Author: ஜோசப் பால்ராஜ்
•2:33 PM
இது பொம்பளைங்க சமாச்சாரம்..பெண்ணியவாதிகள் கவனிக்க.. என்ற தலைப்பில் என் அருமை நண்பர் சஞ்சய் ஒரு பதிவிட்டிருந்தார். எதிர்காலத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக பாடுபட விரும்பும் அவரது தோழி கூறிய திட்டமாக பெண்களின் மாதாந்திர தேவையான சானிடரி நாப்கினை ஒரு ரூபாய்க்கு விநியோகிக்கும் திட்டத்தை எழுதியிருந்தார். முதலில் சஞ்சய்யின் தோழி இப்படி ஒரு சிந்தனை கொண்டவராய் இருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகப்பெரும் நிறுவனங்கள் சானிடரி நாப்கினை தயாரிக்க உபயோகிக்கும் இயந்திரங்களின் விலை 75 லட்சங்களில் இருந்து 2.5கோடிகள் வரை இருக்கும். பெரும் நிறுவனங்கள் தங்களது விளம்பர செலவு முதல், விநியோக செலவு வரை எல்லாவற்றையும் பொருளின் விலையில் சேர்ப்பதால் மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை. இந்த விலை கிராமப்புற ஏழை பெண்களுக்கு இன்னும் எட்டாத அளவில் இருப்பதால் அவர்கள் இதை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க 1 ரூபாய்க்கு விற்பது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழலாம்.

கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர் மிகக் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரித்து, அதை கொண்டு நாப்கின் தயாரிக்கும் செய்முறைகளை கற்றுத்தந்து விற்பனை செய்து வருகிறார். இதற்கு மூன்று சிறு இயந்திரங்கள் தேவை. இயந்திரங்களின் விலை, அவற்றை நிறுவுதல் மற்றும் பயிற்சி ஆக மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இவ்வியந்திரங்களை நிறுவி தயாரிப்பு வேலைகளில் ஈடுபட தேவையான இடம் கூட ரொம்ப அதிகமில்லை. 16 அடி நீளம் 16 அடி அகலம் கொண்ட ஒரு கூடம் போதும். 4 வேலையாட்கள் போதும். ஒரு நாளில் 8 நாப்கின்கள் கொண்ட 180 பாக்கெட்டுகள் தயாரிக்க முடியும்.

இந்த இயந்திரங்களை பயன்படுத்தி 8 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் தயாரிக்க 8 ரூபாய் மட்டுமே செலவாகின்றது. ஒரு பாக்கெட் 12.50 க்கு விற்றால் சுயஉதவிக்குழுவினர் லாபகரமாக இத்தொழிலைச் செய்யலாம். மேலும் ஒரு நாப்கின் 1.50க்கு கிடைக்கும்.

இதை கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சியும் அளித்தால் அவர்கள் சுலபமாக தயாரித்து தங்கள் பகுதி கிராமங்களில் நேரடியாக விற்றுவிடுவார்கள். இதனால் விளம்பர செலவு,விநியோக செலவு, சில்லரை வர்த்தக லாபம் போன்றவை தவிர்க்கப்படும்.

நண்பர் சஞ்சய் தனது பதிவில் இலவசமாக அரசே பெண்களுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த இலவசக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏன் எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எல்லாவற்றையும் இலவசமாகவே பெற வேண்டும்?

தற்போது ஏறத்தாழ எல்லா கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லா இடங்களிலும் அவர்கள் வெற்றிகரமாக செயல்படுவதில்லை. 5 கிராமத்துக்கு ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்குள்ள சுய உதவிக்குழுவுக்கு பயிற்சியளித்து இவ்வியந்திரங்களை வாங்க வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்களே வெற்றிகரமாக இதை செய்ய மாட்டார்களா? அவர்கள் தயாரிக்கும் நாப்கின்களை அடுத்த ஊர்களில் உள்ள குழுக்களின் மூலமாக விற்கலாம். நேரடியாக விற்கும் போது ஒரு பாக்கெட் 12.50 க்கு விற்றால் பிற ஊர்களில் உள்ள குழுக்களுக்கு விற்கும் போது 11 ரூபாய்க்கு விற்றால் அவர்கள் 1.50 லாபம் சம்பாதித்துக்கொள்ளலாம்.

வேண்டுமானால் அரசாங்கம் இந்த இயந்திரங்கள் வாங்க அளிக்கும் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மானியமாக அளிக்கலாம். இதனால் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் சுமை குறையும், அதன் மூலம் அவர்கள் இன்னும் குறைந்த விலையில் விற்பனை செய்ய இயலும்.

இந்த இயந்திரங்களின் பயன்பாடு , இதைக் கொண்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கத் தேவையான திட்ட அறிக்கை(Project Report) எல்லாம் கீழேயுள்ள இணையதளத்தில் மிகத் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

திட்ட விளக்கம்

திட்ட அறிக்கை

இந்த இயந்திரங்களை கண்டுபிடித்த திரு. முருகானந்தம் அவர்களை தொடர்பு கொள்ள.

Jayaashree Industries
SF No. 577 KNG Pudur Road
Somayampalaym (Po)
Coimbatore - 641 108.
Mobile; - 92831 55128, 98422 15984


அவரது மின்னஞ்சல் முகவரி: muruganantham_in@yahoo.com

சஞ்சயின் தோழி போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களும், எதையாச்சும் செய்யனும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இதையாச்சும் செய்யலாம். இதில் நாம் ஒன்றும் நம் கை காசை செலவழிக்க வேண்டியதில்லை. நமக்கு தெரிந்த கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இதை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்து தொழிலை ஆரம்பிக்கச் செய்யலாம்.

மிகக் குறைந்த விலையில் கிராப்புறப் பெண்களுக்கு சுகாதாரமான நாப்கின்கள் கிடைப்பது, கிராப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் ஒரு நல்ல தொழில் வாய்ப்பு கிடைப்பது என பல நன்மைகளை கொண்ட இத்திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த முன்வரவேண்டும். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க