Author: ஜோசப் பால்ராஜ்
•1:25 PM
மின் வெட்டால் தமிழகம் மட்டுமின்றி, நாடே தத்தளிக்கும் இவ்வேளையில் ஒரு கிராமம் தன் மின் தேவைக்கு பிறரை சார்ந்திருக்காமல் சாதனை படைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு பஞ்சாயத்துதான் ஓடந்துறை. இந்த பஞ்சாயத்துக்குட்பட்டு மொத்தம் 11 கிராமங்கள். அத்தனை ஊர்களுக்கும் குடிநீர் எந்த வித பிரச்சனையுமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

மரத்துண்டுகளை எரிச்சு, அந்தப் புகையை தண்ணீருடன் கலந்து வடிகட்டி கியாஸ் தயா ரிக்கும் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' (Biomass Gasifier Gas) யூனிட்டை அமைச்சு, அதுல கிடைக்கிற கியாஸ் மூலமா 9 ஹெச்.பி. மோட்டார் ஒண்ணு கரன்ட் இல்லாம இயக்கப்படுகிறது. அதை கொண்டு ஓடந்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

அதோடு மட்டுமில்லாமல், தெருவிளக்குகள் அனைத்தையும் சூரிய ஒளி விளக்காக அமைத்துள்ளார்கள். இதனால் இரவுகளில் தடையில்லாமல் தெரு விளக்குகள் ஒளிர்ந்து கொண்டுள்ளன.

இந்த‌ கிராம‌ம் காற்றாலை மின் உற்ப‌த்திக்கு ஏதுவான‌ இட‌த்தில் அமைந்திருப்ப‌தால் காற்றாலை ஒன்றையும் சொந்த‌மாக‌ நிறுவியுள்ளார்க‌ள். இத‌ன் மூல‌ம் வ‌ருட‌த்திற்கு ஏழே முக்கால் லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. தங்கள் பஞ்சாயத்தின் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்று சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு காற்றாலைக்காக வாங்கிய வங்கிக் கடனை அடைக்கிறார்கள். கடன் முழுவதும் அடைக்கப்பட்டுவிட்டால் அந்த ஊராட்சி சுய வருமானமுள்ள ஊராட்சியாகிவிடும்.

அதோடு மட்டுமின்றி எல்லா வீடுகளிலும் சூரிய ஓளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பையும், சிறிய காற்றாலை ஒன்றையும் அமைத்து ( Solar and Wind hybrid system )அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வீடுகளின் உபயோகத்திற்கு பயன்படுத்தும் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த இருக்கின்றார்களாம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பச் செலவு அதிகம் என்பதும், இது ஜெர்மன் போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்படும் திட்டம் என்பதும், ஜெர்மனியில் இருந்து மிக குறைந்த விலையில் சோலார் பிளேட்டுகளை வாங்க முடியும் என்பதும் அந்த ஊராட்சித் தலைவி லிங்கம்மாளுக்கு நன்கு தெரிந்து இருக்கின்றது. ஆனால் நம் மின்சார துறை அதிகாரிகளுக்கோ, அமைச்சருக்கோ இது தெரியவில்லை.

மரபு சாரா எரிசக்தி உற்பத்திக்கு மத்திய அரசு மானியங்கள் மட்டும் வழங்குகின்றது. ஆனால் அதில் உள்ள வாய்ப்புகளை பெரிய அளவில் விளம்பரம் செய்வதில்லை. இது போல் ஆர்வமாக பல நல்ல திட்டங்களை செய்யும் ஓடந்துறை ஊராட்சிக்கு கட்டாயம் அரசு உதவிகளைத் தாராளமாகச் செய்து கொடுத்தால் அவர்கள் கட்டாயம் அவர்கள் முழு சுயசார்பு ஊராட்சியாக முன்னேறிவிடுவார்கள்.

சூரிய ஒளி விளக்குகளை அமைக்க அரசு தாராளமாய் மானியங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏன் எல்லா கிராமங்களிலும், நகர்புறங்களிலும் உள்ள தெரு விளக்குகளை சூரிய சக்தியில் செயல்படும் விளக்குகளாக மாற்றக் கூடாது? இதை ஏன் அரசே முன் நின்று செய்யக் கூடாது ? இதனால் பெருமளவில் மின் உபயோகம் குறைவதோடு, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெருமளவில் மின் கட்டணம் குறையும். அதேப் போல் 'பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ்' நுட்பத்தையும் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தலாமே ? எல்லா ஊராட்சிகளுக்கும் இதை பரிந்துரைக்கலாம் அல்லவா?

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் அவர்களே அவர்களது மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவிகள் செய்து கொடுத்தால் விவசாயிகளும் மின்வெட்டால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடுவார்கள், அதோடு அரசுக்கும் மின் செலவு குறையும். பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறையில் நீர் மூழ்கி மோட்டார்களை இயக்க முடியுமா எனத் தெரியவில்லை. அப்படி முடியாத பட்சத்தில் நீர் மூழ்கியல்லாத அனைத்து மோட்டார்களுக்கும் இம் முறையை பயன்படுத்தச் செய்யலாம்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் விளக்குகள் கோடை காலங்களில் 100 சதவீதம் சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம் பெற்றுவிடும். ஆனால் மழைக்காலங்களிலும் வெயில் குறைவாக இருக்கும் காலங்களிலும் மின் உற்பத்திக் குறைவாகவே இருக்கும் என்பதால், தற்போது இருக்கும் மின்சாரத்தை அச்சமயங்களில் பயன் படுத்திக்கொள்ளும் வகையில் கவனமாக திட்டமிட்டு செயல்படுத்தினால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தெரு விளக்குகளை இயக்க முடியும். கோடை காலங்களில் நீர் மின் உற்பத்தி குறைவால் ஏற்படும் பற்றாகுறையை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொண்டு சமாளிக்கலாம். அதே போல் மழைக்காலங்களில் நீர் மின் உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால் சூரிய ஒளி மின்சாரத்தில் ஏற்படும் பற்றாகுறையை சரி செய்யலாம்.

அதோட இதெல்லாம் சுற்றுப்புறச் சூழலை கெடுக்காத நல்லத் திட்டங்களா வேற இருக்கு. ஓடந்துறையின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் திரு.சண்முகம், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவரான அவரது மனைவி திருமதி. லிங்கமாள் ஆகியோரிடமாவது போய் நம் மின் துறை அமைச்சர் ஆற்காட்டார் பாடம் கற்றுக் கொண்டுவந்தால் மிக நல்லது.

எல்லா ஊர்களும் காற்றாலை மின் உற்பத்தியில் இறங்க இயலாது. ஆனால் சூரிய ஒளி மற்றும் பயோமாஸ் கியாஸிஃபியர் கியாஸ் முறைகளை எல்லோரும் உபயோகிக்க முடியும். இவை எல்லாமே மிக எளிதாக செயல்படுத்த முடிகின்ற திட்டங்கள் தான். அதை நாம் செய்து ஒரு ஊரில் குறைந்தது 100 யூனிட் மின்சாரத்தை சேமித்தாலும் ஒரு மாவட்டத்தில் எவ்வளவு மின்சாரத்தை சேமிக்க இயலும்? அது எவ்வளவு உபயோகமாக இருக்கும் ? சும்மா அணு ஒப்பந்தம் நிறைவேறியவுடன் எல்லாம் சரியாயிடும்னு கதை சொல்லிக்கிட்டு இருக்காம சின்ன சின்னதா இது மாதிரி திட்டங்கள நிறைவேத்துனா பலன் பெரிய அளவுல இருக்கும்ல?

இது போன்ற‌ திட்டங்களில் எல்லா ஊர்களிலும் உள்ள ஊராட்சித் தலைவர்கள் சற்று கவனம் செலுத்தினாலாவது நாம் ஆற்காட்டாரை திட்டாமல் நம்ம வேலைய நாமலே பார்த்துக்கிட்டு போகலாம். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்று காந்தியும் சொன்னாரு. அப்துல் கலாமும் சொல்லிக்கிட்டு இருக்காரு. எல்லா கிராமங்களும் இப்படி தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு வந்துட்டா எப்டியிருக்கும் ? நல்ல கற்பனையா இப்போதைக்கு இருக்கிறது, நாலு பேரு மனசு வைச்சா சீக்கிரமே நடக்கும். நடக்கணும்.

பின் குறிப்பு: 14.09.2008 தேதியிட்ட ஜீனியர் விகடனில் வெளிவந்த செய்தியிலிருந்து தெரிந்து கொண்டதை வைத்து தான் நான் இப்பதிவை எழுதியுள்ளேன். செய்தி மூலத்திற்கு ஜீ.வி க்கு எனது நன்றிகள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:05 PM
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாலத்தான் தீ விபத்து நடந்தது - முதலமைச்சர் அறிக்கை

தீயணைப்பு சான்றிதழே பெறாமல் ஐந்து மாடிக் கடை - தீயணைப்புத் துறை இயக்குநர்

அந்த இடத்துல திடீர்னா ஐந்து மாடிக்கட்டிடம் கட்டுனாங்க? பல வருசங்களா அந்த பல மாடிக்கட்டிடம் இருந்துகிட்டேத்தானே இருக்கு ?

இத்தனை நாளு முதல்வருக்கு இது தெரியவே தெரியாதா? தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு அந்த கட்டிடத்துக்கு சான்றிதழ் வாங்கிருக்காங்களா இல்லையான்னு கூடத் தெரியாதா?

தமிழ்நாட்டுலயே மொத்தம் 968 பெரியக் கட்டிடங்கள் தான் இருக்கு, அதுல 661 கட்டிடங்களுக்கு சென்னையில இருக்குன்னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி. மொத்த‌ த‌மிழ்நாட்டுல‌யும் 968 பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ள் தான் இருக்குன்னா, அந்த‌ 968ல‌யும் எல்லா விதிமுறைக‌ளும் பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டிருக்கா, முறைப்ப‌டி தீய‌ணைப்பு வ‌ச‌திக‌ள் செய்ய‌ப்ப‌ட்டிருக்கா, அவ‌ச‌ர‌க்கால‌ங்க‌ளிலும், விப‌த்து நேர‌ங்க‌ளிலும் பொதும‌க்கள் பாதுகாப்பா வெளியேறும் வ‌ழிக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டிருக்கான்னு கூட‌ ந‌ம்ம‌ தீய‌ணைப்புத்துறையால‌ சோத‌னை செய்ய‌ முடியாதா?

தீயணைப்புத் துறையின் அனுமதியே இல்லாமல் இருந்ததாம், தீயணைப்புத்துறை அதிகாரி இப்பத்தான் சொல்றாரு. இவ்ளோ நாளு என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாரு? சரிங்க, என் கேள்வி, இந்த 900+ கட்டிடங்களும் முறைப்படி தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கா, அவசரக் காலத்துல வெளியேற வசதிகள் இருக்கான்னு எல்லாம் யாருமே சோதிக்க மாட்டாங்களா?

விதிமுறைக‌ளை மீறிக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌ட்டிட‌ங்க‌ளை இடிக்க‌ச் சொல்லி தொட‌ர‌ப்ப‌ட்ட‌ பொதுந‌ல‌ வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌ம் இடிக்க‌ச்சொல்லி உத்த‌ர‌விட்டு அதே தியாக‌ராய‌ந‌க‌ரில் உள்ள‌ சென்னை சில்க்ஸ் க‌ட்டிட‌த்தின் சில‌ த‌ள‌ங்க‌ள் இடிக்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்த‌ க‌ட்டிட‌ங்க‌ள் எப்ப‌டி த‌ப்பின‌? அப்போது கூட‌ தெரிய‌வில்லையா இவையும் விதிமுறையை மீறித்தான் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என்ப‌து?

இந்தியாவில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று எல்லோரும் புலம்புகின்றார்கள். இன்னும் மனித உயிர்களுக்கு மதிப்பு மட்டும் உயரவே இல்லை. ஏதாவது விபத்து ஏற்பட்டால் இரண்டு நாட்களுக்கு மட்டும் எல்லோரும் பேசிட்டு போயிகிட்டே இருக்காங்க. அரசாங்கம் முதல்வர் நிவாரண நிதியில கொஞ்சம் பணம் கொடுக்கும், விளம்பரத்துக்கு எல்லா அரசியல்கட்சிகளும் கொஞ்சம் உதவி செய்வாங்க, அவ்ளோதான் எல்லாரும் மறந்துடுவாங்க.

90 பச்சிளம் குழந்தைகள் உயிரோடு கருகியப்பின்னர் தான் பள்ளிகளில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என ஆரய அரசு உத்தரவிட்டது. தற்போது 2 உயிர்கள் பலியாகியுள்ளன. இனியாவது அரசு முழிக்குமா? அதிகாலையிலயே சரவாணா கடை எரிஞ்சதால 2 உயிர்களோட போச்சு, ஆனா அதே விபத்து காலை 11 மணிக்கு மேலயோ அல்லது மாலை நேரத்துலயோ நடந்துருந்தா ??? யோசிக்கவே பயமா இருக்குங்க.

இவ்வளவு மோசமாக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் கட்டாயம் இந்த விபத்திற்கு இழப்பீடு எதுவும் கொடுக்க கூடாது. மேலும் இந்த விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் அதே ரெங்கநாதன் தெரு மட்டுமல்ல, இன்னும் இது போல நெருக்கடி நிறைந்த பல இடங்களில் உள்ள பொதுமக்கள் கூடும் வியாபார நிறுவனங்களில் எல்லாம் முறையாக சோதனை செய்து, அதில் ஏதாவது விதி மீறல்கள் இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது ரம்ஜான் மற்றும் தீபாவளிப் பண்டிகை காலம், மக்கள் பெருமளவில் புத்தாடைகள் வாங்க இந்த கடைகளுக்குத்தான் செல்வார்கள். இப்போதே உடனே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு தாட்சண்யமே இல்லாமல் விதிமுறைகளை மீறிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வந்தாளாவது பண்டிகை கால லாபங்களை இழக்க விரும்பாத நிறுவனங்கள் உடனே விதிமுறைகளை நடைமுறைபடுத்த முன்வருவார்கள். இனியாவது முழிக்குமா அரசு ? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:00 PM
சமீபத்தில் இலவசம் என்றால் இளக்காரமா ? என்ற தலைப்பில் இலவச பேருந்து சலுகையை பயன்படுத்தி பயணம் செய்த சில சிறுமிகளை தஞ்சையில் ஒரு நடத்துநர் பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட செய்தியை அறிந்து நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்ட பலரும், தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதிலும் என‌க்கு ப‌ல‌ நேர‌ங்க‌ளில் மிக‌ சரியான‌ ஆலோச‌னைகளை சொல்லும் என் ந‌ண்ப‌ர்
3rdeye த‌ன‌து பின்னூட்ட‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கேட்ப‌தோடு நிறுத்தாதே இதை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்துச்செல் என்று பின்னூட்ட‌மிட்டிருந்தார்.

நானும் இதை வெறும் பதிவிடுவதோடு நிறுத்தக்கூடாது, கட்டாயம் அந்த மனிதாபிமானமற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ன செய்யலாம் என்று எண்ணிய போது, தற்செயலாக இணையத்தின் மூலமாக பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க வசதி இருப்பது தெரியவந்தது. http://pgportal.gov.in.

இந்த இணையத்தின் வாயிலாக இந்தியாவில் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் மற்றும் அரசின் அனைத்து துறைகளுக்கும் நாம் நமது புகாரை தெரிவிக்க முடியும்.

முதலில் நமது பயனாளர் பெயர் (User Name) மற்றும் கடவு சொல் (Password) ஆகியவற்றை தெரிவு செய்து விட்டு, நமது முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துவிட்டு, எந்த துறைக்கு நமது புகாரை அனுப்ப வேண்டும் என்பதை தெரிவு செய்துவிட்டு, அதற்கு கீழேயுள்ள பெட்டியில் 4000 வார்த்தைகளுக்குள் நமது புகாரை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் நமது புகாரை வெற்றிகரமாக‌ பதிவு செய்த உடன் நமக்கு ஒரு பதிவெண் தரப்படுகின்றது. இந்த பதிவெண் (உதாரணமாக எனது புகாரின் பதிவெண்: DARPG/E/2008/08229)மூலமாக நாம் பின்னர் நமது புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம்.

இப்படி ஒரு அமைப்பும், வசதியும் இருப்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. இதில் இன்றுதான் எனது புகாரை பதிவு செய்துள்ளேன். இதன் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தொடர்ந்து பார்த்து உங்களுக்கு கட்டாயம் தெரிவிப்பேன்.

நீங்களும் உங்கள் கண்ணில்படும் குற்றங்களை சும்மா பார்பதோடு நின்றுவிடாமல், உடனே இந்த இணையத்தின் மூலமாக உங்கள் புகாரை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புங்கள். புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் தரப்பட வேண்டும் என்பதால் நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்படும் என நம்பலாம்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்த ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் குவியும்போது, அந்த பிரச்சனையின் தாக்கம் கட்டாயம் இந்த புகார்களை கையாள்பவர்களுக்கு புரியலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி, நடவடிக்கை எடுக்க முற்படலாம். வாய்ப்பு கிடைக்கும் போது ஏன் நாம் சும்மாயிருக்க வேண்டும்?

எத்தனையோ மின்னஞ்சல்களை நாம் அனைவருக்கும் அனுப்பி மகிழ்கிறோம். இந்த இணையதளத்தை குறித்த விழிப்புணர்வையும் நாம் எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்கள் நண்பர்களுக்கு இச்செய்தியை தயவுசெய்து அனுப்புங்கள். சிறு துளிகள் தான் பெருவெள்ளமாகும். ஜெய் ஹிந்த். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க