Author: ஜோசப் பால்ராஜ்
•9:37 PM
சில காலங்களுக்கு முன்பு வரை கிராமப்புறங்களுக்கு ஏதாவது அவசர செய்திகளை அதிலும் குறிப்பாக மரண செய்திகளை சொல்ல மட்டுமே பயன்பட்டு வந்த தகவல் தொடர்பு முறைதான் தந்தி. சமீபகாலத்தில் செல்லுலார் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்த பின்னர் தந்தி சேவையின் தேவை மிக மிக குறைந்து போயிருந்தது.

ஆனால் சமீபத்தில் ஈழப் போரை நிறுத்தக் கோரி பல முறை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்(???), வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி என பலருக்கும் அடிக்கடி தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி தந்தி அனுப்பி வந்தது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. தான் மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தமிழக மக்கள் அனைவரையும் வேறு தந்தி அனுப்பி போராட்டம் நடத்தி அழிந்து வரும் தந்தி சேவையை காப்பாற்றவும் செய்தார் என்பதும் நாம் அறிந்த ஒன்று.

மின்னஞ்சல் சேவை மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகிய பின்னர் கடிதம் எழுதுவதும் மிக அரிதாகி கொண்டே இருந்த நிலையில் உயிர் போகும் பிரச்சனையாக இருந்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுவேன் என்ற தனது உறுதியான கொள்கையால் பல கடிதங்களும் எழுதி கடித சேவையையும் காப்பாற்றியுள்ளார்.

தபால் மற்றும் தந்தி சேவை ஆகியவை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அமைப்புகள் என்பதால் தொலை தொடர்பு அமைச்சகம், அழிந்து வரும் தபால் தந்தி சேவைகளை காப்பாற்ற கருணாநிதி அவர்கள் செய்துவரும் மாபெரும் சேவைகளைப் பாராட்டி ஒரு பெரிய பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தற்போது இவ்விழாவை நடத்த இயலாது என்பதால் தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை நீங்கள் காப்பாற்றுகிறேன் என எடுத்த முயற்சிகள் அவர்களை காப்பாற்றியதோ இல்லையோ, அழிந்து வரும் தபால் மற்றும் தந்தி முறைகளை காப்பாற்றியுள்ளது மிகவும் பாராட்டத் தக்கதே.

வாருங்கள் முதல்வரை பாராட்டுவோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:29 PM

நாடளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவது மட்டும் தான் வாக்காளர்களின் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக தேர்தல் நாளன்று நமது ஓட்டை பதிவு செய்கிறோம்?

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் என்று விளம்பரம் செய்தாலும் கூட தேர்தல் அன்று கிடைக்கும் விடுமுறையை வீட்டில் இருந்து அனுபவிக்கத்தான் மனமிருக்குமே தவிர ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போட மனம் வராது. இந்தியாவில் வெளிமாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள், வெளியூரில் வேலைப் பார்ப்பவர்கள் கூட தங்களுக்கு வாக்குரிமை இருக்கும் ஊரில் தேர்தல் நடைபெறும் நாளில் அங்கு சென்று ஓட்டளிக்க எத்தனைபேருக்கு மனம் வரும்?

துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் வெறும் இரண்டே நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்து செல்ல இருக்கிறார் என்றால் அதை நம்ப சிறிது சிரமமாகக் கூட இருக்கலாம். ஆனால் அபி அப்பா அதை செய்ய இருக்கிறார்.

அவர் எந்த கட்சிக்கு ஓட்டளித்தாலும், ஓட்டளிக்க வேண்டும், தனது ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக விமானக் கட்டணம் மட்டும் 13 ஆயிரம் இந்திய ரூபாய்கள் செலவு செய்து வர இருக்கிறார்.
ஓட்டுரிமையை நிலைநாட்ட என்றே தாய்நாட்டிற்கு வருகை தர இருக்கும் அபி அப்பா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊரில் இருக்கும் நண்பர்களே மறக்காமல் ஓட்டுப் போடுங்கள். உங்கள் உரிமையை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள். துபாயில் இருந்து வந்து ஓட்டளிக்க இருக்கும் அபி அப்பாவின் செயலை பார்த்து குறைந்தது நான்கு பேராவது தங்கள் கடமையைச் செய்தால் அது அவருக்கு நாம் சொல்லும் சிறந்த வாழ்த்தாக இருக்கும்.


எல்லாம் சரி நீ எப்டின்னு என்னையப் பார்த்து கட்டாயம் என் மாப்பி சஞ்சய் கேட்பாரு. எனக்கு இன்னும் ஓட்டுப் போடுற வயசு வரல மாப்ளன்னு சொன்னா நீ நம்ப மாட்ட. சரி உண்மையச் சொல்லிடுறேன், 2004 தேர்தல்ல இருந்தே என் பெயர் வாக்காளர் பட்டியல்ல இல்ல. 2004 தேர்தலப்போ சென்னையில இருந்து ஓட்டுப் போடுறதுக்காக எங்க ஊருக்குப் போயிட்டு ஓட்டுப் போட முடியாம வந்தேன், அதுக்கு அப்றம் நான் இங்க வந்துட்டதுனால என் பெயர் சேர்க்கப்படாமலே போயிருச்சு. அதுனால நான் வந்தாலும் ஓட்டுப் போட முடியாது. ( சஞ்செய்ய வம்பிழுத்தாச்சு.)

ஒழுங்கா பதிவு எழுதப் போறியா இல்லையான்னு என்னைய மிரட்டிய அன்புத் தங்கை தூயாவிற்கு நன்றிகள். நம்ம வலைப்பூவ அருமையா வடிவமைச்சதும் தூயா தான்.

ராயல் சல்யூட் அப்டிங்கிற வார்த்தைய தமிழ்படுத்த தெரியல.அதனால் அப்படியே ஆங்கில வார்த்தைய உபயோகிச்சுடேன், தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிக்கவும். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•1:36 AM
என் அன்புக்குறியவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறந்துள்ள இவ்வாண்டு எல்லா வளங்களையும் எல்லாருக்கும் அளிக்கட்டும்.

தீவிரவாதமும், ஜாதி, மத மோதல்களும் இல்லாத ஆண்டாய் அமையட்டும்.

உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருப்பதால் இவ்வாண்டு எல்லாருமே மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது. பணியில் நமது இருப்பை உறுதி செய்ய நம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு, பன் முகத் திறன் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். எனவே மேலும் மேலும் புதுத் திறமைகளை வளர்த்துக் கொண்டு நம்மை மெருகேற்றிக் கொள்ள இவ்வாண்டில் முயற்சிகளை மேற்கொள்வோம்.

பதிவுலகில் எந்த பதிவரசியலும், அநாகரீகமான தாக்குதல்களும் இல்லாத ஆண்டாகவும்,கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ளும் ஆண்டாகவும் இவ்வாண்டு அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பணிச்சுமைகளால் தொடந்து எழுத முடியாது மிக நீண்ட இடைவெளியை விட்டிருந்த நான் இவ்வாண்டில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். ஊக்கமளித்தவர்களுக்கும், தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தவர்களும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க