதை செய்துவிட்டு செல்லும் வேலை அல்ல என்று தெளிவான பதிலை சொன்னார்.

தனது படங்களில் குத்து வசனங்கள் ( பஞ்ச் டயலாக்) எல்லாம் அவர் வைத்துக் கொள்ளவில்லை. வருவேன், இப்ப வருவேன், இதோ வந்துகிட்டே இருக்கேன்னு எல்லாம் சொல்லிகிட்டு இல்ல.

வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் நாங்கள் பேவதெங்கே ( தெக்க போங்க)
அப்படின்னு எல்லாம் பாட்டு போட்டுகிட்டு அலப்பரய பண்ணல. அவருபாட்டுக்கு தகடு தகடு, என் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டேங்குகிறீங்களே இதுமாதிரி எதாவது பகடி பண்ணிக்கிட்டு தான் உண்டு தன் நடிப்பு உண்டுனு இருந்தாரு.

இதுவரை அவர் எந்த அரசுக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ குரல் கொடுத்ததில்லையே. இப்போதும் பிரச்சனை தமிழனுக்கு எதிரானது என்பதால் தானே அவ்வளவு ஆவேசமாக பேசினார்?

உலகின் பெரும் பணக்காரான பில்கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து லிண்டா கேட்ஸ் பவுண்டேசன் மூலம் பல கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து உதவி செய்து வருகின்றார்.

குஜராத் பூகம்பத்தின் போது, ஆதரவற்ற முதியவர் ஒருவர் தனது உணவுத் தேவைகளையே பிச்சையெடுத்து பூர்த்திசெய்துகொண்டிருந்தவர், பிச்சையெடுத்து தான் வைத்திருந்த மொத்த தொகையையும் பூகம்ப நிவாரண நிதியாக கொடுத்தார்.

பில்கேட்ஸ் மற்றும் அந்த முதியவர் இவர்களில் யார் செய்த தர்மம் பெரியது? சொல்லுங்கள். தன்னிடம் உள்ளதனைத்தையும் கொடுத்த அந்த முதியவரா அல்லது தனது தேவைகள் போக மிச்சம் இருப்பதை கொடுக்கும் பில்கேட்ஸ்ஸா?


தான் வாங்கும் குறைந்த ஊதியத்திலேயே, தன்னால் தயாரிப்பாளருக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுசெய்வேன் என்று சொல்லும் சத்தியராஜ் சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுகின்றார் என்றால் பல கோடிகளை ஊதியமாக பெறும் ரஜினியால் அப்படி செய்ய முடியவில்லை ? சத்தியராஜ்க்காவது சைக்கிள் இடைவெளிதான் இருக்கிறது, அதிலேயே அவர் கஷ்டப்பட்டு லாரி ஓட்டும்போது, தமிழகம் தான் ரஜினிக்கு தனி ராஜபாட்டையே போட்டுக்கொடுத்திருக்கின்றதே , அதில் ஏன் அவர் சைக்கிள் கூட ஓட்ட முயற்சிக்காமல் ஒரேடியாக காலில் விழவேண்டும் ?


கிரி said...
//வெங்கட்ராமன் said...
அதான அப்பாவும் பையனும் நமீதா பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்றதெல்லாம் புரட்சி இல்லையா. . . ?//

காதல் புரட்சி :-))) அப்பாவும் பய்யனும் இப்படி இருக்க வேண்டும் என்று புரட்சி கர கருத்துக்கள் கூறுகிறாங்க..அப்ப கண்டிப்பா புரட்சி தமிழன் தான்..



அப்போ திருவிளையாடல் ஆரம்பத்துல தனுஷ் கூட நடிச்ச ஸ்ரேயவே சிவாஜியில ரஜினி கூட நடிச்சாங்களே, அது என்னா ?

அப்பாவும் பையனும் ஒரே நடிகையோட நடிக்க கூடாது, ஆனா மாமானாரும், மருமகனும் ஒரே நடிகையோட நடிக்கலாம்னு ஏதாவது விதி இருக்கா?

மத்தவங்க மேல ஒரு விரல நீட்டுறப்ப கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க கிரி, ஏன்னா உங்க 4 விரல்களும் உங்கள நோக்கி இருக்கும்.

மேலும் சத்தியராஜை, டி.ராஜேந்தருடன் வேறு ஒப்பிட்டுள்ளீர்கள். ராஜேந்தர் ஒரு அரசியல் கட்சியின் நடத்துபவர், எப்போது என்ன நிலை எடுப்பார், யாரை ஆதரிப்பார் என்று யாருக்கும் தெரியாது. இப்படியிருக்க தான் சொன்ன கருத்தில் இருந்து மாறமாட்டேன் என்று சொல்லும் சத்தியராஜை அவர்டன் ஏன் ஒப்பிட்டுகின்றீர்கள்?

ஆனால் ரஜினி, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவணால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றவர், அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றார், தேர்தலில் அவர்களுத்தான் ஓட்டு போட்டேன் என்று அரசியல் சட்டத்தை மீறி சொல்லக்கூடாததை கூட வெளியில் சொன்னார். இப்படி ஒரு தேர்தலுக்கு ஒரு நிலை எடுத்ததால் வேண்டுமாணால் ரஜினியை நாம் டி.ராஜேந்தருடன் ஒப்பிடலாம். அதுதான் சரியாக இருக்கும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•11:10 AM
பாட்டாளி மக்கள் கட்சி தீவிர மதுவிலக்கு கோரி அரசு மதுபானக்கடைகளின் முன் போராடுவது நாம் அறிந்ததே.

கீழே உள்ள படத்தை பாருங்கள். இப்படி ஒரு நூதன போராட்டத்தை நாம் யாரும் இதுவரை கேள்விப்பட்டிருக்கவே முடியாது.


போராட்டத்தில் எல்லோரிடமும் உடைப்பதற்காக கொடுக்கப்பட்ட பாட்டிலில் ஒன்றை ஒரு பெண்மணி வீணாக்காமல் குடித்துக்கொண்டிருக்கின்றார்.

எல்லாப் போரிலும் வெற்றி பெற ஒரே வழி போரிடாமலே இருப்பது தான் என்று ஒரு முதுமொழி உண்டு. எல்லா மதுவையும் குடித்தே மதுவிலக்கை கொண்டுவரலாம் என நினைத்துவிட்டனரோ ?

மதுவை எதிர்த்து போராட இப்படி பாட்டிலை உடைத்துத் தான் ஆக வேண்டுமா? இவர்கள் கண்ணாடி பாட்டில்களை சாலை நடுவே போட்டு உடைத்துவிட்டு போய்விடுவார்கள், அது எத்தனை பேர் கால்களையும், எத்தனை வாகனங்களையும் பதம் பார்க்கும்? பாட்டில்களை உடைத்துதான் போராட வேண்டுமா?

கண்ணாடி சிதறல்களையும் விட மதுவின் நாற்றம் சாலையில் போகும் எல்லோருக்குமே மிக பெரும் இடைஞ்சலாக இருக்காதா? இது என்ன ஒரு முட்டாள்தனமான போராட்டம்? போராட்டம் என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காக இருக்க வேண்டுமே தவிர, மக்களை துன்புறுத்துவதாக இருக்க கூடாது. இப்படித்தான் இவர்களது அரசியல் இருப்பை நிறுவ வேண்டுமா?

தந்தையே,இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள், இவர்களை மன்னியும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:26 PM
முழு அடைப்பு நடத்துவது, அதுவும் அரசாங்கமே அதை நடத்துவது, அதுவும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க அதன் கூட்டணிகட்சியே நடத்துவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் , 2007 அக்டோபர் 1 அன்று தமிழக அரசு சேதுசமுத்திர திட்டத்திற்கு ஆதரவாக நடத்த முனைந்த முழுஅடைப்பை நீதிமன்றத்தின் அச்சுறுத்தலால் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கையாண்ட விதம் மிக மோசம் என்பதை சொல்லவே இந்த‌ப்ப‌திவு.

சக பதிவர் எழுதியுள்ள வரட்டும் கலைஞருக்கு கைது ஆணை! என்ற பதிவை படித்தவுடன் ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை.

ஏன் இந்த வழக்கில் காட்டிய, காட்டும் தீவிரத்தை மற்ற வழக்குகளில் காட்டவில்லை? கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்குமிடையே நடக்கும் முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்பளித்தபின்னரும், இன்னும் அதை கேரள அரசு செயல்படுத்தவில்லை. அது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியபோதும் சரி, இறுதி தீர்ப்பை வழங்கியபோதும் அதை காலில் போட்டு மிதித்து விட்டு, வெள்ளம் வரும்போது மட்டும் திறந்துவிடும் வடிகால் வாய்காலாக காவிரியை பாவித்து நீர் விடும் கர்நாடக அரசு செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா ?

காவிரியும், முல்லைப்பெரியாரும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகள். அதை தீர்க்க விடுமுறை நாளில் கூடிடுமா நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம்? கேரள அரசையும், கர்நாடக அரசையும் கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என்று சொல்லிடுமா ? அச்சுதான‌ந்த‌னுக்கும், எடியூர‌ப்பாவுக்கும் கைது செய்வோம் என‌ மிர‌ட்ட‌ல் விடுக்குமா?

தீர்க்க வேண்டிய முக்கியமான வழக்குகள் எத்தனையோ இருக்கும் போது அவற்றை தீர்க்க வழிகாண வக்கில்லாத உச்சநீதிமன்றம்,
கடலுக்குள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே மூழ்கிவிட்ட ஒரு மணல்திட்டுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அது இராமரால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா , இராமர் என்பவர் உண்மையிலேயே இருந்தவரா அல்லது கற்பனையா என்ற ஆராய்சியில் எல்லாம் நான் இறங்க போவதில்லை. ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லுவேன், அது அன்றே வள்ளுவன் இவர்களுக்காய் சொன்னது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க‌
செய்யாமை யானும் கெடும்.

இதற்கு விளக்கம், ஒருவன் தனது நிலைமைக்குத் தகாத செயல்களை செய்வதாலும் செய்யத்தக்க செயல்களை செய்யாது விட்டாலும் கேடு அடைவான் என்பதே.

இந்த குறள் வேகம் காட்டவேண்டிய வழக்குகளில் வேகம் காட்டாது, சம்பந்தமில்லாத வழக்குகளில் காட்டும் உச்ச நீதிமன்றத்துக்கும், இடிக்க கூடாத மசூதியை இடித்து, இடிக்க வேண்டிய பாலத்தை இடிக்க விடாது இராமர் பெயரை சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துபவர்களுக்கும் பொருந்தும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:52 AM
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

அவர் பேசியது நல்ல கருத்துக்களே ஆனாலும், அவர் பேசிய விதம் தவறு என்றுதான் நான் அன்று நினைத்தேன். ஆனால் இன்று நம் மானங்கெட்ட தமிழனுக்கு மனதில் படும்படி சொல்ல‌ அவ‌ர் அதைவிட‌ க‌டுமையாக‌ பேசியிருக்க‌ வேண்டும் என்று தோன்றுகிற‌து.

நான் இதுல ரஜினி என்ற ஒரு நடிகரை குறை சொல்லவே விரும்பவில்லை. அவர் ஒரு நடிகர், அதற்கு மேல் அவரைப்பற்றி சொல்லிக்கொள்ள எதுவுமேயில்லை. தமிழகத்திற்கே தலமை தாங்க பல வாய்ப்புகள் வந்த போதும் மாற்றி மாற்றி குரல் மட்டும் கொடுத்துவிட்டு, தலைமை பொறுப்பு எல்லாம் எனக்கு வேண்டாம் என சென்றவர் அவர். அப்படி அவர் முடிவெடுத்தது அவரது உரிமை. மக்கள் அழைக்கின்றார்கள் என்பதற்காக அவருக்கு விருப்பமில்லாத ஒரு துறையில் அவர் நுழைய வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் அவருக்கில்லை.


அவர் நடிப்பது சம்பாதிக்கத்தானே ஒழிய வேறு எதற்கும் இல்லை. தனது தொழிலை எந்த சிக்கலும் இல்லாமல் நடத்திக்கொள்ள அவர் செய்வதுதான் அவ்வப்போது அவர் கொடுக்கும் குரல்கள்.

தமிழகத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று பேசியது, தமிழகத்தில் இருந்துகொண்டு, தமிழ் நடிகராக எல்லோராலும் அறியப்பட்டாலும் தமிழர் - கன்னடர் பிரச்சனைகளில் இதுவரை ஒரு உறுதியான நிலைப்பாடு ஏதும் எடுக்காமல் சொதப்பி ஏற்கனவே அவர் வாங்கியிருந்த அவப்பெயர்களை துடைத்து, நான் தமிழ்நாட்டு பக்கம்தான் என்று சொல்லிக் கொள்ள அவர் செய்த ஒரு சிறிய வியாபார உத்தி.

இப்போது கன்னடர்களிடம் மன்னிப்பு கோரியிருப்பது, தனது புதிய திரைப்படம் கர்நாடகாவில் எந்த விதமான சிக்கல்களுக்கும் ஆளாகாமல் நன்கு ஓடி பணம் குவிக்க எடுத்த நடவடிக்கை. இதுவும் முழுக்க முழுக்க வியாபார நோக்கம் உடையதே. அவர் எப்பவுமே தெளிவாத்தான் இருக்காரு. ஆனா நம்ம தமிழர்கள் ?????

அவர வெறும் நடிகனா பாருங்க, அவர் படம் புடிச்சிருக்கா இல்லையானு விமர்சனம் செய்யுங்க. அதவிட்டுட்டு அவர கடவுள் அளவுக்கு உயர்த்திகிட்டு, அவரப்பத்தி விமர்சனம் செஞ்சாலே அடிக்க போற அளவுக்கு வெறிபிடிச்சு அலையுறது எல்லாம் எதுக்கு ? அவரை மட்டுமல்ல எந்த நடிகனையுமே தலைவருன்னு சொல்றவன் எல்லாம் மனுசனே இல்ல. தலைவா தலைவான்னு உருகுறது எல்லாம் காட்டுமிராண்டித்தனம் தான். திரையில் நாம் பார்க்கும் நடிப்பை மட்டும் நம்பி எப்படி ஒருவரை நாம் தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியும்?

நேற்று தமிழகத்திற்காக ஒரு பேச்சு, இன்று கர்நாடகாவுக்காக ஒரு மன்னிப்பு. இவரைப்போயா நீங்கள் உங்களுக்கு தலைவராக அழைக்கின்றீர்கள் ?

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

ரஜினிக்கு யாராவது இந்த குறளின் அர்தத்தை சொல்லட்டும். அவரை அத்தோடு விடுங்கள். அவர் விரும்பியபடி அவரை இமயமலைக்கே போகவிடுங்கள்.

ஒரு தலைவனாக வேண்டியவணுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் இந்த குறளில் சொல்லப்பட்டுள்ளது.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.


இதில் அறிவூக்கமும் இல்லை, அஞ்சாமையும் இல்லாதவரை எதற்கு தலைவர் எனச் சொல்லவேண்டும்?

இனியும் தமிழன் ரஜினி மாயையில் இருந்து விடுபடாது போனால், சத்தியராஜ் பேசியதை விட இன்னும் கேவலமாகத்தான் நம்மை நாமே திட்டிக்கொள்ள வேண்டும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:15 PM
இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2
உழவும் உழவர்களும் - 3
உழவும் உழவர்களும் - 4

இயற்கை சீற்றங்களின் போது அரசாங்கம் விவசாயிகளுக்கு எப்படி உதவி செய்கின்றது என்றும் அதை பெறுவதில் எம்மவர்கள் படும் பாடு இருக்கின்றதே, அது உலகின் மிக உயர்ந்த குலமான உழவர் குலத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தும் செயல்கள் , அவற்றைப் பார்க்கும் முன்பு, இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் திருக்குறளின் பொருளை சொல்லிவிட்டால் உங்களுக்கே புரியும்.

உழவுத்தொழிலைச் செய்து வாழ்பவர்கள் தாங்கள் பிறரிடம் சென்று யாசிக்கமாட்டார்கள். வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை இல்லாமல் கொடுத்து உதவுவார்கள்.

இத்தனை பெருமை மிக்க உழவர்கள் இன்று இருக்கும் நிலை என்ன ?
இயற்கையின் சீற்றங்களை அவர்கள் எதிர் கொள்ளும் போது அரசாங்கம் கொடுக்கும் நிவாரணம் எவ்வளவு? ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்யும் விவசாயிக்கு ஏக்கருக்கு சில ஆயிரங்களை தருவார்கள். கடைசியாக கொடுத்த நிவாரணம் வெறும் மூவாயிரம் ரூபாய்.

இதுவே சொற்பத் தொகை என்றால் அதை வாங்க நாங்கள் படும்பாடு இருக்கின்றதே அது சொல்ல முடியாத சோகம்.

எரிகின்ற வீட்டிலும் பிடுங்கும் செயலை செய்ய வருவார்கள் நம் அரசு அதிகாரிகள். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று உங்களுக்கு எவ்வளவு விவசாய நிலம் இருக்கின்றது என்று சிட்டா அடங்கல் எல்லாம் வாங்கனும்.


இதுக்கு ஒரு ஏக்கருக்கு 100 ரூபாயாவது வாங்காம கொடுக்கமாட்டாரு அந்த கி.நி.அ, இவ்வளவையும் வாங்கி யாருகிட்ட கொடுக்கனும், அதே கிராம நிர்வாக அலுவலர் கிட்ட தான் கொடுக்கனும், அவருதான் அரசாங்கம் தரும் நிதியை கொண்டுவந்து எங்களுக்கு கொடுப்பாரு. அப்போ ஒரு ஏக்கருக்கு ஒரு 200 முதல் 300 வரை அடிச்சுட்டு மீதியத்தான் கொடுப்பாரு. இப்படி எல்லாரும் சாப்பிட்டது போக மிச்சம் ஒரு 2500 வரும். இது எங்களோட இழப்பில் 4ல் ஒரு பங்கு. இப்படியே 2 வருடம் தொடர்ந்து நடந்தால் எந்த விவசாயியால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும் ? இப்போது தெரிகின்றதா ஏன் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என்று ?

விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத சில நண்பர்கள் உங்கள் தொழிலில் ஏற்படும் இழப்புகளுக்கு ஏன் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்? மற்ற தொழில் செய்வோர்களுக்கு எல்லாம் அவர்கள் தொழிலில் இழப்பு ஏற்பட்டால் அரசா இழப்பீடு வழங்குகின்றது என்று கேட்பார்கள்.

எல்லா தொழில்களும், விவசாயமும் ஒன்று இல்லை. மற்ற தொழில்களில் எல்லாம் தயாரிப்பாளர்தான் விலை நிர்ணயம் செய்வார். ஆனால் உணவுப் பொருட்கள் மக்களின் அத்தியாவசியத் தேவையென்பதால் அரசுதான் அதன் விலையை நிர்ணயிக்கும். எங்கள் உற்பத்தி மிக அதிகமானாலும் எங்களால் அதிக லாபம் அடைய முடியாது. எங்களது லாபம் எவ்வாறு அரசால் கட்டுபடுத்தப்படுகின்றதோ, அதே போல் எங்கள் இழப்பும் அரசால்தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது தானே நியாயம்?

நன்கு விளைந்து நெல்லை அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்றாலும் சரி, வெள்ளத்தாலோ அல்லது வறட்சியாலோ ஒன்றும் விளையாமல் உதவி தொகை பெறுவதானாலும் சரி, எங்களுக்கு சேர வேண்டிய முழுத் தொகையையும் நாங்கள் வாங்கவே முடியாது. அவர்கள் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு மிச்சம் மீதியைத் தான் எங்களிடம் கொடுக்கின்றார்கள்.

பாருங்கள் அய்யா, யாரிடமும் யாசிக்காத உழவனுக்கு அவனுக்கு சேரவேண்டிய தொகையை கூட அவனால் முழுதுமாய் பெற இயலாது, தனக்கு உரியப் பொருளை கூட இரந்து வாங்க வேண்டிய நிலை. வறியவர்க்கு ஒரு பொருளை வஞ்சனை செய்யாது கொடுப்பவர்களுக்கு , அவர்கள் பொருளையே வஞ்சனை செய்யும் கொடுமை. இது தானே இன்று உழவர்களின் நிலை ?

நெல் விவசாயிகள் மட்டும்தான் இத்தணை சோகங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டாம். 11 மாத பயிரான கரும்பு விவசாயிகள் இருக்கின்றார்களே, அவர்கள் பாடு மிக மோசமானது. அதை கட்டாயம் தனி பாகமாகத்தான் எழுத வேண்டும், அடுத்த பாகத்தில் கரும்பு விவசாயிகளின் சோகங்களை பார்ப்போம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•12:25 AM
இன்று நம் மத்திய அரசின் நிலை நமக்கு நன்கு தெரிந்ததே.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமா, மத்திய அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவா? எது முக்கியம் எனும் கேள்வி எழுந்த போது தற்போதைய மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம்தான் மிக முக்கியம் என்றுகருதி இன்றைய மத்திய அரசு ஆட்சியையே இழந்தாலும் பராவாயில்லை, ஆனால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் போதும் என்ற முடிவை எடுத்து, இடதுசாரிகளின் ஆதரவை இழந்து நம்பிக்கை தீர்மானத்தை சந்திக்கும் நிலையிலுள்ளது.

சிறு சிறு கட்சிகளின் ஆதரவையும் வேண்டி பல கோடிகளை கொடுத்தாவது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளதாக செய்திகளில் வாசிக்க முடிகின்றது. ஒருமுறை கூட தொகுதிக்கே போகாமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கூட 25 கோடியாம்.
( மென்போருள் வல்லுநர்கள் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று சொல்பவர்கள் யோசிக்கவும். நாங்கள் எல்லாம் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தாலும் இதுபோன்று சம்பாதிக்க முடியாதைய்யா.)

இந்நிலையில் என்னைப்போன்று அணுசக்தி குறித்த எந்த அறிவும் இல்லாத பல கோடிக்கணக்கான பாமர மக்களின் உள்ளத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1) இன்றைக்கு அஸ்ஸாம் மாநிலத்தின் சில பகுதிகளில் யுரேனியம் இருக்கின்றது என்று செய்தி படித்தேன். மேலும் நம் நாட்டிலேயே போதுமான அளவு தேரியம் இருக்கின்றது, அதை பயன்படுத்தி அணு மின்சக்தி செய்யவும், அணு ஆயுதம் செய்யவும் நம் தேசத்து அறிவியல் ஆய்வாளர்களிடம் சொந்த தொழில்நுட்பம் இருக்கின்றது என்றும் யாம் செய்தித்தாள்களில் வாசிக்கின்றோம். பின் ஏன் பல நிபந்தனைகளுடன் கூடிய இந்த அமெரிக்க ஒப்பந்தம்? தன் பலம் தனக்கு தெரியாத அனுமன் போன்றவர்களா இந்த இந்தியர்கள் ?

2) இந்த அணு ஒப்பந்தம் வெறும் 5% மின் தேவையைத்தான் பூர்த்தி செய்யப்போகின்றது என்றும் சொல்கின்றார்கள். வெறும் 5% மின் உற்பத்திக்காக இவ்வளவு தியாகங்கள் நாம் செய்துதான் ஆக வேண்டுமா?

3) நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் அனல்மின்சக்தி இன்னும் சில ஆண்டுகளில் நிலக்கரி கிடைக்காமல் தடைப்படலாம், தற்போது ஏற்படும் பருவ மழை கோளாறுகளால் புனல் மின்சார உற்பத்தியும் தடைபடலாம் என்று சொல்கின்றீர்கள். தற்போது இருக்கும் அணுமின்சக்தி உற்பத்தி வசதிகளின் மூலம் மொத்த நாட்டின் மின் தேவையில் வெறும் 5 சதவீதத்தைத்தான் பூர்த்தி செய்ய முடியும் என்றால், ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் அனல் மற்றும் புனல் மின் சக்திகள் இல்லாதுபொனால் என்ன ஆகும் ? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சமாளிக்க என்ன மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன‌ ?

4) அணு சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யும் பிரான்சு போன்ற நாடுகள் தற்போது புதிய‌ திட்ட‌ங்க‌ள் எதையும் செய‌ல்ப‌டுத்துவ‌தில்லையே அது ஏன்?

5) பொல்லாத உங்கள் வெளியுறவு கொள்கைக்காக பல நூறு தமிழ் மீனவர்களின் உயிர்களையும், உயிர்களிடம் பேரன்பு கொண்ட பிராணிகள் நலச்சங்கத்தாரின் வழக்கிற்காக வெறிநாய்களின் கடிக்கு பல உயிர்களையும் பலி கொடுக்கும் உங்கள் ஆட்சிகளில் ( எல்லா கட்சி ஆட்சிகளும்தான்) இந்திய நாட்டில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்புமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

பல வருடங்களுக்கு முன்னரே வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷ்யாவிலேயே செர்னோபில் விபத்து நேர்ந்த போது, போபால் விஷவாயு விபத்திற்கே ஒழுங்கான தீர்வு காணாத நீங்கள், இப்போது அணு உலைகளை அதிகமாக்கிக்கொண்டே போனால், ஒரு வேளை செர்னோபில் விபத்து போன்ற விபத்துக்கள் நிகழாது தடுக்க நீங்கள் எடுக்கப்போகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

அப்படி ஒரு விபத்து நேர்ந்தால் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டோர்க்கு உதவிகள் வழங்கிவிட்டு, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்க பிரதமர் தலைமையில் உண்ணாவிரதம் இருப்பீர்களா ? ( இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி காட்டிய பாதை இதுதானே).

என்னுள் இருக்கும் உழவன் கேட்கின்றான், இந்த அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அணுமின்சக்தியும் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், எங்களுக்கு விவசாயத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைத்துவிடுமா?

ஏனென்றால் தற்போது ராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எல்லோரும், அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வந்தால், அவர்களை சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து, வரிவிலக்கு, தடை இல்லாத மின்சாரம் என பல சலுகைகளை கொடுக்கின்றீர்கள், ஆனால் இங்குள்ள உழவர்களையல்லவா பழிவாங்குகின்றீர்கள் , விவசாய நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கையகப்படுத்துகின்றீர்கள். ஆனால் உழவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கவில்லை.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோமே என நமது இன்றைய மத்திய அரசின நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் சொல்லுவார். ஆனால் அவருக்கே தெரியும், அந்த கடன் தள்ளுபடியால் பயனடைந்தது உண்மை விவசாயிகளை விட உங்கள் கட்சியை சேர்ந்தவர்களும், உங்கள் கூட்டணி மட்டுமல்லாது எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்களும் தானே பலன் அடைந்தார்கள்? உண்மையான உழவர்கள் பயனடைய அதற்கும் பல ஆயிரம் கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளதே?

அயல்நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தடையில்லா மின்சாரம் வழங்கத்தான் நீங்கள் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற போகின்றீர்கள் என்றால் இதை எப்படி இந்தியாவின் 70% உள்ள உழவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் ?

என‌க்கு அணு ஆயுத‌ங்க‌ள் செய்வ‌தை அமெரிக்க‌ ஒப‌ந்த‌ம் த‌டை செய்யும் என்ப‌தில் எல்லாம் எந்த‌ கேள்வியும் இல்லை. ஏனெனில் நாம் இது வ‌ரை செய்துள்ள‌ அணுகுண்டு சோத‌னைக‌ளில் இருந்தே, ந‌ம்மை பாதுகாத்துக்கொள்ளும் அள‌வுக்கு ந‌ம்மிட‌ம் அணுச‌க்தி உள்ள‌து என்ப‌து என‌து ந‌ம்பிக்கைமட்டுமல்ல, இந்திரா காந்தி காலத்து அணுகுண்டு சோதனையையும், புத்தர் சிரித்ததையும் நம்பும் கோடானுகோடி உழவர்களின் நம்பிக்கையும் கூட‌.

மாற்று எரிசக்திக்கு பல வழிகள் இருந்தும், அதையெல்லாம் சிந்திக்க கூட மறுத்த இத்தனை காலம் ஆண்டவர்கள் இந்த அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்குமட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்ன?

நான் எந்த கட்சியையும் சாராத பாமரன், நாங்கள் தற்போதிருக்கும் மனநிலையில் எங்கள் மனதில் தோன்றியவையே இக்கேள்விகளும், சந்தேகங்களும்.இதற்கு வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தான் பதிலளிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தின் அருமை பெருமை தெரிந்தவர்கள் யாராவது பதிலளித்தாலும் சரி.

இப்போது இருக்கும் நிலையில் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்ந்தால் ஒழிய மத்திய அரசு பிழைக்க வழியில்லை. சீக்கிரம் எங்கள் கேள்விகளுக்கு பதிலளியுங்கள், பதில் தெரிந்தால்தான் இந்த ஆட்சி கவிழும்போது மகிழ்வதா அல்லது கவலை கொள்வதா என்று எங்களால் முடிவு செய்யமுடியும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:12 PM
இது காதல் குறித்த பதிவு இல்லை.

இன்றைய‌ச் செய்திதாளில் ப‌டித்த செய்தி ஒன்று ஈரோட்டில், தான் ஒரு த‌லையாக‌ காத‌லித்த‌ பெண், த‌ன்னை காத‌லிக்க‌வில்லை, திரும‌ண‌ம் செய்ய‌ ம‌றுத்துவிட்டார் என்ப‌த‌ற்காக‌ அவ‌ரை க‌த்தியால் குத்தி கொடூர‌மாக‌ கொலை செய்துள்ளார் ஒருவ‌ர்.

இதற்கு பெய‌ர் காத‌லா ?

நான் உன்னை காத‌லிக்கிறேன் என்று ஒரு பைய‌ன் ஒரு பொண்ண‌ பார்த்து சொல்லிட்டா, உட‌னே அந்த‌ பொண்ணு க‌ட்டாய‌ம் அந்த‌ பைய‌ன காத‌லிச்சே ஆக‌னுமா என்ன‌ ? உன‌க்கு உன் விருப்ப‌ம் எவ்வ‌ள‌வு முக்கிய‌மோ அதே போல் அந்த‌ பெண்ணிற்கு அவ‌ருடைய‌ விருப்ப‌ம் முக்கிய‌ம‌ல்ல‌வா? பாவ‌ம் அந்த‌ பெண், இப்போதுதான் ஈரோடு கொங்கு பொறியிய‌ல் க‌ல்லூரியில் முத‌லாமாண்டு சேர்ந்திருக்கின்றார். அந்த‌ பெண்ணை போய் திரும‌ண‌ம் செய்துகொள்ள‌ சொல்லி கொடுமை ப‌டுத்தி கொன்ற‌வ‌னை என்ன‌ செய்வ‌து?

அந்த நபருக்கு வந்தது காதல் என்று சொல்வது கூட அந்த வார்த்தையின் புனிதத்தை கேவலப்படுத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். இதற்கு பேர் வெறி, எப்படியாவது அடையவேண்டும் என்ற வெறிதானே தவிர, இதில் கொஞ்சமும் காதல் என்பது இல்லை.

உன்னையே நீ நேசிப்பது போல் உன் அயலாரையும் நேசி என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்குவருகின்றது. இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் எல்லோரும் கடைபிடித்துவிட்டால், உலகில் எங்கும் பிரச்சனைகள் இருக்காது. த‌ன் விருப்பத்திற்கு கொடுத்த‌ முக்கியத்துவத்தை அந்த பெண்ணின் விருப்பத்துக்கும் கொடுத்திருந்தால் இந்த கொலை நிகழ்ந்திருக்காது.

இதுபோன்றே ஒரு சம்பவம், ஏற்கனவே திருச்சியில் மண்டலப் பொரியியல் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணையும், இப்படி ஒரு வெறியன் காதலிக்க மறுத்தார் என்பதால் குத்திக்கொன்றான்.

இதை மனநிலைக் கோளாறு என்பதா அல்லது காதல் என்பதற்கு சரியான விளக்கமளிக்காமல் ஒரு மாய தோற்றத்தை உண்டுபண்ணிவிட்ட ஊடகங்களை குறை சொல்வதா? "காதல் கொண்டேன்" போன்ற படங்கள்தான் காரணமா? புரியவில்லை.இத்தனைக்கும் கொலை செய்தவர் ஒரு முதுகலை பட்டப்படிப்பு மாணவர், படிப்பு நமக்கெல்லாம் அறிவு முதிர்ச்சியை தரவில்லையா? இவரெல்லாம் Just Literate, But Not Educated.

நன்கு படித்து, பொறியியல் கல்லூரியில் சேர ஆவலாய் காத்திருந்த ஒரு மலர வேண்டிய மொட்டை அநியாயமாக கருக்கியவனுக்கு விரைவில் மிக உட்சபட்ச தண்டணையை அளிக்க வேண்டும்.

ஒரு கொடூரனின் வெறியால் அநியாயமாய் உயிரைவிட்ட அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•3:34 PM
நம்ம அரசியல்வாதிகளோட நக்கலுக்கு அளவே இல்லாம போச்சுங்க..

இன்னைக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலு, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்பதாக அறிவித்துள்ளார். என்ன கொடுமை இது???
உங்க கட்சியின் தலைமையிலான மத்திய அரசு ஊசலாடிகிட்டு இருக்கு, அதுக்கு கூட்டணி கட்சிகளோட ஆதரவு அவசியம்தான். அதுக்காக இப்டியாங்க ??? உங்க கட்சித்தலமையிலான மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உங்க கூட்டணியில இருக்க ஒரு கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்துமாம், அதை நீங்களே வரவேற்று அறிக்கை விடுவிங்களாம், பார்த்துகிட்டு நாங்க சும்ம இருகணும். என்ன கொடுமை சாமி இது?

ஊர்ல ஒரு கதை சொல்லுவாங்க‌, வீட்டுக்கு வந்த வேண்டாத விருந்தாளிய விரட்ட அந்த வீட்டுல இருக்க கணவன் , மனைவி இரண்டு பேரும் விருந்தாளி வீட்டுக்கு வந்துருக்க நேரத்துல சண்டை போட்டுகிட்டு, அந்த ஐயா , தன் வீட்டம்மாவ போட்டு அடிக்கிறமாதிரி நடிப்பாங்க. என்னடா நாம இவங்க வீட்டுக்கு வந்த நேரத்துல வீட்ல ஒரே கலவரமா இருக்கேன்னு பயந்துபோயி சொல்லிக்காம கிளம்பி போய்டுவாரு. அவரு போயிட்டாருனு நினைச்சுகிட்டு நம்ம ஐயாவும், அம்மாவும் வெளியில வந்து பேசிக்குவாங்க.

ஐயா : நான் நோகாமல் அடித்தேனே !!!.
அம்மா: நானும் வலிக்காமல் அழுதேனே !!!.



இந்த சண்டைய பார்த்துட்டு வெளில போன நம்ம வேண்டாத விருந்தாளி ரொம்ப‌ விவரமான ஆளு, சரியா இந்த நேரத்துல மறுபடியும் உள்ளார வந்து
சொல்லுவாரு பாருங்க ஒரு வசனம்

விருந்தாளி : நானும் போகாம‌ல் இருந்தேனே !!!!

இப்ப‌ இந்த‌ க‌தைய‌ அப்டியே ந‌ம்ம‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளோடும் , பிர‌ச்ச‌னைக‌ளோடும் ஒப்பிட்டால்

க‌ண‌வ‌ர் : திமுக‌ அர‌சு.
ம‌னைவி : காங்கிர‌ஸ் அர‌சு.
விருந்தாளி : ஒருத்த‌ரா ரெண்டு பேரா, அது ஒரு பெரிய‌ கூட்ட‌முங்கோ .
இப்போதைக்கு விருந்தாளி மீன‌வ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை.


சற்றுமுன் சன் தொலைகாட்சியின் செய்தியில் கடலூரில் மத்திய அமைச்சர் திரு. வேங்கடபதியும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளாராம்.
இவங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு போங்க... Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:11 PM
மீனவர்களின் உயிரைக்காக்குமாறு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதப்போராட்டம்.

என்ன ஒரு அருமையான யோசனை???
எப்படி அய்யா இப்படி ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்தீர்கள்? இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு உயர்மட்ட குழு கூட்டம் வேறு. மிக கேவலமாக இருக்கின்றது இந்த அரசியல்.

ம‌த்தியில் ஆளும் அர‌சில் நீங்க‌ளும் ஒரு அங்க‌ம் தானே? உங்க‌ள் கூட்ட‌ணிக்க‌ட்சி ஆளும் அர‌சின் க‌வ‌ன‌த்தை திருப்ப‌க் கூட‌ உண்ணாவிர‌த‌ம் இருந்தால்தான் முடியுமா?

சாதார‌ண‌நாட்க‌ளிலேயே ந‌ம்ம‌வ‌ர்க‌ள் இது போன்ற‌ ஒரு நாள் உண்ணாவிர‌த‌த்தையெல்லாம் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள். அதிலும் ந‌ம்பிக்கை வாக்கெடுப்பில் அர‌சு த‌ப்புமா, க‌விழுமா என்ற‌ க‌ல‌க்க‌த்தில் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் இருக்கும் உதிரிக‌ட்சிக‌ளின் ஓட்டுக்க‌ளையெல்லாம் பெறுவ‌த‌ற்காக‌ ப‌கீர‌த‌ பிர‌ய‌த்த‌ன‌ம் செய்துகொண்டிருக்கும் இந்த‌ சூழ‌லில் உங்க‌ள் உண்ணாவிர‌த‌த்தையா க‌ண்டுகொள்ள‌ போகின்றார்க‌ள் ? இந்த‌ உண்ணாவிர‌த‌த்தால் ஏதாவ‌து ப‌ல‌ன் இருக்கும் என்று யாராவ‌து ஒருவ‌ராவ‌து ந‌ம்புகின்றீர்க‌ளா?
ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கையோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து சாகும் வரை நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், மற்றும் பூபதி அம்மாள் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தது நம் காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கத்தான்.

அவர்கள் செத்தாலும் பரவாயில்லை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்று இருந்து உண்ணாவிரதத்தால் திலீபனும், பூபதி அம்மாளும் உயிரை விடச்செய்தது இதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான்.

சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கே அந்த நிலை என்றால், நீங்கள் காலையில் ஆரம்பித்து மாலை முடிக்கப்போகும் இந்த உண்ணாவிரதத்திற்கு மதிப்பளித்து உங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன ?

மீனவர்களின் உயிர்களும், அவர்களின் நலனும் முதல்வருக்கு முக்கியமேயில்லையா என்ன ? இதுவரை கடிதம் மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். இப்போது ஒப்புக்கு ஒரு உண்ணாவிரதம். வேறு எந்த உருப்படியான யோசனையும் தோன்றாத அளவுக்கு அறிவு பஞ்சமா ஆள்வோரிடம்?

ஏன் அனைத்துக்கட்சியையும் கூட்டி ஆலோசிக்க கூடாது?

நாளை ஏதாவது ஒரு பிரச்சனைக்கு, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் நீங்கள் அறிவித்தாலும், அதையும் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எங்களால் வேறு என்ன செய்யமுடியும்? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•8:53 PM
இலம்என்று அசைஇ இருப்பாரக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்.


உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2
உழவும் உழவர்களும் - 3

விவசாயம் இயற்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு தொழில்.
இயற்கை பல நேரங்களில் எம்மை வாழ வைப்பதும் உண்டு, வீழ வைப்பதும் உண்டு.

நாற்று நட்டு வேர்விட நடவு செய்ததில் இருந்து ஒரு 10 நாட்கள் ஆகும். அதன் பின் அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன் வரை மழை பெய்தால் பயிர்களுக்கு எந்த சேதமும் இருக்காது. சொல்லப் போனால் இந்த நாட்களில் மழை பெய்வது பயிரை நன்கு வளர உதவி புரியும். இப்படி பெய்ய வேண்டிய நாட்களில் பெய்து காக்காமல், பயிர் அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் மழை பெய்தால் மொத்த விளைச்சலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடும்.

அடுத்து எங்கள் உழவர்களின் உழைப்பை பதம் பார்ப்பது பூச்சிகள். மிகக் கடுமையான விலை கொடுத்து வாங்கி பூச்சி கொல்லி மருந்தடித்தால் அடித்த ஒரு வாரத்திற்காவது வெயில் அடித்தால்தான் நல்லது. மருந்தடித்த உடன் மழை பெய்தால் எல்லாம் போச்சு.

இயற்கை நம் கைகளில் இல்லாத ஒன்று. மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் காவிரி???

உணவு சம்பந்தப்பட்ட காவிரியை இருமாநிலங்களின் உணர்வு சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றி, ஓட்டுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுவது தமிழகத்தின் விவசாயி தானே?

இப்போதுகூட மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து கொண்டே வருகின்றது, அணைக்கு வரும் நீரின் அளவு மிக குறைவாக இருக்கின்றது, கர்நாடகா எந்த தீர்ப்புக்கும் கட்டுப்படாமல், நமக்கு தரவேண்டிய நீரை தரவில்லை என செய்தித்தாள்களில் வாசிக்கும் போது இந்த ஆண்டு என்ன நேருமோ என உள்ளம் பதைபதைக்கின்றது.

பசியால் அழும் குழந்தைக்கு உணவு தர வழியில்லாத நிலையில் இருக்கும் தாயின் மனநிலை என்ன நிலையில் இருக்குமோ அதைவிட மோசமான நிலையில்தான் நீரின்றி வாடும் பயிறுக்கு நீர் தர வழியின்றி தவிக்கும் உழவனின் நிலையும் இருக்கும்.

தான் பெற்று, வளர்த்து ஆளாக்கிய மகன், அகால மரணமடைந்தபோது கூட அழாமல் இருந்த ஒரு முரட்டு மனிதர், தன் வயலில் நீரின்றி காய்ந்த பயிருக்கு நீர் தர எந்த வழியும் இல்லாத கையறு நிலையில் இருந்தபோது கதறி அழுததை கண்களால் கண்டவன் நான்.

நதி நீரை தேசியமயமாக்கிட துணிச்சல் இல்லாத மத்திய அரசுகளும், நதி நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நினைக்காமல் அதை அரசியலாக்கி பிழைக்கப் பார்க்கும் மாநில அரசுகளும் இருந்து என்ன பிரயோசனம்?

2007 அக்டோபர் 1ம் நாள் ஏதோ ஒரு பிரச்சனைக்காக தமிழகத்தில் முழு அடைப்புக்கு மாநில அரசு அழைப்பு விடுத்தபோது, விடுமுறை நாள் என்ற போதிலும் இதுவரை இல்லாத வழக்கமாக நீதிமன்றம் கூடி அந்த முழு அடைப்பை சட்டவிரோதம் என்று தீர்பளிப்பதில் அக்கறைகாட்டிய வானளாவிய அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம், அதன் தொடர்சியாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசையே கலைக்க பரிந்துரை செய்வோம் என்றெல்லாம் தமிழக அரசின் மீது அத்தனை கடுமை காட்டிய மாண்புமிகுந்த உச்சநீதிமன்றம்,மக்களின் வாழ்வாதார நதி நீர் பிரச்சனைகளில் தனது தீர்ப்பை மதிக்க தவறி, நீதிமன்ற அவமதிப்பை செய்யும் கேரள, கர்நாடக மாநில அரசுகளை கண்டிக்க வழியில்லமல் இருப்பதும், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளில் இரு மாநிலங்களும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறும் போது, எப்படி பிழைக்க முடியும் எங்கள் உழவர்கள்?

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் எனது முந்தைய பதிவில் எல்லா வேலைகளிலும் தான் சிரமங்கள் உள்ளன, இதை எப்படி ஒரு விஷயமாக சொல்லலாம் என்ற அர்தத்தில் கேட்டிருந்தார்.

உழவர்கள் சந்திக்கும் எல்லா சவால்களையும் நீங்கள் சந்திக்கின்றீர்களா? மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நீங்கள் உங்களது ஊதியத்தை நீங்கள் நிர்ணயிப்பீர்களா, அல்லது நிறுவனத்தார் உங்கள் வேலைக்கு என்ன ஊதியம் கொடுக்கின்றார்களோ அதை மட்டும் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருப்பீர்களா?

உங்களுக்கு உங்கள் வேலையை செய்வதற்கு தேவையான கணிணியை மட்டும் கொடுத்துவிட்டு, அதை இயக்கத் தேவையான மின் இணைப்பை கொடுக்காமல் விட்டால் உங்களால் வேலை செய்ய முடியுமா? மென்பொருளை உருவாக்கத்தான் முடியுமா? கணிணியை இயக்க மின் இணைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உழவுத் தொழிலுக்கு நீர். அது இல்லாமல் என்ன செய்வான் எங்கள் உழவன்?

ஒரு மென்பொருளாளரின் வேலையில் உள்ள சிரமங்கள் என்ன? அந்த சிரமங்களை எதிர்கொள்ள அவனுக்குள்ள வசதிகள் என்னென்ன? அப்படி சிரமங்களை எதிர்கொள்ளும் வசதி உழவனுக்கு இருக்கின்றதா?

20 பைசா உற்பத்தி செலவு செய்து ஒரு தீப்பெட்டியை தயார் செய்யும் தயாரிப்பாளர் கூட 30 பைசா லாபம் வைத்து 50 பைசாவுக்கு தனது பொருளை விற்க முடியும் எனும் போது, ஏராளமான சிரமங்களை தாண்டி , இயற்கையோடு போராடி உழைத்து விளை பொருளை கொண்டுவரும் உழவனுக்கு தனது பொருளின் விலையை நிர்ணயிக்கும் உரிமை உள்ளதா?

யூரியா போன்ற உரத்தட்டுபாடு, விதை தட்டுபாடு எல்லாம் செயற்கையானது. இதையெல்லாம் கூட எங்களவர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். உழைப்பிற்குறிய ஊதியம் கிடைக்காத போதுதான் துவண்டுவிடுவார்கள்.

ந‌ண்ப‌ர் ஸ்ரீராம் ஒரு த‌வ‌றான‌ த‌க‌வ‌லை குறிப்பிட்டிருந்தார். எந்த‌ உழ‌வ‌ரும் அரிசி விலை கிலோ 2 ரூபாய்க்கு விற்க‌ வேண்டும் என்று விரும்ப‌வில்லை. எந்த‌ விவ‌சாயியும் த‌ன‌து விளை பொருள் இந்த‌ அள‌வு குறைவான‌ விலையில் விற்க‌ப்ப‌டுவ‌தை வ‌ர‌வேற்க‌ மாட்டான். வேண்டுமானால் விவ‌சாய‌ கூலித் தொழிலை செய்ப‌வ‌ர்க‌ள் அதை வ‌ர‌வேற்க‌லாம். நான் ஏற்க‌ன‌வே என் ப‌ழைய‌ ப‌திவுக‌ளில் குறிப்பிட்டிருந்த‌ப்டி கிலோ 2 ரூபாய்கு அரிசி திட்ட‌ம் ப‌ல‌ரையும் சோம்பேறிக‌ள் ஆக்கி, விவ‌சாய வேலைக்கு ஆள் ப‌ற்றாகுறையைத்தான் ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தை அனைத்து உழ‌வ‌ர்க‌ளும் உண‌ர்ந்துள்ள‌ன‌ர்.

இப்படி இயற்கை சீற்றங்களாலும், செயற்கையான காரணங்களாலும் பாதிக்கப்படும் உழவர்கள் இழப்பது தங்களது லாபத்தை தான்.

2007 ஆன் ஆண்டு அறுவடை நேரத்தில் பெய்த மழையால் எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5000 முதல் 7500 வரை நட்டம்.இப்படி நஷ்டம் அடைந்தால் எங்களால் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியும் ?

இயற்கை சீற்றங்களின் போதெல்லாம் அரசாங்கம் தான் உழவர்களுக்கு நிவாரண நிதி வழங்குகின்றதே என கூறுகின்றீர்களா?

அந்த கொடுமையைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போமா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:19 AM
இன்றைய தினமலர் செய்தியில் படித்த ஒரு செய்தி என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ரயில் குண்டுவெடிப்பால் டாக்டரின் 'ஸ்பீக்கர்' அவுட்: யோகா, இயற்கை வைத்தியத்தால் கிடைத்தது பலன்.

தேவையேயில்லாமல் ஆங்கிலச் சொற்களை கலந்து தருவதில் தினமலர் தான் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கை. ஒரு தமிழ் தினசரியில் ஆங்கில வார்த்தைகளை எதற்கு கலக்க வேண்டும் ?

சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும், அதற்கான தமிழ் வார்த்தையே பலருக்கு புரியாது என்று சொல்லும் நிலை இன்று பல வார்த்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆனால் காது கேட்க்கும் திறனை இழந்தார், அல்லது காது செவிடாகிவிட்டது என்பது போன்ற வார்த்தைகள் கூடவா மக்களுக்கு புரியாமல் போகும்?

சரி ஆங்கிலத்தை கலந்ததுதான் கலந்தீர்கள், அதுவாவது சரியா ?
ஸ்பீக்கர் என்பது ஒலி பெருக்கி, ஒலியை பரப்ப பயன்படும் ஒரு வெளிப்படுத்தும் கருவி (Output Device). அது உள்வாங்கியல்ல ( Input Device). ஆனால் செவி என்பது ஒலியை உள்வாங்க பயன்படும் ஒரு உடல் உறுப்பு. எப்படி ஒரு வெளிப்படுத்தும் கருவியை போய் ஒரு உள்வாங்கும் உறுப்புக்கு பதிலாக உபயோகிக்கலாம்?

பல திரைப்படங்களில் நகைச்சுவைக்காக செவியை ஸ்பீக்கர் எனச் சொல்லியிருக்கலாம். அதற்காக அதுதான் சரியான் வார்த்தை என்பதுபோல் ஒரு தினசரி பத்திரிக்கை நடந்துகொள்வது என்ன நியாயம்?

எனது சிறுவயதில் நன்கு தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் தாத்தா , என்னையும், என் சகோதரனையும் தினசி பத்திரிக்கையை சத்தமாக வாசிக்க சொல்லுவார். இதை பல பெரியவர்கள் செய்வார்கள். இனியெல்லாம் பிள்ளைகள் தமிழ் கற்க தமிழ் தினசரிகளை அவர்கள் கண்களிலேயே காட்டாமல் வைத்திருப்பதுதான் நல்லது.

நன்கு படித்த, அயல்நாடுகளில் வேலைபார்க்கும் பல வலை பதிவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்றுகூட ஏன் இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு இல்லை ? இது அப்பட்டமான மொழிக்கொலை. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:34 PM
நாகப்பட்டிணம் ஆற்காடுபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நாகை ஆற்காடுபுரத்திலிருந்து, மீன் பிடிப்பதற்காக வாசகன், நாராயணசாமி மற்றும் முரளி ஆகியோர் தான் இலங்கை படையினரால் சுடப்பட்டு முரளி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வாசகன், நாராயண சாமி இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

செத்தது தமிழர்கள் தானே? இவர்கள் என்ன தீவிரவாதிகளா? இவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி தானே? என்ன செய்யப்போகின்றீர்கள் இதற்கும் ?

இங்கு சாகும் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட‌ ந‌ம‌து முத‌ல்வ‌ருக்கு எங்கே நேர‌ம் இருக்கும்? அவ‌ருக்கு தான் ப‌ல‌ க‌வ‌லைக‌ள் இருக்குமே? இதை கேட்டால் அவ‌ர் என்ன‌ துப்பாக்கியை தூக்கிக்கொண்டா போய் ச‌ண்டை போட‌ முடியும் என்று அண்ண‌ண் ல‌க்கிலுக், அபி அப்பா போன்றோர் கேட்பார்க‌ள்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதே சட்ட விரோதம் என்று அறிவிக்கச்சொல்லுங்கள். கடலில் இறங்கினால் நாங்களே சுடுவோம் என அறிவியுங்கள். செத்தாலும் இந்தியப் படையினரால் சுடப்பட்டு இறந்தோம் என்ற பெருமையாவது கிடைக்கட்டும் எங்கள் இந்திய மீனவர்களுக்கு.

ஏன் நம் நாட்டுக்கு கீழே கையகலமே உள்ள ஒரு நாட்டின் கடற்படையால் சுடப்பட்டு சாகணும்?
தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்தே பிரித்துவிட்டார்களா என்ன ? த‌மிழ‌ன் செத்தால் இந்தியா க‌ண்டுகொள்ளாதா?

ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்தின் தமிழர்களை இலங்கைப்படை கொல்வதில் இருந்து காப்பாற்றமுடியவில்லை என்றால் இவர்களால் நமக்கு என்ன பயன்?

இத்தனை தமிழர்களை கொன்ற சிங்கள கடற்படையைப் பார்த்து இதுவரை ஒரு எச்சரிக்கை குண்டையாவது சுட்டிருக்கின்றதா பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவின் கடற்படை?

இனியும் எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டு இருக்காது என்று சட்டசபையில் அறிவித்த முதல்வர் இப்போது என்ன செய்யப்போகின்றார்? கடிதம் எழுதுவதைத் தவிர ?

இதுவரை எத்தனை மீனவர்களை கொன்றுள்ளது அந்த கேடுகெட்ட சிங்களப்படை? இதுவரை எத்தனை கடிதம் எழுதியுள்ளீர்கள்? அத்தனை கடிதங்களுக்கும் ஒரு பதில் கடிதாமாவது வந்துள்ளதா?

கலைஞரின் கடிதங்களாவது பிரதமரை சென்றடைகின்றதா? இல்லை அத்தனையும் குப்பை கூடைக்களுக்குத்தான் செல்கின்றதா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:29 PM
உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டோம்என் பார்க்கும் நிலை.


முந்தைய இரு பாகங்களையும் படித்துவிட்டு கருத்துகளை எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.

சரி வாருங்கள், நாம் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகங்களினால் நடத்தப்படும் நேரடிக் கொள்முதல் நிலையங்களை பார்ப்போம்.

அறுவடை நேரங்களில் எல்லா ஊர்களிலும் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பார்கள்.

நமது நெல் மூட்டைகளை எடுத்துக்கொண்டு இங்கு போய் காத்திருக்க வேண்டும்.
இங்கு நமது நெல்லை விற்க, நெல்லில் கட்டாயம் 18% க்கு மேல் ஈரப்பதம் இருக்க கூடாது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கட்டாயம் காயவைத்துக்கொண்டுதான் வரவேண்டும்.

ஈரப்பதம் எல்லாம் சரியாக இருந்து எடை போட வருகின்றாகள் அங்கு நடக்கும் ஒரு அநியாய கொள்ளை.இவர்களும் தங்கள் தராசில் தில்லுமுல்லு செய்து ஒரு மூட்டைக்கு 2 கிலோ வரை அதிகமாக வைத்து எடுப்பார்கள்.

இப்படி நம்மிடம் அதிகமாக எடுக்கும் நெல்லை எல்லாம் மூட்டையை தைக்கும் முன்னர் அளந்து எடுத்து, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள். இது முதல் கொள்ளை.

இதை தடுக்க அரசு சென்ற ஆண்டு மின் தராசுகளை தந்தும்கூட பல இடங்களில் இன்னும் அதை உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. சாதாரண தராசுகளில்தான் எடை போடுகின்றார்கள். மின் தராசுகளில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பதால்தான் இப்படி.

அடுத்து, நெல்லை எடுத்துக்கொண்டபின் காசு கொடுக்கும் இடத்தில் முழுபணத்தையும் தராமல் கட்டாயமாக மூட்டைக்கு 15 ரூபாய் எடுத்துக்கொண்டுதான் தருவார்கள்.

இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள், கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து, கிடங்குகளுக்கு நெல்லை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், சிந்தும் நெல்லுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும், அது இது என்று ஆயிரம் காரணம் சொல்லுவார்கள்.

முன்பு நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டையின் எடை 71கிலோ. ஒரு 71கிலோ மூட்டைக்கு 15ரூபாய் கொள்ளையடிப்பார்கள். தற்போது ஏற்றி இறக்கும் வசதிக்காக ஒரு மூட்டைக்கு 35 கிலோ என எடை வைத்து எடுக்கின்றார்கள். தற்போது ஒரு 35கிலோ மூட்டைக்கு 8ரூபாயில் இருந்து 10ரூபாய் வரை கொள்ளை.

ஒரு ஏக்கர் விவசாயம் செய்த ஒரு உழவருக்கு ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் ( ஒரு மூட்டைக்கு 60 கிலோ) விளைகின்றது எனக்கொண்டால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இவர்கள் ஒரு மூட்டைக்கு நியாயமாக வைக்க வேண்டிய 36 கிலோ என்ற கணக்கில் வைத்தால் நம்மவருக்கு 75 மூட்டைகள் வரும். ஆனால் மூட்டைக்கு இரண்டு கிலோ கொள்ளையடிக்கப்படுவதால் நம்மவருக்கு கிடைப்பதோ 71 மூட்டைகள் தான்.



மேலும் இந்த 71 மூட்டைகளுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் வீதம் எடுத்துக்கொண்டாலும் நம்மவர் இழப்பது 710 ரூபாய்.

தற்போது அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய். இந்த விலையையே நம் கணக்கீட்டிற்கு பயன்படுத்தினால் நேரடி கொள்முதல் நிலையத்தில் நம்மவருக்கு ஒரு மூட்டைக்கு 350ரூபாய் கிடைக்கும் .

சரி நம்மவர் 4 மூட்டைகளை எடைபோடுவதில் நடந்த கொள்ளையில் இழந்தாரல்லவா? அதற்கு 4 X 350 = 1400.

ஆக ஒரு ஏக்கருக்கு நம்மவர் இழப்பது 2110.

இத்தொடரின் முதல் பாகத்தில் நாம் பார்த்தபடி ஒரு ஏக்கருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 10800 ரூபாய் லாபத்தில் இப்படி 2110 ரூபாயை இழந்துவிட்டால் இவர்களுக்கு மிஞ்சுவது 8690 மட்டுமே.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள், அது உண்மைதான் என்பது இப்போதாவது புரியும் என்று நினைக்கின்றேன்.

ஆக இது ஒழுங்காக தண்ணீரெல்லாம் கிடைத்து, இயற்கை சாதகமாக இருந்து, நன்கு விளைந்தால் மட்டும் கிடைக்கும் லாபம் இது.

இயற்கை சீற்றம், மற்றும் காவிரி நதி நீர் பிரச்சனை போன்றவை ஏற்படும் காலங்களில் ??????

அடுத்த பாகத்தில் தொடர்கின்றேன். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க