Author: ஜோசப் பால்ராஜ்
•11:19 AM
சிங்கையில் உள்ள பதிவர்கள் எல்லாம் சந்தித்து மிக நீண்ண்ண்ண்டடடடட நாட்கள் ஆகி விட்டன என்றும்(கடைசியா ஆகஸ்ட் 30 சந்திச்சோம்), மீண்டும் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்றும் பல பதிவர்களும், எங்கள் பின்னூட்ட புயல் தம்பி விஜய் ஆனந்தும் ரொம்ப ஆசைப்படுவதால் அடுத்த சந்திப்பு நடத்த சங்கம் தீர்மானித்துள்ளது.

நாள் : செப்டம்பர் 20 சனிக்கிழமை.

நேரம் : மாலை 3 மணி முதல் ........

இடம் : புக்கிட் கொம்பாக்


புக்கிட் கொம்பாக் மின் தொடர் வண்டி நிலையத்தின் அருகில் பதிவர்கள் அனைவரும் 3 மணிக்கு கூடவும். அங்கிருந்து விழா நடை பெறும் இடத்திற்கு ஊர்வலமாலக செல்ல இருக்கிறோம். இவ் ஊர்வலத்தை சிங்கை நாதன் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

இம்முறை பல முக்கிய விவாதங்களுடன் சில சந்தோஷ கொண்டாட்டங்களும் இடம் பெற உள்ளன. வழக்கம் போல் சிங்கை நாதன் அவர்கள் எல்லோருக்கும் அல்வா கொண்டுவருவார், கோவி.க அண்ணண் கொஞ்சம் பஜ்ஜியும், நிறைய சட்னியும் கொண்டுவருவார். ( வழக்கம் போல நாங்கல்லாம் சாப்பிட்டுட்டு வருவோம்.)

சிங்கையில் உங்களுக்கு தெரிந்த மற்ற பதிவர்களையும் அழைத்து வாருங்கள். இது பதிவர்களுக்கு மட்டுமான சந்திப்பு அல்ல. விருப்பம் உடைய வாசகப் பெருமக்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டு, உங்கள் அபிமான(???) பதிவர்களை நேரில் சந்தித்து, உரையாடி மகிழலாம்.

நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:

ஜோசப் பால்ராஜ் : +65 - 93372775
கோவி.கண்ணண் : +65 - 98767586
ஜெகதீசன் : +65 - 90026527
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:28 PM
பதிவர் உலகிற்கு புதுவரவான நான் முதன் முதலில் கலந்துகொண்ட முதல் பதிவர் சந்திப்பு.

கோவி.கண்ணண் அண்ணண் மிக வேகமாக நேற்று இரவே இச்சந்திப்பை குறித்து எழுதியிருந்தாலும், என்னையும் எழுத பணித்ததால் எனது பார்வையில் இச் சந்திப்பை விவரிக்கிறேன்.

ஏற்கனவே கோவை பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொள்ளாமலேயே என்னை பங்கெடுக்க வைத்த பெயர் குழப்பம் இங்கு நிகழ்ந்துவிடுமோ எனும் அஞ்சும் அளவுக்கு ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று ஜோ.. அதிலும் L L DASS எனும் பெயரில் பதிவு எழுதிவரும் ஜோசப் பெனடிக்ட் என்பவர், எனது முழுபெயரான ஜோசப் பெனடிக்ட் பால்ராஜில் முக்கால்வாசியை வைத்துக்கொண்டுள்ளார்.

சந்திப்பின் முக்கிய நிகழ்வுகளை அண்ணண் கோவி.கண்ணண் ஏற்கனவே அவரது பதிவில் சொல்லியுள்ளதால் அவர் சொல்லாததை சொல்கிறேன்.

நான் வலை பதிவராகக் காரணம் என்ன என்ற கேள்வியை கோவி.க அண்ணண் கேட்டு உரையாடலை ஆரம்பித்துவைத்தார். அதுக்கு அப்றம் சிற்றுண்டி உண்ண மட்டுமே அவர் வாயை திறந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிப் மீரான் அண்ணாச்சியின் வலைப்பூவை விகடன் மூலம் அறிந்துகொண்டு, அவரது எழுத்தின் மேல் ஆர்வம் கொண்டு பதிவு எழுத ஆரம்பித்த நான் தமிழ்மணத்தில் இணைந்தது மிகச் சமீபத்தில்தான். குசும்பன் எனது வகுப்புத்தோழர். (என் தொந்தரவு தாங்கலன்ன நீங்க தாக்குறதுக்கு ரெண்டு முகவரி கொடுத்துட்டேன்).

நாகர்கோயில் வழக்கில் கேட்க மிக இனிமையானத் தமிழில் என்னிடம் விவசாயம் குறித்த செய்திகளை கேட்டு உரையாடலை ஆரம்பித்த ஜோவுக்கு பதிலளிக்க ஆரம்பித்தவுடன், விவசாய கடன் தள்ளுபடியால் யாருக்கு நன்மை, எல்லா விவசாயிகளும் இதனால் பலனடைகின்றார்களா என்ற அருமையான் வினாவோடு முகவை மைந்தன் எங்கள் உரையாடலில் இணைந்தார். ஆர்வமாய் சென்ற அந்த உரையாடல் எனது உழவும் உழவர்களும் தொடரில் ஒரு பாகமாய் எழுதப்பட வேண்டிய ஒன்று.

ஜோவின் அழகுத்தமிழ் உச்சரிப்பு எனக்கு யாழ்பாணத் தமிழை நினைவுக்கு கொண்டுவந்தது என்பதை அவரிடம் வினவிய போது கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும், ஈழத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள வரலாறு பூர்வமான தொடர்பை அழகாய் விவரித்தார் ஜோ.

இதற்கிடையில் மலையேற இயலாதவர்களின் அழைப்பால் நாங்கள் இடமாற்றம் செய்த போது இறை நம்பிக்கை குறித்த ஒரு சிறு உரையாடல் எங்களுக்குள் நடந்தது.( இது கோவி.க அண்ணணுக்கு தெரியாது.)

சிரமம் வரும்போதுதான் நமக்கு இறை நம்பிக்கையே வருகின்றது, நமக்கு அடுத்துவரும் தலைமுறை நாம் சந்தித்த சிரமங்களை சந்திக்க வாய்பில்லை என்பதால் அவர்களுக்கு இறை நம்பிக்கை இருக்குமா இருக்காதா ? என்ற கேள்விக்கு நான் அடுத்த தலைமுறை இறைநம்பிக்கையில் பெற்றோர்களின் கட்டாயத்தால் ஈடுபாடு காட்டுமே தவிர மதம் குறித்த நம்பிக்கையில் சுதந்திர சிந்தனை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்று சொன்னேன். ஆனால் மற்றவர்கள் ஒரு அருமையான கருத்தை எடுத்துரைத்தார்கள், நன்கு வளர்ச்சியடைந்த அமெரிக்காவிலேயே, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பலரும் தீவிர பக்தியுள்ளவர்களாய் மாறினார்கள் என்ற மேற்கோளுடன் அவர்கள் சொல்லியது எனது கருத்தை சிரமம் அல்லது பயம் ஏற்படும் போதுதான் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும் என மாற்றிக்கொள்ளச் செய்தது.

ஒரு காலத்தில் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பெண்ணோ, பையனே பிற மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினால் கட்டாயம் பிற மதத்தை சேர்ந்தவர் மதம்மாறி கத்தோலிக்க மதத்தை தழுவ வேண்டும் என்று ஒரு கோட்பாடு இருந்ததாம். ஆனால் இப்போது அப்படியில்லை. மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதைத் தான் கத்தோலிக்க மதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என குறிப்பிட்டிருந்தோம்.

இடமாற்றம் செய்து எல்லோருடனும் அமர்ந்து விவாதிக்க ஆரம்பித்த பின்னர் பல சிறு சிறு விவாதங்கள் இடம்பெற்றன. அவற்றில் முக்கியமாய் நான் குறிப்பிட விரும்புவது பதிவராய் இல்லாமல் வாசகராய் மட்டும் இருந்தாலும் மிகுந்த ஆர்வமுடன் இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஆராய்ச்சியாளரான திரு.பாஸ்கரன் அவர்கள் கூறிய தகவல்கள்.

சிங்கப்பூரில் இந்திய மாணவர்களுக்கு உள்ள உயர் கல்வி வாய்ப்புகள், சிங்கப்பூரில் நம் மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறுவிதமான கல்வி உதவித்தொகைகள் தனி ஒரு பதிவு எழுதும் அளவுக்கு தகவல்களைத் தந்துள்ளார். அவர் கட்டாயம் பதிவெழுத வேண்டும், இது போன்ற உபயோகமானத் தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினோம். அப்படி அவரால் எழுத முடியாதபட்சத்தில் அவரிடம் இருந்து விவரங்களை சேகரித்து நாங்கள் எழுதுவோம் என தீர்மானித்தோம்.விரைவில் அது வெளிவரும்.

சிற்றுண்டி பரிமாறிய போது, திருநெல்வேலிக்கு அருகே உள்ள நாகர்கோயிலை சேர்ந்த ஜோவுக்கு கோவி.க அண்ணண் அல்வா தர மறந்துவிட்டார். உடனே திருநெல்வேலிக்கு அல்வா இல்லையா என ஜோ கதற ஆரம்பித்துவிட்டார். உட‌னே அவருக்கு அல்வா கொடுத்து, திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த‌ பெருமையை நான் பெற்றுக்கொண்டேன்.

அடுத்ததாக கோவி.கண்ணண் அண்ணண் தன் பதிவில் ஒரு சக பதிவர்க்கு உதவி செய்வது குறித்து எழுதியிருந்தார். நான் இது குறித்து விவரித்தபோது ஒருமித்த குரலில் எல்லோரும் உதவ முன்வந்தார்கள். நான் சீனா அய்யாவை இதுகுறித்து தொடர்பு கொண்ட போது தற்போதைய தேவைக்கு அதிகமாகவே நிதியை நல்ல உள்ளங்கள் அள்ளிக்கொடுத்துவிட்டதால் தற்போது நிதி தேவையில்லை என்று சொல்லி எங்களுக்கு சொல்லிவிட்டார். அந்த நல்ல காரியத்தில் எங்களால் பங்கு பெற முடியாமல் போய்விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கோ ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு கடைசி நேரத்தில் சந்திப்புக்கு எகிறி குதித்து வந்த பாரி.அரசு, வெண்பா புலவர் அகரம் அமுதாவுடன் ஆர்வமாய் இலக்கிய விவதத்தில் இறங்கினார்.

கோவி.கண்ணண் அவர்கள் தள்ளாத இந்த வயதில் தலைமை பெறுப்பை சுமந்துகொண்டு சிரமப்படுவதால் வேறு ஒருவரை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, தலைவர் தலைமை எனும் தலைப்பில் மிக அழகான விவாதம் ஆரம்பித்தது. உங்களுள் தலைவனாக விரும்புபவன் முதலில் ஊழியனாய் இருக்கட்டும் என்ற பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி நான் பேச, அதை அனைவரும் ஆதரித்ததால் இனி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிதான் உண்டு, எங்களுள் தலைவர், தலை போன்ற வார்த்தைகளை கூட பிரயோகிப்பதில்லை என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

ஆனால் முகவை மைந்தன் இந்த தீர்மானத்தை விடாபிடியாக பிடித்துக் கொண்டு சந்திப்பு முடிந்தவுடன் சாலமன் மீன் வாங்க சென்ற போது, மீனின் தலையைக்கூட தலை என்று சொல்ல மறுத்தது, எங்கள் தீர்மானங்களை நாங்கள் எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

சந்திப்பு நடந்த புல்வெளியில் இருந்து காபி குடிக்க செல்லும் வழியில் பாரி.அரசு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி மிக இளம்வயதிலேயே மரணத்தை தழுவியவர்கள் குறித்து கூறினார். இதுபற்றி மேலதிக தகவல்களை அவர் திரட்டிக்கொண்டு இருப்பதாகவும்,விரைவில் முழுத் தகவல்களுடன் பதிவிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

சந்திப்புக்கு இடத்தை மலைமேல் தேர்ந்தெடுத்து பல படிகள் ஏறிவரச் செய்ததற்காக கோவி.கண்ணண் அண்ணண் மீது சிறு வருத்தம் முதலில் இருந்தாலும், பாரி.அரசு கூறிய இளம் வயதினரின் மாரடைப்பு மரணங்களை கேள்விப்பட்டவுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியதின் அவசியம் புரிந்ததால் கோவி.க அண்ணாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன்.

ஏ ஃபார் ஆப்பிள் தொடரில் நீங்கள் அதிகம் பார்க்கும் தளங்கள் (சைட்) குறித்த தகவல்களை கொடுக்கச் சொன்னால், தான் பார்த்த பெண்களின் பட்டியலை கொடுத்த அண்ணண் புதுகை அப்துல்லாவை கண்டித்து ஒரு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

மேலும் யூத்ஃபுல் விகடனில் கலக்கும் அண்ணண் லக்கி லுக், எங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்திய பரிசல்காரர், எங்கள் மனம் கவர்ந்த லதானந் மாமா ஆகியோரை பாராட்டி தீர்மானம் நிறைவேறியது.

குசும்பனை கண்டித்த நிறைவேற வேண்டிய தீர்மானம் எனது தனிப்பட்ட வேண்டுகோளால் கைவிடப்பட்டது.

மலேசியத் தமிழ் பதிவர்கள் அவர்களுள் யார் பதிவிட்டாலும், மற்றவர்கள் கட்டாயம் பின்னூட்டமிட்டு ஆதரிப்பதால், நாமும் அதேபோல் ஒருவருக்கு ஒருவர் பின்னூட்ட ஆதரவு அளிப்பது என்ற தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேறியது.

இப்ப‌டி ப‌ல‌ உப‌யோக‌மான‌ அலுவ‌ல்க‌ளை த‌ன்ன‌க‌த்தே கொண்ட‌தாக‌ இச்ச‌ந்திப்பு நிக‌ழ்ந்த‌தால், குசும்பன் அமோதித்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் பதிவர்கள் அவர்கள் எந்த துறையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் தமிழ் மேல் அவர்கள் காட்டும் ஆர்வம் கட்டாயம் தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பது ஐயமில்லாத உண்மைதான்.

கேரட் அல்வாவும், பீட்ரூட் அல்வாவும் உண்டாதால் மட்டுமல்லாது சக பதிவர்களை சந்தித்தாலும் நெஞ்சு நிறைய இனிப்பு சுவை நிரம்பியிருந்தது என்றால் அது மிகையாகாது.
Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க