Author: ஜோசப் பால்ராஜ்
•10:19 AM
இன்றைய தினமலர் செய்தியில் படித்த ஒரு செய்தி என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ரயில் குண்டுவெடிப்பால் டாக்டரின் 'ஸ்பீக்கர்' அவுட்: யோகா, இயற்கை வைத்தியத்தால் கிடைத்தது பலன்.

தேவையேயில்லாமல் ஆங்கிலச் சொற்களை கலந்து தருவதில் தினமலர் தான் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கை. ஒரு தமிழ் தினசரியில் ஆங்கில வார்த்தைகளை எதற்கு கலக்க வேண்டும் ?

சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும், அதற்கான தமிழ் வார்த்தையே பலருக்கு புரியாது என்று சொல்லும் நிலை இன்று பல வார்த்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆனால் காது கேட்க்கும் திறனை இழந்தார், அல்லது காது செவிடாகிவிட்டது என்பது போன்ற வார்த்தைகள் கூடவா மக்களுக்கு புரியாமல் போகும்?

சரி ஆங்கிலத்தை கலந்ததுதான் கலந்தீர்கள், அதுவாவது சரியா ?
ஸ்பீக்கர் என்பது ஒலி பெருக்கி, ஒலியை பரப்ப பயன்படும் ஒரு வெளிப்படுத்தும் கருவி (Output Device). அது உள்வாங்கியல்ல ( Input Device). ஆனால் செவி என்பது ஒலியை உள்வாங்க பயன்படும் ஒரு உடல் உறுப்பு. எப்படி ஒரு வெளிப்படுத்தும் கருவியை போய் ஒரு உள்வாங்கும் உறுப்புக்கு பதிலாக உபயோகிக்கலாம்?

பல திரைப்படங்களில் நகைச்சுவைக்காக செவியை ஸ்பீக்கர் எனச் சொல்லியிருக்கலாம். அதற்காக அதுதான் சரியான் வார்த்தை என்பதுபோல் ஒரு தினசரி பத்திரிக்கை நடந்துகொள்வது என்ன நியாயம்?

எனது சிறுவயதில் நன்கு தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் தாத்தா , என்னையும், என் சகோதரனையும் தினசி பத்திரிக்கையை சத்தமாக வாசிக்க சொல்லுவார். இதை பல பெரியவர்கள் செய்வார்கள். இனியெல்லாம் பிள்ளைகள் தமிழ் கற்க தமிழ் தினசரிகளை அவர்கள் கண்களிலேயே காட்டாமல் வைத்திருப்பதுதான் நல்லது.

நன்கு படித்த, அயல்நாடுகளில் வேலைபார்க்கும் பல வலை பதிவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்றுகூட ஏன் இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு இல்லை ? இது அப்பட்டமான மொழிக்கொலை. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•6:34 PM
நாகப்பட்டிணம் ஆற்காடுபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நாகை ஆற்காடுபுரத்திலிருந்து, மீன் பிடிப்பதற்காக வாசகன், நாராயணசாமி மற்றும் முரளி ஆகியோர் தான் இலங்கை படையினரால் சுடப்பட்டு முரளி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வாசகன், நாராயண சாமி இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

செத்தது தமிழர்கள் தானே? இவர்கள் என்ன தீவிரவாதிகளா? இவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி தானே? என்ன செய்யப்போகின்றீர்கள் இதற்கும் ?

இங்கு சாகும் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட‌ ந‌ம‌து முத‌ல்வ‌ருக்கு எங்கே நேர‌ம் இருக்கும்? அவ‌ருக்கு தான் ப‌ல‌ க‌வ‌லைக‌ள் இருக்குமே? இதை கேட்டால் அவ‌ர் என்ன‌ துப்பாக்கியை தூக்கிக்கொண்டா போய் ச‌ண்டை போட‌ முடியும் என்று அண்ண‌ண் ல‌க்கிலுக், அபி அப்பா போன்றோர் கேட்பார்க‌ள்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதே சட்ட விரோதம் என்று அறிவிக்கச்சொல்லுங்கள். கடலில் இறங்கினால் நாங்களே சுடுவோம் என அறிவியுங்கள். செத்தாலும் இந்தியப் படையினரால் சுடப்பட்டு இறந்தோம் என்ற பெருமையாவது கிடைக்கட்டும் எங்கள் இந்திய மீனவர்களுக்கு.

ஏன் நம் நாட்டுக்கு கீழே கையகலமே உள்ள ஒரு நாட்டின் கடற்படையால் சுடப்பட்டு சாகணும்?
தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்தே பிரித்துவிட்டார்களா என்ன ? த‌மிழ‌ன் செத்தால் இந்தியா க‌ண்டுகொள்ளாதா?

ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்தின் தமிழர்களை இலங்கைப்படை கொல்வதில் இருந்து காப்பாற்றமுடியவில்லை என்றால் இவர்களால் நமக்கு என்ன பயன்?

இத்தனை தமிழர்களை கொன்ற சிங்கள கடற்படையைப் பார்த்து இதுவரை ஒரு எச்சரிக்கை குண்டையாவது சுட்டிருக்கின்றதா பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவின் கடற்படை?

இனியும் எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டு இருக்காது என்று சட்டசபையில் அறிவித்த முதல்வர் இப்போது என்ன செய்யப்போகின்றார்? கடிதம் எழுதுவதைத் தவிர ?

இதுவரை எத்தனை மீனவர்களை கொன்றுள்ளது அந்த கேடுகெட்ட சிங்களப்படை? இதுவரை எத்தனை கடிதம் எழுதியுள்ளீர்கள்? அத்தனை கடிதங்களுக்கும் ஒரு பதில் கடிதாமாவது வந்துள்ளதா?

கலைஞரின் கடிதங்களாவது பிரதமரை சென்றடைகின்றதா? இல்லை அத்தனையும் குப்பை கூடைக்களுக்குத்தான் செல்கின்றதா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:29 PM
உழவும் உழவர்களும் - 1
உழவும் உழவர்களும் - 2

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டோம்என் பார்க்கும் நிலை.


முந்தைய இரு பாகங்களையும் படித்துவிட்டு கருத்துகளை எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.

சரி வாருங்கள், நாம் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகங்களினால் நடத்தப்படும் நேரடிக் கொள்முதல் நிலையங்களை பார்ப்போம்.

அறுவடை நேரங்களில் எல்லா ஊர்களிலும் தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பார்கள்.

நமது நெல் மூட்டைகளை எடுத்துக்கொண்டு இங்கு போய் காத்திருக்க வேண்டும்.
இங்கு நமது நெல்லை விற்க, நெல்லில் கட்டாயம் 18% க்கு மேல் ஈரப்பதம் இருக்க கூடாது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கட்டாயம் காயவைத்துக்கொண்டுதான் வரவேண்டும்.

ஈரப்பதம் எல்லாம் சரியாக இருந்து எடை போட வருகின்றாகள் அங்கு நடக்கும் ஒரு அநியாய கொள்ளை.இவர்களும் தங்கள் தராசில் தில்லுமுல்லு செய்து ஒரு மூட்டைக்கு 2 கிலோ வரை அதிகமாக வைத்து எடுப்பார்கள்.

இப்படி நம்மிடம் அதிகமாக எடுக்கும் நெல்லை எல்லாம் மூட்டையை தைக்கும் முன்னர் அளந்து எடுத்து, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் பிரித்துக் கொள்வார்கள். இது முதல் கொள்ளை.

இதை தடுக்க அரசு சென்ற ஆண்டு மின் தராசுகளை தந்தும்கூட பல இடங்களில் இன்னும் அதை உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை. சாதாரண தராசுகளில்தான் எடை போடுகின்றார்கள். மின் தராசுகளில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பதால்தான் இப்படி.

அடுத்து, நெல்லை எடுத்துக்கொண்டபின் காசு கொடுக்கும் இடத்தில் முழுபணத்தையும் தராமல் கட்டாயமாக மூட்டைக்கு 15 ரூபாய் எடுத்துக்கொண்டுதான் தருவார்கள்.

இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள், கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து, கிடங்குகளுக்கு நெல்லை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், சிந்தும் நெல்லுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும், அது இது என்று ஆயிரம் காரணம் சொல்லுவார்கள்.

முன்பு நெல்கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டையின் எடை 71கிலோ. ஒரு 71கிலோ மூட்டைக்கு 15ரூபாய் கொள்ளையடிப்பார்கள். தற்போது ஏற்றி இறக்கும் வசதிக்காக ஒரு மூட்டைக்கு 35 கிலோ என எடை வைத்து எடுக்கின்றார்கள். தற்போது ஒரு 35கிலோ மூட்டைக்கு 8ரூபாயில் இருந்து 10ரூபாய் வரை கொள்ளை.

ஒரு ஏக்கர் விவசாயம் செய்த ஒரு உழவருக்கு ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் ( ஒரு மூட்டைக்கு 60 கிலோ) விளைகின்றது எனக்கொண்டால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இவர்கள் ஒரு மூட்டைக்கு நியாயமாக வைக்க வேண்டிய 36 கிலோ என்ற கணக்கில் வைத்தால் நம்மவருக்கு 75 மூட்டைகள் வரும். ஆனால் மூட்டைக்கு இரண்டு கிலோ கொள்ளையடிக்கப்படுவதால் நம்மவருக்கு கிடைப்பதோ 71 மூட்டைகள் தான்.



மேலும் இந்த 71 மூட்டைகளுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் வீதம் எடுத்துக்கொண்டாலும் நம்மவர் இழப்பது 710 ரூபாய்.

தற்போது அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள விலை குவிண்டாலுக்கு 1000 ரூபாய். இந்த விலையையே நம் கணக்கீட்டிற்கு பயன்படுத்தினால் நேரடி கொள்முதல் நிலையத்தில் நம்மவருக்கு ஒரு மூட்டைக்கு 350ரூபாய் கிடைக்கும் .

சரி நம்மவர் 4 மூட்டைகளை எடைபோடுவதில் நடந்த கொள்ளையில் இழந்தாரல்லவா? அதற்கு 4 X 350 = 1400.

ஆக ஒரு ஏக்கருக்கு நம்மவர் இழப்பது 2110.

இத்தொடரின் முதல் பாகத்தில் நாம் பார்த்தபடி ஒரு ஏக்கருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 10800 ரூபாய் லாபத்தில் இப்படி 2110 ரூபாயை இழந்துவிட்டால் இவர்களுக்கு மிஞ்சுவது 8690 மட்டுமே.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள், அது உண்மைதான் என்பது இப்போதாவது புரியும் என்று நினைக்கின்றேன்.

ஆக இது ஒழுங்காக தண்ணீரெல்லாம் கிடைத்து, இயற்கை சாதகமாக இருந்து, நன்கு விளைந்தால் மட்டும் கிடைக்கும் லாபம் இது.

இயற்கை சீற்றம், மற்றும் காவிரி நதி நீர் பிரச்சனை போன்றவை ஏற்படும் காலங்களில் ??????

அடுத்த பாகத்தில் தொடர்கின்றேன். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•2:00 AM

சென்னை, கொருக்குப்பேட்டை குப்பை மேடு.
மலைமலையாகக் குவிந்திருக்கிறது குப்பைகள். தீயிடப்பட்டு புகை கக்கிக்கொண்டு இருக்கும் குப்பை மேடுகளில் சின்னதொரு உறுமலோடு ஏறி இறங்கி வருகிறது மாநகராட்சி லாரிகள்.

தூரத்தில் லாரியைப் பார்த்ததும் முதுகில் சாக்குப்பையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் சிறுவர்கள். குப்பையைக் குறிவைத்து சிறுவர்களை முந்தி ஓடி வருகிறது தெரு நாய்கள். அவற்றை விரட்டி விட்டு பிஸ்கட் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், டின்கள் என விதவிதமான குப்பைகளைப் பொறுக்கி எடுக்க ஆரம்பிக்கிறார்கள் சிறுவர்கள். இது சென்னையின் ஒரு பகுதி வாழ்க்கை!

''அண்ணாத்தே... ஸ்கூல் போய்ப் படிக்கிற அளவுக்கு அப்பாகிட்ட துட்டு கிடையாது. அப்பா இங்கதான் எங்கேயாவது பொறுக்கினு இருக்கும். தெனம் ரெண்டு டைமாவது இப்படி குப்பை பொறுக்குனாதான் வீட்டுல ரெண்டு வேளைக்குச் சோறு திங்க முடியும். வூட்டுக்குப் போனா இருமல் வந்துகினேஇருக்கும். குப்பையிலே புரண்டுகிட்டு இருக்குறதால நைட்டு முழுக்கத் தூங்க முடியாது. நைநைன்னு அரிச்சுக்கிட்டே இருக்கும். ஒரு நாளைக்கு கொறஞ்சது முப்பது ரூபாயாவது கிடைக்கும். அத னால அரிப்பைப் பொறுத்துக் குவேன்''

இது ஆங்கே குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனின் குரல். இதுபோல் எத்தனையோ குரல்கள். இந்த வார விகடனில் படியுங்கள். மனசு வெறுத்து போகுது இதையெல்லாம் படித்து விட்டு.

இப்படியே விடலாமா? படித்துவிட்டு அதை வைத்து ஒரு பதிவும் போட்டுவிட்டால் போதுமா? நான் விகடனில் இந்த கட்டுரைக்கு எழுதிய கருத்தையே இங்கும் கொடுக்கின்றேன்.

குப்பையில் உழலும் இந்த சிறுவர்களின் குடும்பங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தீர்களேயானால், அவர்கள் பெற்றோர் இல்லாதவர்களாகவோ, அல்லது பெற்றோர் உழைக்க இயலாத உடல்நிலையில் உள்ளவர்களாகவோ, அல்லது உழைக்க உடல் வலு இருந்தும், உழைக்க மனமில்லா குடிகாரர்களாகவோ இருப்பார்கள்.

எத்தனை நாட்களுக்கு இப்படியே நாம் படித்துவிட்டு மனம் வருந்துவது போவது? இதற்கு தீர்வுதான் என்ன? எனக்கு தோன்றும் ஒரு யோசனையை இங்கு வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

பெற்றோர் இல்லாதவர்கள், பெற்றோர் இருந்தும் குடிகாரர்களாகவோ இருக்கும் குழந்தைகளை ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாக, தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.

குழந்தைகளை குப்பை பொறுக்கவைத்து குடிக்கும் அந்த மிருகங்கள் எல்லாம் எப்படி போனால் என்ன ? முடிந்தால் உழைத்து உண்ணட்டும், இல்லையேல் போய் குப்பை பொறுக்கட்டும்.

உழைக்கும் நிலையில் உடல்வலு இல்லாமல் குழந்தைகளின் உழைப்பை நம்பி வாழும் நிலையில் உள்ள பெற்றோர்களையும் , அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து காப்பாற்ற வழிசெய்ய வேண்டும்.

ஏதவது ஒரு பகுதியில் நாம் எல்லாரும் சேர்ந்து செய்தால் நம்மைப் போல நல்ல உள்ளங்கள் கட்டாயம் இதை பிற பகுதிகளில் செய்ய முன்வருவார்கள்.ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும். என்ன சொல்கின்றீர்கள் ?

ஏதாவது செய்யலாம், எத்தனைகாலம் தான் இப்படியே படித்துவிட்டோ அல்லது ஒரு பதிவு எழுதிவிட்டு சொல்வதோ தீர்வாகாது. நாம் ஒரு இயக்கமாக சேர்ந்து செய்ய வேண்டும் என்று நினைத்தால் முடியாத என்ன ?

உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.

* இந்த பதிவை எழுத தூண்டியது ஆனந்த விகடன் 16-07-2008 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை. Udanz

Author: ஜோசப் பால்ராஜ்
•1:17 AM
உழவும் உழவர்களும் - 1

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ ல்அவர்.


அறுவடை முடிந்தது, விளைச்சல் கையில் இருக்கின்றது. இனி என்ன விற்று காசு பார்க்க வேண்டியது தானே என தான் எல்லோரும் நினைப்பார்க‌ள். ஆனால் உழைக்க‌த் தெரிந்த‌ எங்க‌ள் உழ‌வ‌ர்க‌ளுக்கு பிழைக்க‌ அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது. இனியும் ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளை ச‌ந்தித்துதான் காசு பார்க்க‌ வேண்டும். அவை என்ன‌வென்று பார்ப்போமா...

தற்காலங்களில் கூலியாட்களின் பற்றாகுறையால் அறுவடை பெரும்பாலும் இயந்திரங்களின் மூலமாகத்தான் நடைபெறுகின்றது.

ஆட்கள் மூலம் அறுவடை செய்தால் கையால் அறுத்து கதிர்களை கட்டாக கட்டி, வயலுக்கு வெளியே அமைக்கப்படும் களங்களுக்கு அவற்றை எடுத்து வந்து, பின் அடித்து நெல்லை பிரிப்பார்கள். இதில் நெல் களத்தில் இருப்பதால் நேரடியாக வண்டி வைத்து ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம்.

ஆனால் இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்யும் போது, அவை வயலிலேயே அறுத்து, அடித்து நெல்லை கொடுத்துவிடும். இவற்றை மூட்டைகட்டி அங்கிருந்து வண்டிகளுக்கு எடுத்துவந்து தர தனியாக கூலியாட்களை நியமிக்க வேண்டும்.
இப்படி கஷ்டப்பட்டு கொண்டுவரும் நெல்லை விற்க, இரண்டு வழிகள் தான் எங்களுக்கு. ஒன்று தனியார் நெல் வியாபாரிகளிடம் விற்பது, அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பது.

தனியார் வியாபாரிகள் என்றால் அவர்கள் எங்களது வீட்டிலேயே வந்து எடை போட்டு நெல்லை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இவர்களிடமிருந்து உடனடியாக பணம் கிடைக்காது. ஒரே நேரத்தில் மொத்தப்பணமும் கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கப்போட்டுத்தான் தருவார்கள்.

இதுமட்டுமா, கட்டாயம் இவர்கள் எடைபோட பயன்படுத்தும் தராசுகள் சரியான அளவை காட்டாது. எடையில் தில்லுமுல்லு செய்துதான் இவர்கள் நெல்லை வாங்குவார்கள். கேட்டால் நெல்லை ஓரிட‌த்தில் இருந்து ம‌ற்றொரு இட‌த்திற்கு கொண்டுசெல்லும் போது சிந்துவ‌து,சித‌றுவ‌து இவ‌ற்றால் ஏற்ப‌டும் இழ‌ப்பை ச‌ரிக‌ட்ட‌த்தான் இப்ப‌டி செய்வ‌தாக‌ நியாய‌ம் வேறு பேசுவார்க‌ள்.

த‌னியார் வியாபாரிக‌ள் ஒரு மூட்டை 61கிலோ என்ற‌ அள‌வில் பிடிப்பார்க‌ள் ( நெல் எடை 60கிலோ + சாக்கு எடை 1கிலோ). ஆனால் அவ‌ர்க‌ள் த‌ராசில் 61கிலோ காட்டிய‌ மூட்டையை ஒரு ந‌ல்ல‌ த‌ராசில் வைத்துப்பார்த்தால் குறைந்த‌து 63 கிலோவாவது இருக்கும்.

குறுவை சாகுபடி அறுவடை சமயங்களில் பெரும்பாலும் மழை வந்துவிடும். மழை இல்லாவிட்டாலும் பனியால் குறுவை நெல்லில் சற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் நெல்லில் ஈரம் அதிகமாக இருக்கின்றது என்று கூறி காயவைக்க சொல்வார்கள். அல்லது எடை அதிகமாக வைத்து வாங்கிக்கொள்கிறோம் என்று அதிலும் நல்ல லாபம் பார்ப்பார்கள் எங்கள் வியாபாரிகள்.

இப்ப‌டி எல்லாம் இவ‌ர்க‌ளிட‌ம் விற்க‌ வேண்டுமா? ஏன் அர‌சாங்க‌ நேர‌டி நெல் கொள்முத‌ல் நிலைய‌ங்க‌ளில் விற்க‌ கூடாது என‌ தோண‌லாம்.

அரசு கொள்முதல் நிலையங்களுக்கு எல்லாம் கொள்ளை நிலையங்கள் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்.
அங்கு நடக்கும் அநியாயங்கள் அத்தனை. அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.. Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:20 PM
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.


இது உழவனின் வாழ்க்கையை அலசும் தொடர்
வயலுக்குள்ளும், வெளியேயும் எங்கள் சொந்தங்கள் சந்திக்கும் சவால்களை உங்களுக்கு சொல்லவே இந்த தொடர்.

எனக்கு தெரிந்த பயிர்களான நெல், கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்வது குறித்தும், அதில் ஆரம்பம் முதல், கடைசிவரை அதாவது விதைப்பில் இருந்து, அறுவடை செய்து பணமாக்குவது வரை விவசாயி என்ன பாடுபடுகின்றான் என்பது குறித்தும் விளக்கப்போவதுதான் இந்த தொடர்.

கரும்பு சாறும், இந்திய பொருளாதாரமும் என்ற எனது பதிவிற்கு பின்னூட்டமிட்ட என் நண்பர் அவர்களின் கேள்விகளுக்கு நான் அளித்த பதிலின்படி இத்தொடரை எழுதுகின்றேன்.

என்னைப்போல் விவசாயகுடும்பத்தை சேர்ந்த பல நண்பர்களும் பரந்துவிரிந்த இவ் வலையுலகில் இருப்பீர்கள். என் தொடரை படித்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள்.
விவசாயம் என்பதை வெளியில் இருந்து மட்டுமே பார்த்தவர்கள் என்னோடு வாருங்கள், எங்கள் வயல்வெளிகளை சற்று பார்த்துவிட்டு வருவோம்.

முதலில் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நெல் சாகுபடியை குறித்து பார்ப்போம்.

வழக்கமாக ஜீன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் அந்த வருடம் இரு போகம் நெல் விளையும். போதுமான அளவு நீர் இல்லாமல், அணை திறப்பு தள்ளிபோனால் ஒரு போகம் மட்டும்தான் நெல் விளைவிக்க முடியும்.

சரி, நடவு முதல் அறுவடை வரை ஆகும் செலவுகள் என்னவென்று பார்ப்போமா?

உழவு செய்ய உழவுஇயந்திர (Tractor) கூலி ஒரு ஏக்கருக்கு ஒரு உழவுக்கு 300 ரூபாய். கட்டாயம் 3 உழவு செய்துதான் நடவு செய்யமுடியும்,ஆக உழவு கூலி மட்டும் 900ரூபாய்.

நாற்றங்காலில் இருந்து நாற்று பறித்து நடவு வயலில் வைக்க ஒரு ஏக்கருக்கு 700 ரூபாய் கூலி. நாற்றங்காலில் இருந்து நடவு வயல் தூரமா இருந்தால் இது இன்னும் அதிகமாகும்.

நடவுக்கு ஒரு ஏக்கருக்கு கூலி 500 ரூபாய்.

அடியுரம் மற்றும் நடவுசெய்த உடன் இடும் மேலுரம் ஒரு ஏக்கருக்கு 4000ரூபாய். பூச்சி மருந்து ஒரு 1500 லிருந்து 2000 வரை. (மீண்டும் மீண்டும் பூச்சித்தாக்குதல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்). உர‌ம் ம‌ற்றும் பூச்சிம‌ருந்து அடிக்க‌ ஆண் ஆளுக்கு கூலி 100ரூபாய். (காலையிலிருந்து ம‌திய‌ம் வ‌ரை ம‌ட்டுமே வேலை).தெளிக்கும் கூலி 500 என்று வைத்துக்கொள்வோம்.

களை பறிக்க ஒரு ஏக்கருக்கு எப்படியும் 20 ஆட்கள் தேவைப்படும். ஒரு பெண் ஆள் கூலி 40ரூபாய். ஆக களைபறிக்க மட்டும் 800ரூபாய். ஆக‌ க‌ளைப‌றிப்பு வ‌ரை ஒரு ஏக்க‌ருக்கு ஆகும் செல‌வு ம‌ட்டும் 8900 ஆகும்.

இத‌ற்குப்பின் அறுவ‌டை, அறுவ‌டைக்கு கூலி எப்போதும் ப‌ண‌மாக‌ கொடுப்ப‌து கிடையாது. ஆட்க‌ள் அறுவ‌டை செய்தால் நெல்லாக‌த்தான் கூலி கொடுப்போம். த‌ற்போது இய‌ந்திர‌ங்க‌ளை கொண்டு அறுவ‌டை செய்ய‌வ‌தால் ஏக்க‌ருக்கு 1800 ( இது க‌ட‌ந்த‌ ஆண்டு நில‌வ‌ர‌ம், டீச‌ல் விலை உய‌ர்வால் இவ்வாண்டு 2300 முத‌ல் 2500 இருக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகின்ற‌து.) .

ஆக இயந்திர அறுவடை என்று வைத்துக்கொண்டால் கூட 11700 ரூபாய் ஆகும்.

இது தவிர வயலை உழவு செய்யும் முன்னர் ஆகும் முன்னற்பாடுகளுக்கு ஆகும் செலவுகளையும், அறுவடைக்கு பின்னர் ஆகும் சில செலவுகளையும் இந்த செலவு கணக்கில் சேர்க்கவில்லை.

சரி இதுவரை செலவுகளை பார்த்தோம். இனி வரவு என்னவென்பதை பார்ப்போம்.

ஒரு வயல் நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 45 மூட்டைகள் விளைச்சல் வரும். மிக நன்றாக விளைந்தால் 48 முதல் 50 மூட்டைகள் வரை கிடைக்கும்.
சராசரியாக 45 மூட்டைகள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மூட்டை சாதாரண ரக நெல் 500ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு ஏக்கருக்கு 22500 ரூபாய் கிடைக்கும்.

நான் இங்கே கொடுத்துள்ளது குறுவை எனப்படும் குறைந்த கால பயிருக்கு ஆகும் செலவுகள். குறுவை பருவத்தில் பொன்னி போன்ற அதி சன்னரக நெல்கள் பயிரிடப்படுவதில்லை. அவை சம்பா சாகுபடியில்தான் பயிரிடப்படும்.
சம்பா குறித்தும் தொடரின் பின் பகுதியில் விவரிக்கின்றேன்.

ஆகா , ஒரு ஏக்கருக்கு 10800 ரூபாய் லாபம் கிடைக்கின்றதே என்று ஆச்சரியப்பட வேண்டாம்.

உல‌க‌த்திலேயே, த‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்யும் பொருளுக்கு தாங்க‌ளே விலை நிர்ண‌யிக்க‌ முடியாத‌ ஒரே உற்ப‌த்தியாள‌ர் எங்க‌ள் உழவர்கள் ம‌ட்டும்தான்.

நெல்லை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் ஆகட்டும் அல்லது அரசாங்கத்தின் நேரடி நெல் கொள்(ளை)முதல் நிலையங்களாகட்டும் எல்லாம் எங்களை எப்படி அடிக்கின்றன என்றும், நெல்லை விற்று காசாக்குவதில் நாங்கள் படும் சிரமங்கள் என்ன என்றும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•10:21 AM
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 70 தமிழ் படங்களுக்கு ஒரு படத்திற்கு 7 லட்சம் வீதம் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மானியமாக அளிக்கப்படுகின்றது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏன் திரைத்துறையினருக்கு மட்டும் இத்தனை சலுகைகளை வாரிவாரி வழங்க வேண்டும் என்று கேட்டால், அதில் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றார்கள் என்று பதில் சொல்லும் அண்ணண் லக்கி லுக், அபி அப்பா போன்றோர், ஏற்கனவே எடுத்து வெளியிடப்பட்ட இந்த படங்களுக்கு இன்று சலுகை அளிப்பதால் இது தயாரிப்பாளரை மட்டும் சென்றடையுமா அல்லது அதில் பணிபுரிந்த அனைத்து சாதரண ஊழியர்களுக்கு கொடுக்கப்படுமா என்று விளக்கினால் நல்லது.

இன்னும் பள்ளிகளே இல்லாத எத்தனை கிராமங்கள் உள்ளன? பெயரளவில் பள்ளி இருந்தும் அதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் இல்லாமலும் எத்தனை பள்ளிகள் உள்ளன?
வெறும் மரத்தடியில் மாணவர்களை அமரச்செய்து பாடம் நடத்தும் அவலங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது?


நெல்லை மாவட்டத்தில் நதியின் ஒரு கரையில் இருக்கும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் நதியின் மறுகரைக்கு செல்ல பாலம் இல்லாமல், தினமும் தண்ணீரில் நீந்தி நதியை கடந்து அக்கரையை அடைந்து சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட இப்படி நதியை கடந்து சென்றுதான் தங்கள் படிப்பையே தொடர வேண்டிய அவலமும் இதே தமிழகத்தில் தான் நடக்கின்றது.

அங்கு ஒரு பாலம் கட்ட கட்டாயம் 4.9 கோடி செலவு ஆகாது. அங்கு பாலம் கட்டினீர்களேயானால் எத்தனையோ மாணவர்கள் சிரமமின்றி தங்கள் கல்வியை தொடர்வார்கள்.

ஆனால் இவர் கதை வசனம் எழுதிய பாசக்கிளிகள் படத்திற்கும் சேர்த்து 70 தரமான படங்களுக்கு 7 லட்சம் உதவித்தொகை அளிக்கின்றார். இதில் தரமான படம் என்பதை எந்த அளவுகோலை வைத்து தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. இங்கிலிஷ்காரன், வெற்றிவேல் சக்திவேல், 6.2" போன்ற படங்கள் எல்லாம் அந்த தரமான படங்களின் பட்டியலில் இடம்பெற்று 7 லட்சம் பெறுகின்றன.

பட்டியலில் உள்ள பல படங்களின் பெயர்கள் கேள்விப்படமாதிரி கூட இல்லை என்பது தனிக்கதை.

அதிமுக‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌டாத‌ ச‌லுகைக‌ளையும் சேர்த்து இவ‌ர் அறிவிக்கின்றார். இப்போது அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ 70 ப‌ட‌ங்க‌ளும் 2005 ம‌ற்றும் 2006 ஆண்டுகளில் வெளியான‌வை. அப்போ இதே போல் 2007ல் வெளியான‌ 45 ப‌ட‌ங்க‌ளுக்கு வேறு த‌ர‌ப்போகின்றீர்க‌ளா?

ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் இருக்கும் போது, எப்படி மக்களின் வரிப்பணத்தை ஒரு துறைக்கும் மட்டும் வாரி இறைக்க ம‌ன‌ம் வ‌ருகின்ற‌து?

என்ன‌தான் திரைத்துறையில் இருந்து வந்திருந்தாலும், ஒட்டுமொத்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கும் இவர்தான் முத‌ல்வ‌ர் என்ப‌தை நம் முதல்வருக்கு யாராவ‌து அடிக்க‌டி நினைவூட்ட‌ வேண்டுமா என்ன‌ ? Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க